பத்திரிகையாளன் வாழும் காலத்தில் பாராட்டப்படுவதில்லையென்றும், மறைவின் போது பேசப்படுவதில்லை என்ற ஆதங்கம் பத்திரிகை உலகில் நிலவிவருகின்றது. யாழ்ப்பாணத்தில், பல பத்திரிகையாளர்கள் பணியாற்றி வந்த போதிலும், அவர்களது மறைவின் பின் நினைவு கூர ப்படுவதில்லை. வீரகேசரி செல்லத்துரை, லேக்கவுஸ் கதிர வேலு, புஸ்பரட்ணம், செல்வராசா, சற்றடே ரிவியு காமினி நவரத்தின, ஏ.ஜே.கனகரட்ண போன்ற பலர் இன்று மறக்கப்பட்டவர்களாகவுள்ளனர். பி.பி.ஸி. செய்தியாளர் மயில் வாகனம் நிமலராஜன் மட்டும் சற்று விதிவிலக்கானவர், அவரது நண்பர்களால் மட்டும் ஏதோ ஒரு வகையில் நினைவு கூரப்பட்டு வருகின்றார்.
இவைகளையெல்லாம் மாற்றும் வகையில், சிங்கள மக்கள் புத்தர் பெருமான் இலங்கைக்கு வருகை தந்த நாளாக கடந்த புதன்கிழமை நோன்மதிதினமாக அனுஷ்டிக்கும் நேரத்தில் யாழ்ப்பாண மண்ணில் மானுடம் நேசித்த சிங்கள பத்திரிகையாளர் அஜித் சமரநாயக்கவை நினைவு கூர்ந்து அஞ்சலி நிகழ்வொன்று இடம் பெற்றது. யாழ். மார்க்சீய நண்பர்கள் ஒன்றியம் இவ் நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்தியுள்ளது. இந்நிகழ்வானது யாழ்ப்பாண வரலாற்றில், சிங்கள பத்திரிகையாளர் ஒருவருக்கு நடைபெற்ற முதல் அஞ்சலி நிகழ்வாகும்.
யாழ்ப்பாணத்தில் செயல்பட்டுவரும் ஊடகவியலாளர்கள் சங்கங்கள் எல்லாம், சிங்களப் பத்திரிகையாளர்கள் கொல்லப்படும் போது, தமது கண்டனங்களை வெளியிட்டு தம்மை அடையாளப்படுத்தி விட்டு மௌனித்தவையாகவே இருந்து வருகின்றன. யாழ்ப்பாண ஊடகவியலாளர்களை சிங்கள ஊடகவியலாளர் அமைப்புகள் தென் பகுதிக்கு அழைத்து விருந்தோம்பி அவர்களது கஷ்ட நஷ்டங்களை அறிந்து முடிந்தளவு தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றன. குறிப்பாக இன முரண்பாடு காரணமாக தமிழ் பிரதேசங்களில் போர் நடைபெற்ற காரணத்தைச் சாட்டாக வைத்து யாழ்ப்பாண ஊடகவியலாளர்களுக்கு தகவல் திணைக்களம் அடையாள அட்டைகளை வழங்க மறுத்து வந்த போது, அவர்கள் "பயங்கரவாதிகள்" அல்ல அவர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டுமென வலியுறுத்தி பெற்றுக் கொடுத்தவர்கள் அவர்கள். தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படும் போதும் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்படும் போதும், கைது செய்யப்படும் போது உரத்த குரலில் போராட்டம் நடாத்துபவர்கள் சிங்கள ஊடகவியலாளர்கள் தான் அவர்கள் இன, மத வேறுபாடின்றி சகலரையும் ஊடகவியலாளர் சமூகமாகவே கருதி வருகின்றனர்.
இவற்றுக்கெல்லாம் அஜித் சமரநாயக்க போன்ற மனித நேயமிக்க சிங்கள ஊடகவியலாளர்கள் தான் காரணமாகவிருந்துள்ளனர். அவருடைய கடந்த கால பத்திரிகைத் துறை வாழ்க்கையை ஒப்பு நோக்கும் போது, அவர் உழைக்கும் தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காகவே அவரது சிந்தனை அமைந்திருப்பதைக் காணலாம். அவரது சிந்தனைகள் எல்லாம், மானுடத்தின் கொண்ட பற்றுதலால் ஏற்பட்ட அவரது கனவுகள் எனலாம்,
அவர் ஒருகலைப்பட்டதாரியாக இருந்த போதும், மார்க்சீய சிந்தனைகளால் கவரப்பட்டு அக்கொள்கையில் இருந்து விலகாமல், யாருக்கும் விலை போகாது பிறரால் விமர்சிக்கப்படாமல், மற்றவர்களது மனம் நோகாமல், புதிய புதிய சிந்தனைகள் மூலம் மனித நேயத்தை வலுவூட்டுவதாக அவர் தமது எழுத்தைக் கையாண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
வகுப்புவாதக கருத்துகளுக்கு முதலிடம் கொடுக்கும் சிலோன் ஒப்சேவர் பத்திரிகையில் பணியாற்றிய போதும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இன வாத சிந்தனையைத் தோற்றுவிக்காமல்,ஆழமான கட்டுரைகளை எழுதி வந்தார். ஒரு பத்திரிகையாளனுக்கு சகல துறைகளிலும் பரந்த அறிவு இருக்க வேண்டுமென்பது போல், கலை, கலாசாரம், சமய உணர்வு, நடுநிலையான அரசியல், சினிமா போன்ற எல்லாத்துறைகளிலும் ஆளுமையை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
அவரது சித்தாந்தம், இன, மத, மொழிகளைக் கடந்ததாக இருந்ததால் தமிழ் பெண் ஒருவரை காதலித்து மணந்து கொண்டார். அவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி திடீர் சுகவீனமுற்றிருந்த வேளை, தனது 52 வயதில் காலமானார். அவரது பிரிவுச் செய்தி கேட்டு அவர் நேசித்த மானுடம் கதறி அழுதது. உயர்ந்த பண்பாட்டை வளர்த்துக் கொண்ட மானுடம் தன்னில் ஒருவர் இறந்து போவதை மனப் பூர்வமாக அனுமதிப்பதில்லை. யாழ்ப்பாணத்தில் அவரைத் தெரிந்தவர்கள். அன்பாகப் பழகியவர்கள் அவரது எழுத்தால் கவரப்பட்டவர்கள், உயிருக்குயிரான நண்பர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
அவரை நினைத்து யாழ்ப்பாணத்தில் அஞ்சலிக் கூட்டம் நடாத்தியவர்கள் அவரது பெருமையை, எளிமையான வாழ்க்கை முறைகளை, பண்புகளை எல்லாம் புகழ்ந்து பேசினார்கள். இந் நிகழ்வுக்கு யாழ்ப்பாணக் கல்வி வலய பிரதம உத்தியோகஸ்தர் ஏ.ஜோய்ஜ் தலைமை தாங்கினார். மறைந்த பத்திரிகையாளர் அஜித் சமரநாயக்கவுடன் பழகும் வாய்ப்புக்குறைவாகவே இருந்து வந்துள்ளது. அவரது ஊடகப் பார்வை சிறப்பானது. அவர் வரித்துக் கட்டிக் கொண்ட இடது சாரிக் கொள்கைகளை தனது எழுத்துகளில் ஒரு போதும் சோரம் போக அனுமதிக்கவில்லை.
இனவாத சகதிக்குள் ஒரு போதும் தனது பேனாவைப் பயன்படுத்தாதவர் சுருங்கச் சொன்னால் மானுடம் போற்றும் ஒரு ஊடகவியலாளராகவே இறக்கும் வரை செயல்பட்டு வந்துள்ளார். அவரது எழுத்துகளில் சமதர்ம நோக்கே இருந்துவந்துள்ளது. நான் அவரது எழுத்துகளை நேசிப்பவன். தேடித் தேடி அவரது கட்டுரைகளைப் படிப்பேன். இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் தன்னை அழித்துக் கொண்டு மானுடத்துக்காக சேவையாற்றியுள்ளார். இன்றைக்கு எமது தோழர்கள் எம்மை விட்டுப் பிரிந்தாலும், அழகிய நடையில் மறைந்தோரது மான்புகளை நினைவு கூர்ந்து வந்த செயல் வீரராக இருந்தார். அவரது மறைவு பெரும் வெற்றிடத்தை ஆங்கிலப் பத்திரிகையாளர்களுள் உருவாக்கியுள்ளது. நல்லவர்கள் மறைவதும், அவர்களை நினைவு கூருவதும் கால மாற்றத்தின் கட்டாயம் என்றார்.
"அஜித் சமரநாயக்கவின் மாண்பு" என்ற பொருளில் உரையாற்றிய அவரது பாலிய நண்பனும், இலங்கை வங்கியாளர் சங்க யாழ். மாவட்ட மேலாளர் எஸ்.சிவபாலன் உரையாற்றுகையில், எனது இனிய நண்பனை நான் இழுந்துள்ளேன். அவருடன் பேசிக் கொண்டிருந்தால் அது உரையாடலாக இருக்காது. கற்றவர்களுக்கு உள்ள பெரும் பண்பு போல் தனக்குத் தெரிந்தவற்றை, அறிந்தவற்றை, தனது புலமையை எனக்கு பெற்றதாயைப் போல் ஊட்டிவிடும் பெரும் பண்பாளர், நான் அவரிடம் கற்றது அதிகம், அவரிடம் காணப்பட்ட பண்பு தனது அறிவை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்வதாகும்.
சிறுவயதில் பத்திரிகை உலகில் பிரவேசித்து ஆழ்ந்த புலமையால் அத்துறையில் களம் பல கண்டவர். அவரது எழுத்துகள் எல்லாம், மனித நேயத்துக்கான சுய தணிக்கையாக பெரியோரும் ஏற்றுக் கொள்ளும் நவீன சிந்தனை போக்குடையதாகும், இலங்கையில் சுயமாக மொழித் திட்டம் வலுவடைந்த போதுதான் ஆங்கில மொழியிலே தனது எழுத்துகளுக்கு உரமூட்டி உயர்ந்து நின்றார். பேச்சிலே எப்போதும் நகைச்சுவை கலந்திருக்கும் இது கல் நெஞ்சக்காரரையும் ஒரு கணம் சிந்திக்க வைக்கும். அவரது புலமை பாராளுமன்ற செய்திகளை, கட்டுரைகளை பின் ஊட்டலாக எழுதி வெளிவருகின்றபோது வெளிப்பட்டு நிற்கும். எப்போதும் இனங்களுக்கிடையில் ஒற்றுமை இருக்க வேண்டுமென்று விரும்பினார். அவரது சிந்தனைகள் சமதர்ம சமுதாயத்தை, சுரண்டலற்ற வர்க்கபேதமில்லாத மனித குலத்தைக் காண வேண்டுமென ஓயாது எழுதி வந்தார். அவர் கைபடாத துறை எவையென அடையாளம் காண முடியாது. தேச நலனில் அக்கறை கொண்டு உழைத்த புலமைசார் ஆங்கிலப் பத்திரிகையாளனை இழந்துள்ளோம். என்னை பொறுத்தவரையில் என் ஆத்ம நண்பனை இழந்துள்ளேன். அவரிடம் இருந்து கற்றது அதிகம், அவரிடம்வித்தகச் செருக்கு எப்போதும் இருந்ததில்லை. பிறர் வாழ தன்னை அழித்துக் கொண்டவராக அஜித் சமரநாயக்க இருந்துள்ளதை அவரது வாழ்க்கை தெளிவுபடுத்தும். எம்முடைய மனித நேயமிக்க சிங்கள நண்பனை நாமெல்லாம் இழந்து விட்டோம். அவர் யாழ்ப்பாண மக்களின் அவலங்களுக்காக கவலை கொண்டவராகவே இருந்து வந்தார். அவரது இறுதி நாட்களில் மனதால் கூற முடியாத வேதனையுடன் காணப்பட்டார் என அவரது சகோதரி தெரிவித்து கவலை வெளியிட்டிருந்தார். நல்லவர்களை இறைவன் சோதிப்பது உண்மையானால் அஜித் சமரநாயக்கவின் மரணம் மன வேதனையாகத் தான் இருக்கும். நல்லாத்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதைவிட வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை" என்றார். தினக்குரல் பத்திரிகை சார்பில் உரையாற்றிய ஐயா சச்சிதானந்தம் தமது உரையில் கூறியதாவது; "நான் கொழும்பில் இடம் பெற்ற பத்திரிகையாளர் பயிற்சி நெறியின் போது, அஜித் சமரநாயக்கவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. மற்றவர்களுடன் பழகுவதற்கு இனியவராக தனது அறிவாற்றலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் அவருக்கு இருந்த ஆர்வம் என்னைப் பிரமிக்க வைத்தது. தன்னை ஒரு நண்பனாகவே எனக்கு அடையாளப்படுத்தினார். அவரிடமிருந்து சில நாட்களில் நான் கற்றது அதிகம். அவர் எனக்கு முதலில் கூறியது, "செய்தி என்பது வாசகன் அறிய முடியாத தொகுப்பு" எனலாம் என்றார்.
இவரது எழுத்துகளால் கவரப்பட்ட உபாலி விஜயவர்தனா `ஐலன்ட்' பத்திரிகையில் உயர்ஸ்தானத்தில் சேவையாற்ற அழைக்கப்பட்ட போது , அதனை ஏற்று பத்து ஆண்டுகள் பணியாற்றினார். ஏதோ முரண்பாடு காரணமாக அங்கிருந்து விலகி மீண்டும் ஏரிக்கரை பத்திரிகை நிறுவனத்தின் ஆங்கில வெளியீடுகளுக்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். அவரது பேனா முனைகள் என்றைக்கும் மற்றவர்களை தாக்கும் கருத்துக்கு இடம் கொடாமல் உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்கு அர்ப்பணிப்புடன் எழுதப்பட்டவையாக இருந்தன.
எளிமையாக வாழ்ந்த தன்னடக்கமுள்ள சிறந்த சிந்தனை சிற்பியாகவும் அவரை பெருமைப்படுத்த முடியும். தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படும் போதும், கைது செய்யப்படும் போதும், தாக்கப்படும் போதும் ஒரு போராட்ட வீரனைப் போல எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொள்வார். அஜித் சமரநாயக்கவின் கொள்கை அது.
இன்றைக்கு தமிழ் மண் நிமிர்ந்து நிற்கின்றது. சிங்கள ஊடகவியலாளரின் பண்புகளை, மனித நேயத்தை அவரது ஆளுமையை மனிதகூடலில் பேசுவது ஆரோக்கியமான சூழ்நிலை, எங்கெங்கு மனித நேயம் இருக்கின்றதோ அவரை அஞ்சலிப்பது எமது கடமை. ஒரு சிறந்த பத்திரிகையாளராக ஆங்கிலப் பத்திரிகையாளனை வாழ வேண்டிய வயதில் இழந்துள்ளோம், வெண்தாடியுடன் எம்மோடு உறவாடி மகிழ்ந்த காலம் அஸ்தமித்து விட்டது. அஜித் சமரநாயக்க நினைவு கோரப்படவேண்டிய ஊடக நண்பர். பலருக்கு அவர் தோழர் அஜித், மார்க்சீயத்தில் உறைந்து போனவர்களிடம் மனித நேயத்தைக் காணலாம் என்பதை அஜித் சமரநாயக்க எம்மோடு உறவாடி சொல்லாமலே எம்மைப் பிரிந்து சென்றுள்ளார். அவரது பிரிவு பத்திரிகை உலகில் ஓர் வெற்றிடம்" என்றும் கூறினார்.
Sunday, January 7, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கட்டுரையைப் பதிவிட்டமைக்கு நன்றி.
வருகைக்கு நன்றி வசந்தன்
Post a Comment