தமிழ் மக்களின் தனிப்பெரும் திருவிழா பொங்கல். சமயச்சார்பு இல்லாத பெருவிழா பொங்கல். எந்தவிதமான புராணக்கதைகள் கட்டாத, இனத்தின் பண்பாட்டு வீரவிழா தமிழர் திருநாள். வேறெல்லா விழாக்களும் போகும் இடத்திற்காக, பொங்கல் புதுநாள் இருக்கும் இடத்திற்காக... மனைகள் தோறும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிடும் பொங்கல் புதுநாள். பேச்சில் ஓர் இசை கலந்திடும் நாள் இத்திருநாள். உலகில் பற்பல விழாக்கள் நடத்தப்படினும் , தமிழர்களின் பொங்கற்புது நாள் போன்றதோர் பொன்விழா நிச்சயம் இல்லை என்கின்றார் பேரறிஞர் அண்ணா. நாட்டில் கோலாகல விழாக்கள் பற்பல உண்டு. கேளிக்கைகள் ,மதுபான விருந்துகள் நடனக்களியாட்டங்கள் மிகுதியாக நடைபெறுகின்றதைக் காண்கின்றோம். தமிழர்களின் இந்த பொங்கல் விழா ஆர்ப்பரிப்பின்றி அகமகிழ்ச்சியுடன், போலிப்பூச்சுகளின்றி புதியதோர் பொலிவுடன் வீட்டில் உள்ள அனைவரும் கலந்துரையாடி மகிழ்ந்திருக்கும் பொங்கற் புதுநாளுக்கு ஒப்பான விழா எங்குமில்லை.
வீடுகள் எங்கும் எழுகிறதே... புதியவரும், மூதாட்டியும், இளைஞரும், இள நங்கையரும், சிறுமியரும் கலந்து எழுப்பும் பொங்கலோ பொங்லென்ற இசை எங்கும் இல்லை. இருந்திடத்தக்க விதமான சமூக அமைப்பே இல்லை. இதனால் தான் தமிழர் திருநாள் என்றனர்.
தை முதல் திருவள்ளுவர் ஆண்டு பிறக்கிறது. பொங்கல் என்பதும் தமிழர்களின் புத்தாண்டாகவும் மலர்கின்றது. தமிழர் வாழ்வில் வரும் வீரத்திருநாளாகவும் மிளிர்கின்றது. சிந்திய பனியும், உழவரைத் தீண்டிய குளிரும், உழைப்பின் உறுதியும், களைப்பின் வெகுமதியும், எண்ணிய ஏற்றமும், திண்ணிய நெஞ்சமும், விளைவின் வளமும், தாங்கிய நிலையில் வரும் நீல வானம் தமிழர்களை ஒன்று சேர்க்க வரும் திங்களாகத் திகழும். எழுத்தும் பேச்சும் வீரத்திருநாளில் தமிழே எனும் மூச்சாக பொங்கல் பொங்கும். உழைப்பில் தோன்றும் மகிழ்வில் மங்களம் சேர்க்கும். எங்கோ ஏகி விலகி நிற்கும் செங்கதிரோன் எண்கணிப்பில் விஞ்ஞானம் தன்னிலும் ஞானவியல் படைத்த பங்கு வென்றிடும்.
ஆடி முதல் தை வரைக்கும் அயாரது வயல் வெளியில் ஓடி உழைத்த மக்கள் ஓய்வு பெறும் முதல்நாள் கணிப்பும், உழவுக்கு துணை போன அனைத்துக்கும் நன்றி செலுத்தும் பண்பாடும் உண்டு. இங்குதான் பொங்கல் விழா தொடர்பான அர்த்தங்கள் அல்லது தத்துவங்கள் கணிசமான முக்கியத்துவம் பெறக் காண்கிறோம். பொங்கல் விழாவை நாட்டின் காலநிலையோடு தொடர்புபடுத்திய முக்கியத்துவம் கொடுக்கும் தன்மை தமிழனின் மேன்மை நிலையை காட்டுவதாயும் அவதானிக்கலாம். ஆடி, ஆவணி, புரட்டாதி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களை உள்ளடக்கிய ஆறு மாதங்களிலும் தெற்கு நோக்கி இருந்த சூரியன் தை மாதம் முதலாம் திகதியிலேயே வடக்கு நோக்கித் திரும்பும்.
தை மாதத்திற்கு முற்பட்ட ஆறு மாத காலத்தையும் தட்சிணாயனம் என்பார்கள். அதாவது சூரியன் தெற்கு நோக்கிச் செல்வதால் இந்தக் காலப்பகுதியில் பல இயற்கைச் சீரழிவுகள் ஏற்படும். கடைசி மாதமான மார்கழி மாதத்தைப் பீடை பிடித்த காலமாகவே நம்மவர் கருதுவர். மார்கழி மாதத்து கடல்கோள் அனர்த்த அதிர்ச்சி என்று மறையும்?
மார்கழி மாதத்தைச் சூன்ய மாதம் என்றும் சொல்வார்கள். இதனால் இந்த மாதத்தில் விசேட கருமங்களை செய்வதை நம் முன்னோர் நிறுத்தினர். தை முதற் திகதியிலேயே சூரியன் தெற்கே இருந்து வடக்கு நோக்கித் திரும்பும். இக்காலத்தை உத்தராயண காலம் எனக் கணித்தனர். பீடைகள் நிறைந்த மார்கழி நீங்கி உத்தராயணம் தோன்றுவதை எண்ணிய தமிழர் இக்காலநிலை அமைப்புக்கு உட்பட்டதால் பொங்கிப்படைத்து கொண்டாடினர். சூரியன் வடக்கு நோக்கித் திரும்பும் முதல் நாளிலேயே தம்மை பிடித்திருந்த பீடைகள் நீங்கும் என்று தமிழர் பூரணமாக நம்பிக்கை வைத்துள்ளனர்.
சூரியனின் வடக்கு நோக்கிய பார்வையும் இந்த நம்பிக்கைக்கு ஒரு காரணமாய் அமைகின்றது. இத்தகைய நாளை திருநாளாகப் பெருநாளாக உண்மைப் பொங்கல் விழாவாக எடுத்தனர். தை மாதம் முதல்நாளை புண்ணிய காலமாக கருதியதோடு நில்லாது அதற்கு மேலாக சூரியனைக் குறித்து வழிபடும் சிறப்பு நாளாகவும் கொண்டுள்ளனர். தை முதல் நாள் தமிழர்களாகிய எல்லோருக்கும் விசேடமான நாள் என்பதால் இந்தப் பொன்நாள் தமிழர் திருநாள் என்றானது. உத்தராயண காலத்தோடு தொடர்பான இந்தப் பொங்கல் விழா இந்தியாவில் நான்கு நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுவதாக உள்ளது. முதல் நாள் போகிப்பண்டிகை, இரண்டாம் நாள் பொங்கல் திருவிழா, மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல், நான்காம் நாள் காணும் பொங்கல். இந்த நான்கு நாட்களும் இந்தியாவில் சிறப்புப்பெறும் நாளாகத் திகழ்கின்றது. தமிழீழத்தில் இந்த நான்கு நாள் சிறப்பு இடம்பெறுவதில்லை.
ஈழத்தில் முக்கியமாக தை முதல் திகதியின் பொங்கலே விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. தை மாத முதல்நாள் பொங்கலுக்கான ஆயத்தங்கள் சிறப்பாக இடம்பெறும். இத்திருநாள் சூரியனுடன் தொடர்புபடுத்தப்பட்டிருந்தது. பயிர் பச்சைகள் செழிக்க சூரிய சக்தி இன்றி அமையாதது. சூரியனால் அதிக பயனைப் பெற்ற உழவர்கள் தாம் பாடுபட்டு விளைவித்த அத்தனை பொருட்களையும் பொங்கிப்படைத்து வழிபடுவார்கள். சூரியனால் மழை பெய்கின்றது, பூமி விளைகின்றது. மழை மூலமே நாடு, நகர் செழிப்படைந்து மக்கள் இன்பபோகங்களை நுகர்ந்து வாழக் காரணமாகியது. இந்தப் பொங்கல் சிறப்பின் மகிமைதனை முற்றத்துப் பொங்கலில் நாம் காண்போம்.
காலை உதயத்தைத் தரிசிக்க மக்கள் வண்டுகளாய் கூடுவர். புத்தடுப்பு வைக்கப்படும். முற்றம் கோலமிடப்பட்டு காலமிடும் செழிப்பாய் காணப்படும். பொங்கல்காரர் வருவார், மகிழ்ச்சிக்களிப்பில் ஆடுவார். குடும்பம் புத்தாடை கட்டி அழகு காட்ட, முதல் நாள் ஆச்சி களிமண்ணில் பிடித்த புது அடுப்பு, முனை உடையாத செங்கல், கழுவிக்கோலம்போட்டு பொங்கல்காரர் செங்கதிரோன் எழும் திசை காண வைப்பர். புதுப்பானை, மஞ்சள், இஞ்சி, மாவிலை கட்டி கோலமிடப்பட்டிருக்கும் புது அடுப்பில் புது நெருப்பு மூட்டியதும் புதிய பானை கொஞ்சம் சரிந்திருக்க வைப்பார். அப்போதுதான் கிழக்கு முகமாக பொங்கல் பொங்கும். பொங்கல்காரர் புத்தரிசி கொள்ள அறுகம் புல்லும் போடுவார். அங்கால கரும்பு சுவைக்க நாவுறும் பொங்கல் பொங்கப்படும்.
முற்றத்தின் வாசம் தமிழ் மணமாய் எழும். உற்றதுணை சுற்றமோடு இசை முழங்கும் பொங்கலோ பொங்கல். எங்கள் வாழ்வின் திங்களே, பொங்கலோ பொங்கல். சீனவெடி, ஈக்கில் வானம், மூலை வெடி, கடலைப்பட்டாசு என முழங்கும். காளை மாட்டுப்பந்தயங்கள், சேவல் சண்டைகள் ஆங்காங்கு போட்டி ஆட்டமாய் நடக்கும். முற்றவெளியெங்கும் கலை நிகழ்வுகள் களைகட்டும். அன்று புன்னகைக்குப் பொட்டுவைத்து இன்பமுற்ற தமிழ்த்திருநாள். சாதி மதமற்ற சந்தோஷத்திருநாள். கத்தோலிக்க ஆலய முற்றத்திலும் ஆராதனை வழிபாட்டிலும் அகமகிழ்ந்து வணங்கிய புண்ணிய நாள். பிரசங்கத்தில் மதம் வேறாகலாம். ஆனால், சாதி ஒன்றுதான். மதம் என்பது மதி. அதாவது நமது புத்திக்கேற்ற கொள்கையைச் சேர்ந்தது சாதி. நாமெல்லோரும் தமிழ்ச்சாதி.
"நமது பக்திக்கேற்றதும், பண்பாட்டிற்குரியதும், ஒற்றுமையின் வலியதுமான தமிழர் திருநாள்". இப்படியாக பாதிரியார் யாழ்ப்பாணத்துக் கோயிலில் பிரசங்கம் பொழிந்ததைக் கேட்ட நாங்கள் எங்கள் கவலைகள், துன்பங்கள், பசி பட்டினி அறியாத மதச்சார்பற்ற அற்புதமான திருநாள். எப்படி கூடிக்குலாவி மகிழ்ந்துண்டு வாழ்ந்தனர். எல்லோரும் தத்தமது இயல்புக்கு ஏற்றத்தைப்பிறருக்கு வழக்கி மனித நேயம் காத்தனர் இன்பப் பொங்கல் பொதுவெனும் பூங்காவில் பூத்த மலரென மணந்து மணம் வீசினர். சமத்துவ சகோதரத்துவ சங்கமப்பண்பாட்டின் சிறப்பின் உச்சமே பொங்கல் என விளங்கும். உலகிலோர் விழாக்களில் உயர்வானதாகத்துலங்கும் தமிழர் பொங்கல்.
அன்று எருதுகள், பசுக்கள் பிரதானமாக ஏன் தெய்வமாகக் கூடக் கருதும் வழக்கத்திற்கு முக்கியத்துவம் உண்டு. பசுக்களை செல்வமாகக் கருதிய பண்டைய வரலாறுகள் தெளிவுபடுத்துகின்றன. ஒருவன் வைத்திருக்கும் பசு நிரைகளைக் கொண்டு அவனின் பொருளாதார நிலை கணிக்கப்பட்டதுண்டு. எருதுகள், பசுக்கள் உழவுத் தொழிலுக்கு இன்றியமையாதவை. இவற்றை பூசிக்கும் நாளாக மாட்டுப் பொங்கல் நாள் அமைகின்றது. இப்பொங்கலையும் தமிழன் இவற்றுக்கு ஆற்றும் நன்றிக்கடன் எனக்கொண்டு தன் செய்நன்றி மரபை மேன்மைப்படுத்துகிறான்.
இந்த நாட்களில் பசுக்கள், காளை மாடுகள் தூய்மைப்படுத்தப்பட்டு அலங்கரித்து அவற்றுக்கும் பொங்கல் பொங்கி வழிபடுவர். இப்பொங்லை பட்டிப் பொங்கல், ஆய்வுடையார் பொங்கல் என்றும் கூறுவதுண்டு. காணும் பொங்கல் எனும் நான்காவது விழா இந்தியாவில் சிறப்புப் பெற்றது. இலங்கையில் நடப்பதாக அறிதல் அரிது. வயலிலும் தோட்டங்களிலும் நல்ல விளைச்சல் இருப்பதை வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகளுக்குக் காட்டும் திரு நாளாக இதனைக் குறிப்பிடுவர். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் என்றும் பூப்பொங்கல் என்றும் அழைப்பதுண்டு. இந்தப் பொங்கல் விழாவானது உழவருக்கே உரியது என்ற நிலையைக் கடந்து சிறப்பாக அனைத்து தமிழ் மக்களுக்கும் நம்பிக்கையையும், ஈடுபாட்டையும் தனியே உழவுக்கு துணைபோனவற்றுக்கும், சூரியனுக்கும் நன்றி செலுத்தும் அர்த்தத்தைக் கடந்து ஒற்றுமை, சகோதரத்துவம், பல்லுயிரோம்பல் போன்ற மனிதயம் சார்ந்த தன்மைகளையும் உள்ளடக்கிய பொங்கல், உலகிடை புதிய அர்த்தங்கள் பலவற்றையும் கொடுக்கும் விழா.
இந்தப் பெருவிழாக்கொண்டாட்டத்தின் பரிமாணத்தை அன்று நாம் கண்டது போல் இன்று நாம் காண முடிகிறதா? இந்த மெய்யன் பின் தமிழர் திருநாளை, விருந்தோம்பலில் சிறந்த தமிழன் பொன்னாளை இக் கவிதையில் எப்படி என்று காண்பீர்?
நாங்காய்! விழாவா? நமக்கா? ஏதுக்கடி?
அங்கே பார்! தாய் மண் அழிதல் பார்!
இங்கு வா!
தங்கச்சிலையே ! அடுப்பைத் தகர்த்தெறி!
பொங்கல் விழா வேண்டாம்! போ!
துணி இழந்தாள் ஈழத்தமிழிச்சி ! காமப்
பிணியுடையார் கைப்பட்டுப் பிய்ந்தாள் மணிச்சிட்டே!
இத்தனை கண்டும் விழாவா? நெருப்பினுள்
புத்தாடையைத் தூக்கிப் போடு!
இப்படிப் பாடுகின்றார் உணர்ச்சிக்கவிஞர் காசியானந்தன். எப்படி நாம் பொங்கலை இன்று காண்போம்? உழுதுண்டு வாழும் வயல்வெளியெங்கும் போர்க் காலமாக நிற்கும் காலம். மக்களெல்லாம் பசி பட்டினிச் சாவில் துன்பப்படும் வேளையில் இன்று எப்படி அன்றைய பொங்கல் பொங்கும்? இதைத் தான் நானும் இன்று பாடினேன்.
தேன் வாழ்வைத் தருமின்பத் திங்கள்
செங்கரும்பு தித்திக்கும் பொன் நாள்
செங்கதிரோன் ஒளியின் முற்றத்தில்
எங்கள் குலம் தமிழ் பொங்க வேண்டும்
வீரியமாய் எழுகின்ற புதிய தேசத்தில்
போரில்லாப் பொன்னுலக பூவசந்தம்
யாரெதிர்த்த போதும் பூக்க வேண்டும்
முற்றத்துப் பொங்கல் சிரிக்க வேண்டும்
இனிய தமிழ் நெஞ்சங்கள் சுற்றம் சூழ
தெருவாசல் எங்கும் காதலிசைபாடி
மரகதமயில் ஆடிக்களிக்கும் மகிழ்வில்
ஊடியாடிப் பொங்கல் பொங்க வேண்டும்
தமிழனாக நடமாடும் தேனாட்டினில்
தங்கி நிற்கும் பகையழிந்து தமிழ்வீரன்
தட்டியெழுப்பும் களநாடு சுதந்திரமாய்
தமிழர் திருநாள் தென்றல் தழுவ வேண்டும்
இப்படியாக கவிதைகள் ஆயிரம் இன்று அன்று கண்ட பொங்கல் என்று வரும்?
-மா.கி.கிறிஸ்ரியன்(பிரான்ஸ்)
www.thinakkural.com
Sunday, January 14, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
வாழ்நாளெல்லாம் பிறருக்காக
உழைக்கும் பேசும் தெய்வங்களான
விவசாயிகளின் தியாகத்திருநாளாம்
பொங்கலின் மாண்பை உலகறியச்செய்ய
வேண்டியது நம் அனைவரின் கடமை.
"வெங்கொடுமைச்சாக்காட்டில் விளையாடும் தோள் எங்கள்
வெற்றித்தோள்கள்."
"கங்கையைப்போல் காவிரிபோல்
கருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள்
உள்ளம்."
"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமென்று
சங்கே முழங்கு."
அன்பு நண்பருக்கு உளம்கனிந்த
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
வெல்க ஈழம். வாழ்க தமிழ்.
Post a Comment