இலங்கையில் போக்கிரி மற்றும் ஆழ்வார் திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நேற்று திரைக்கு வந்தன.
படம் பார்த்த நண்பர்கள் போக்கிரி சூப்பர் என்றும் ஆழ்வார் பக்திப் படம் போல அவதாரப் படம் என்றும் சொன்னார்கள்.
ஆனால் நான் இன்னும் பார்க்கவில்லை.
படங்களுக்கான சில முன்னோட்டங்கள்
போக்கிரி:
திரை ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள படங்கள் போக்கிரியும், ஆழ்வாரும்தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தலயும், இளைய தளபதியும் நேருக்கு நேர் மோதும் படம் என்பதாலும், ஆதி படம் விஜய்யை வாரி விட்டது, வரலாறு மூலம் அஜீத் மீண்டும் வீறு கொண்டு எழுந்திருப்பதும் இந்த எதிர்பார்ப்புக்கு முக்கியக் காரணம்.
போக்கிரி படத்தை இயக்கியிருப்பவர் பிரபு தேவா. விஜய்யுடன் அதகளம் பண்ணியிருப்பவர் ஆசின். படம் முழுக்க இளமைத் துள்ளளும், அதிரடி ஆக்ஷனும், மின்னல் ஆட்டமும் நிறைந்து விஜய் ரசிகர்களுக்கு மாபெரும் விருந்து படைக்க காத்திருக்கின்றன.
ஏற்கனவே பாடல்கள் முழுவதும் ஹிட் ஆகி ரசிகர்களை சூடேற்றி சுதியேற்றி வைத்துள்ளன. படத்தைப் பார்க்க விஜய் ரசிகர்கள் படு வேகமாக காத்திருக்கிறார்கள்.
இப்படத்தில் ஒரு பாதியில் ரவுடியாக வருகிறார் விஜய், இன்னொரு பாதியில் போலீஸ் அதிகாரியாக அவதாரம் பூணுகிறார். போலீஸ் அதிகாரி வேடத்தில் விஜய் நடித்துள்ள முதல் படம் இதுதான். படத்துக்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
தெலுங்கில் இதே பெயரில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற படம்தான் போக்கிரி. தமிழிலும் கலக்குமா என்பது ரசிகர்கள் கையில் உள்ளது.
ஆழ்வார்:
வரலாறு மூலம் அத்தனை பேருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்த தல அஜீத், ஆழ்வார் மூலம் தனது எழுச்சியை கன்பார்ம் பண்ண வருகிறார். இதில் அவருக்கு ஜோடி ஆசின்.
தொடர்ந்து தோல்விகளையத் தந்து வந்த நிலையில் வரலாறு, அஜீத்துக்கு பெரும் பிரேக் கொடுத்தது. அந்த சூட்டோடு, ஆழ்வார் படமும் வெளியாவதால் தல ரசிகர்கள் தலை கால் புரியாத சந்தோஷத்தில் உள்ளனர்
படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். விநியோகஸ்தர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பாம். அத்தனை ஏரியாக்களிலும் சூப்பர் ரேட்டுக்கு படம் விற்றுள்ளதாம். 200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் தமிழகத்தைக் கலக்கப் போகிறார் ஆழ்வார்.
தாமிரபரணி:
தொடர்ந்து வெற்றிப் படங்களையே கொடுத்து வரும் அல்லது வெற்றி பெறும் படங்களில் இடம் பெற்று வரும் விஷால் நடித்து வெளியாகவுள்ள அதிரடி ஆக்ஷன் படம் தாமிரபரணி.
ஹரி இயக்கியுள்ளார். விஷாலுக்கு ஜோடி புதுமுகம் பானு. படம் வெளியாவதற்கு முன்பு பானு பாப்புலராகி விட்டார். பிரபு, நதியா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. விஷால் இந்தப் படத்திலும் முத்திரை பதிப்பாரா என்பது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
பருத்தி வீரன்:
அதிகம் எதிர்பார்க்கப்படும் இன்னொரு படம் பருத்தி வீரன். சூர்யாவின் தம்பி கார்த்திதான் இதில் ஹீரோ. அமெரிக்கா வரை போய்ப் படித்து வந்தவரை அசல் பட்டிக்காட்டானாக மாற்றி, படம் முழுக்க வேட்டி, சட்டையில் அலைய விட்டிருக்கிறார் அமீர்.
முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் கார்த்தியும் ரணகளமாக நடித்திருக்கிறாராம். அவருக்கு ஜோடி பிரியா மணி. இந்தப் படத்தை அவர்தான் ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். படம் முழுக்க அவருக்கு பாவாடை, தாவணிதானாம்.
இதுவரை காதுகளை மட்டுமே கிறுகிறுக்க வைத்த யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக மனதை கரைய வைக்கும் கிராமத்து இசையை இப்படத்தில் தவழ விட்டுள்ளார்.
இந்தப் படத்தின் வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்று என்று படு தெம்பாக உள்ளது பருத்தி வீரன் டீம்.
குரு:
இப்படம் பொங்கலுக்கு முன்பே வந்து விட்டது. இந்தியில் மணிரத்தினம் எடுத்து குரு தமிழிலும் அதே பெயரில் வெளியாகியுள்ளது.
அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மாதவன், மிதுன் சக்கரவர்த்தி என பெரும் பெரும் தலைகள் எல்லாம் படத்தில் உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. அம்பானியின் கதை என ஏற்கனவே பரபரப்பாகி விட்ட இப்படம் இந்தி பெல்ட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்.
மணிரத்தினத்தின் தமிழ்ப் படம் வந்து ரொம்ப நாளாகி விட்டதால் குருவை அவரது ரசிகர்கள் ரசிக்க ஆரம்பித்துள்ளனர்.
பச்சைக்கிளி முத்துச்சரம்:
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இன்னொரு முக்கியப் படம் பச்சைக்கிளி முத்துச்சரம். வெற்றி இயக்குநர் கௌதமின் இயக்கத்தில், சரத்குமார், ஜோதிகா நடிப்பில் கோர்க்கப்பட்டுள்ளது இந்த முத்துச்சரம்.
அசத்தல் அழகி ஆண்ட்ரியாவும் படத்தில் இருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜின் எலக்ட்ரிக் இசையில் படத்தின் கதை பெரும் எதிர்பார்ப்புக்குரியதாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு படு வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளாராம் சரத்.
சபரி:
சஃபாரி, சூட், கோட்டுடன் விஜயகாந்த் நடித்துள்ள மற்றும் ஒரு 'விஜயகாந்த் டைப்' படம்.
ஆனால் இப்படத்தில் விஜயகாந்த் படு வித்தியாசமாக நடித்துள்ளார் என்று பரவலாக பேச்சு கிளம்பியுள்ளது. விஜகாந்த்துக்கு ஜோடியாக நடித்திருப்பவர் ஜோதிர்மயி, மாளவிகாவும் படத்தில் இருக்கிறார். மாளவிகாவுக்கு கிளாமர் பார்ட்டை பக்காவாக கொடுத்துள்ளனராம்.
மெகா பட்ஜெட்டில் சேலம் சந்திரசேகரன் தயாரித்துள்ள இப்படத்தில் விஜயகாந்த் டாக்டராக நடிக்கிறாராம். டாக்டராக இருந்து கொண்டு அக்கிரமக்காரர்களை தோலுரித்து, துவையல் போடும் வேலையாம் அவருக்கு.
ரமணாவைப் போல இந்தப் படமும் பேசப்படும் என்று நம்பிக்கையுடன் உள்ளது சபரி வட்டாரம்.
வீராசாமி:
ஏ டண்டணக்கா, ஏ டணக்குணக்கா என்று ரொம்ப நாளைக்குப் பிறகு ஆடிப் பாடி அமர்க்களம் செய்ய வருகிறார் வீராசாமி. விஜய டி.ராஜேந்தர் முற்றிலும் அட்டகாசமான வேடத்தில் நடித்துள்ள படம் வீராசாமி.
ஹீரோ என்ற பெயரில் ஒரு சின்னப் பையனை ராஜேந்தர் அறிமுகம் செய்தாலும், ராஜேந்தர்தான் படம் முழுக்க கபடி ஆடியிருக்கிறாம். மும்தாஜுக்கு இதில் அழுத்தமான வேடமாம்.
ராஜேந்தரும், மும்தாஜும் சேர்ந்து ஆடிப் பாடியிருக்கும் டூயட் பாட்டு ஏற்கனவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ராஜேந்தர் அரசியல்வாதியாக வருகிறார். அவரைக் காதலிக்கிறார் மும்தாஜ். ஆனால் அது கை கூடாமல் இன்னொரு அரசியல்வாதியின் மனைவியாகி விடுகிறார்.
போன இடத்தில் புருஷன் போட்டு தாக்க அடி உதை பட்டு இன்னல்படுகிறார் மும்தாஜ். முன்னாள் காதலியின் நிலையை எண்ணி ரத்தக் கண்ணீர் பிளஸ் உப்புக் கண்ணீர் வடிக்கிறார் ராஜேந்தர். காதலின் வலியை தத்ரூபமாக சொல்லியிருக்கிறாராம் ராஜேந்தர்.
படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ஓரளவுக்கு ஹிட் ஆகி விட்டன. படமும் ஹிட் ஆகும் என்று டேபிளில் தட்டி தெம்பாக சொல்கிறார் ராஜேந்தர். மேக்னா நாயுடுவும் படத்தில் இருக்கிறார். ஸோ, டபுள் தெம்பாக அவர் இருக்கலாம்.
இந்தப் படங்கள் தவிர மேலும் சில படங்கள் திரைக்கு வருமா, வராதா என்ற குழப்பத்தில் உள்ளன.
Sunday, January 14, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment