Friday, January 19, 2007

13.உண்மையை ஏற்போம்!!


அவர் ஒரு தொழிலதிபர். மாலை நேரமானால் தவறாமல் ஆன்மீக லெக்ஷர்களுக்குச் செல்வார். தொழிலில் இலாபம் குவிந்தால், சந்தோஷத்தில் எகிறிக் குதிக்கமாட்டார். அதேபோல், நஷ்டம் வரும்போது தலையில் துண்டுபோட்டு மூலையில் முடங்கி விடவும் மாட்டார். மொத்தத்தில் எந்த நேரத்திலும் எவ்விதச் சூழ்நிலையிலும் நிதானம் தவறாதவர். விருப்பு- வெறுப்பற்ற வேதாந்தி என்றே கூறலாம்.
ஒரு கப்பலின் வருகைகாகக் காத்திருந்தார். அந்தத் தொழிலதிபர். கப்பலில் அவருடைய மனைவியும் குழந்தையும் வருகிறார்கள். நிறையச் சொத்துகளும் வருகின்றன.
ஒருநாள் அவர் வீட்டில் கோலிங்பெல் ஒலிக்கிறது. கதவைத் திறந்தார் தொழிலதிபர். வெளியே மூச்சிரைக்க ஒரு ஆள். அவருடைய உதவியாளர்.
"சார், உங்களுடைய கப்பல் மூழ்கிவிட்டது.." என்கிறன் அவன்.
`வாட்...?" தொழிலதிபரின் குரலில் பதற்றம் கலந்த அதிர்ச்சி.
"உங்களுடைய கப்பல் மூழ்கிவிட்டது சார்."
"ஸோ வாட்?" இப்போது அவர் குரலில் பதற்றமும் அதிர்ச்சியும் குறைந்து, நிதானமும் அமைதியும் தலை தூக்குகிறது.
"சார், உங்க சொத்துகளையெல்லாம் இழந்துட்டீங்க..." என்கிறார் உதவியாளர் தொடர்ந்து.
"வாட்...?" தொழிலதிபரிடம் மறுபடியும் லேசான பதற்றம்.
"இப்ப நீங்க ஓட்டாண்டியா ஆயிட்டீங்க.."
"ஸோ வாட்...?" - நிதானம்.
"சார்... உங்க மனைவி, குழந்தைகளையும் கூட இழந்துட்டீங்க..."
"வாட்...?"
"நீங்க அநாதை ஆயீட்டீங்கன்னு சொல்றேன்..."
"ஸோ வாட்"
தொழிலதிபர் ஒவ்வொரு முறையும் முதலில் "என்ன...?" என்று கேட்பதும், உடனே `அதனால் என்ன..?' என்று சொல்வதும் ஒன்றுக்கொன்று முரண்படுவதாகத் தோன்றும்.
சொல்லப்பட்ட தகவல் சரியாக காதில் விழாத காரணத்தால்தான் தொழிலதிபர் முதலில் `என்ன...?' என்று கேட்பதாக நினைக்க வேண்டாம் கப்பல் மூழ்கிவிட்டது என்பதில் ஆரம்பித்து, உதவியாளர் கூறியது ஒவ்வொன்றும் அவருக்குத் தெளிவாகவே புரிந்து விடுகிறது. இருப்பினும், அவர் `என்ன...?' என்று பதற்றத்துடன் கேட்க என்ன காரணம்...?
உண்மை நிலையை ஏற்றுக்கொள்ளாத உடனடி ரெஸ்பான்ஸ் இது!
எந்த ஒரு சாதாரண நபரும் இப்படி ஒரு சூழ்நிலையில் இடிந்துபோய் உட்கார்ந்து விடுவார். எல்லாவற்றையும் இழந்துவிட்ட சோகம், அவருடைய முகத்தை அப்பிக் கொள்ளும். மனைவி, குழந்தைகளைப் பறிகொடுத்து விட்ட தவிப்பும் சொத்துகளை இழந்துவிட்ட துயரமும் அவரை வாட்டி எடுக்கும். எல்லாவற்றுக்கும் காரணம் கப்பல் மூழ்கிவிட்டது என்கிற உண்மையை மனம் ஏற்க மறுப்பதுதான்.
தொழிலதிபர் என்றால் பணம் பண்ணுவதில் மட்டுமே குறியாக இருக்க வேண்டும் என்று அவசியமல்ல.... யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளும் மனப்பக்குவம் அவருக்கு இருந்துவிட்டால்... வாழ்க்கையில் `ஸோ வாட்' அணுகுமுறை அவருக்கு எளிதாகிவிடுகிறது.
உண்மையை ஒப்புக்கொள்ளாமல் இருப்பதாலோ அல்லது பிடிவாதமாக ஒப்புக்கொள்ள மறுப்பதாலோ எந்தப் பயனும் கிடையாது. சோகமும் விரக்தியும் ஏமாற்றமும்தான் உங்களைச் சுற்றி வளைக்கும். நம்பிக்கையின்மை உங்களை ஆக்கிரமிப்புச் செய்யும். ஒட்டுமொத்த சமூகமும் உங்களைத் தேடி வந்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பீகள். வருடங்கள் உருண்டோடிக் கொண்டிருக்கும். மீண்டு வர முடியாமல் மூலையில் முடங்கிக் கிடப்பீர்கள்.
சூழ்நிலையை எதிர்கொள்ளும் விதத்தில் `என்ன...?', `அதனால் என்ன...?' என்ற இரண்டு வகைக்கும் இடையே நீண்ட இடைவெளி உண்டு. இந்த இடைவெளியை ஒவ்வொருவரும் குறைக்க வேண்டும். இது சிலருக்கு நூறு வருடங்கள் ஆகலாம். வேறு சிலருக்கு இருபது வருடங்கள். பலருக்கு, இந்தப் பிறவியே கூடப் போதாது. ஆனால், நம்முடைய தொழிலதிபர் கம் வேதாந்தி சில விநாடிகளுக்குள் அந்த இடைவெளியைக் காணாமல் போக்கிவிட்டார்.
உங்கள் முயற்சியாலும் மேற்கொள்ளும் நடவடிக்கையாலும் ஒரு சம்பவத்தைத் தடுத்து நிறுத்தவோ, மாற்றியமைக்கவோ முடியுமானால் கவலையில்லை. ஆனால், ஒரு கப்பல் மூழ்கிவிடுவதை உங்களால் தடுக்க முடியுமா? புயல், வெள்ளம் ஏற்படுத்தும் சேதாரத்தை உங்களால் தவிர்க்கத்தான் இயலுமா? ஆகவே, உண்மையை ஏற்பதுதான் ஒரே வழி.
இப்படிச் சீர்ப்படுத்த முடியாத சம்பவங்களைப் பற்றி பகவத்கீதையில் கிருஷ்ண பகவான் குறிப்பிடும்போது `அர்ஜுனா.. உன்னால் மாற்ற முடியாததைப் பற்றி நீ வருந்துவது சரியல்ல' என்கிறார்.
நம்மால் மாற்ற முடியாத எதையும் தாங்கிக்கொள்ளும் சக்தி ஒருவருக்கு இருக்க வேண்டியது அவசியம். அதற்கு எந்தவிதச் சூழ்நிலையிலும் உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு மனம் பக்குவப்பட்டிருக்க வேண்டும்.
வாழ்க்கையில் புரிந்து கொள்வதற்காக மட்டுமே சில விடயங்கள் உள்ளன. புரிந்துகொண்ட பிறகு, அதற்கேற்ப செயல்பட வேண்டிய விடயங்களும் உண்டு.
உதாரணத்துக்கு பகவத்கீதையில் யுத்த களத்தில், அர்ஜுனன் பல விடயங்களைக் கேட்டுத் தெரிந்து, மனம் பக்குவப்பட்டு உறுதியுடன் செயலிலும் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லி முடித்துவிட்டு, "இனி உன் இஷ்டப்படி செய்.." என்று முடிவை அர்ஜுனனிடமே விட்டு விடுகிறார் கிருஷ்ணபகவான். காரணம், அர்ஜுனன் தவறாக எதையும் செய்துவிட மாட்டான் என்கிற நம்பிக்கை! குழப்பத்தினால் உருக்குலைந்துவிடும் அபாயம் நீங்கி விட்டதை அவனுடைய பார்வையே உணர்த்திவிடுகிறது.
"போர்க்களத்தில் எதிர்த்தரப்பில் நின்று கொண்டிருப்பவர்கள் அத்தனை பேரும் என்னைச் சார்ந்தவர்கள். அவர்களுடன் நான் எப்படிப் போரிடுவது...? தர்மத்தைக் காக்க வேண்டும் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால், என் சொந்தபந்தங்களே அதர்மத்துக்குத் துணை நிற்கும்போது நான் அவர்களுடன் எப்படிச் சண்டையிட முடியும்?" என்று ஆரம்பத்தில் கேட்டவன்தான் அர்ஜுனன். கிருஷ்ணர் அவனுக்குப் பாடம் புகட்டியதன் விளைவு அவன் எல்லா உண்மைகளையும் புரிந்து கொண்டான். காண்டீபத்தைக் கையிலெடுத்தான். போரிடத் தொடங்கினான்.

No comments: