Wednesday, August 22, 2007
சரத் பொன்சேகாவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட யாழ். எறிகணைத் தாக்குதல்: படைத்தரப்பு
இது தொடர்பில் சிறிலங்கா படைத்தரப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். குடாநாட்டிற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதன் பொருட்டு நேற்று காலை கட்டுநாயக்க வான் படைத்தளத்தில் இருந்து பலாலிக்கு புறப்படத் தயாராக இருந்த இராணுவ உலங்குவானூர்தியில் அவர் ஏறிய போதும் சீரற்ற காலநிலை காரணமாக அவரது பயணம் தாமதமாகியது. எனினும் 45 நிமிடங்களுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் ஆட்டிலெறி எறிகணைகள் பலாலி மற்றும் காங்கேசன்துறை தளங்கள் மீது வீழ்ந்து வெடித்துள்ளன. அதாவது குறித்த நேரத்திற்கு உலங்குவானூர்தி புறப்பட்டிருப்பின் எறிகணைகள் வீழ்ந்த சமயம் அது பலாலியில் தரையிறங்கியிருக்கும். எனினும் இந்த தாக்குதல் செய்தியை அறிந்த சரத் பொன்சேகா தனது பயணத்தை கைவிட்டுள்ளார். பின்னர் கொழும்பில் இருந்து பலாலி நோக்கிச் சென்ற பயணிகள் வானூர்திகளும் கொழும்பை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளன. எனவே தாக்குதல் நடைபெற்ற நேரத்தை நோக்கும் போது விடுதலைப் புலிகளின் இந்த தாக்குதல் இராணுவத் தளபதியை குறிவைத்து நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால் இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் "இது படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் வழமையான எறிகணைப் பரிமாற்றம்" என்றார்.
எனினும் "கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் நடைபெற்ற இந்த தாக்குதல் மிகவும் முக்கியமானது" என்று தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத பாதுகாப்புத்துறை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். "பலாலித் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் வான் தாக்குதலை நடத்தியிருந்தனர். ஆனால் எறிகணைத் தாக்குதல்களை நீண்டகாலம் நடத்தவில்லை. எனவே தற்போதைய தாக்குதல் முக்கியமானது அதனை நாம் குறைத்து மதிப்பிட முடியாது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே நேற்று நடைபெற்ற எறிகணைத் தாக்குதல் தரையில் இருந்து நடத்தப்படவில்லை எனவும் அது கடலில் இருந்து நடத்தப்பட்டதாகவும் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கண்காணிப்புக்குழு மேலும் தெரிவித்துள்ளதாவது: பலாலிப் படைத்தளம் மீதான நேற்றைய எறிகணைத் தாக்குதலைத் தொடர்ந்து யாழ். குடாநாட்டில் அதிக பதற்றம் நிலவுகின்றது. அங்கு செல்லிடப்பேசி இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து பூநகரிப் பகுதியை நோக்கி இராணுவம் எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தியதுடன், வான் தாக்குதல்களையும் நடத்தியது என்று கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது
Puthinam
Thursday, February 8, 2007
அச்சுறுத்தும் கடற்புலிகள்!
முழு அளவிலான போரில் புலிகள் குதிக்காத நிலையில் இன்று முப்படைகளையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் புலிகளுக்குள்ளதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது வடக்கில் இராணுவத்தினர் புலிகளிடம் பல தோல்விகளைச் சந்தித்துள்ள அதேநேரம், கிழக்கில் புலிகள் வசமுள்ள பெரும்பாலான பகுதிகளை படையினர் கைப்பற்றி வருவது பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகமாயிருந்த போதிலும் கிழக்கில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள படைவலுச் சமநிலையிலான மாற்றங்கள், கிழக்கில் புலிகள் மரபு வழிச் சமரிலிருந்து மீண்டும் கெரில்லாப் பாணியிலான போர் முறைக்குள் தள்ளப்பட்டுள்ளார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது.
கிழக்கில் தற்போது தொடரும் படை நடவடிக்கைகள் தங்களுக்கு மிகவும் சாதகமாயிருப்பதாகக் கருதும் அரசு, இந்தப் படை நடவடிக்கையை மேலும் தொடரவே முயல்கிறது. எனினும், கிழக்கில் இதுவரை புலிகள் முழு அளவிலான சமரில் ஈடுபடாததுடன் தங்கள் ஆட்பலத்தையும் ஆயுத வளத்தையம் பாதுகாத்தவாறு தற்காப்புச் சமருடன் பின் நகர்ந்து வருகின்றனர்.
இதன் மூலம் புலிகள் வசமுள்ள நிலப்பிரதேசங்களை மீட்டு அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை இல்லாது செய்து விடலாமென அரசு கருதுகிறது. இதனாலேயே அங்கு மேலும் மேலும் படை நடவடிக்கையில் ஆர்வம் காட்டி வரும் அரசு மட்டக்களப்பில் தற்போது புலிகள் வசமுள்ள பிரதேசங்கள் அனைத்தையும் பிடித்து விட வேண்டுமென்ற முனைப்பிலுள்ளது.
எனினும், கிழக்கில் அகலக் கால் வைத்துவரும் படையினருக்கு பெரும் ஆளணிப் பற்றாக்கறை ஏற்பட்டு வருகிறது. புதிதாகப் பிடிக்கும் இடங்களை தக்க வைக்க மேலும் ஆயிரக் கணக்கான படையினர் தேவைப்படுவதால் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு மீண்டும் மீண்டும் பொது மன்னிப்புகளை வழங்கி அவர்களை மீண்டும் படையணிகளில் இணைக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வரும் அதேநேரம், புதிதாக படையணிகளுக்கு ஆட்களை சேர்க்கும் நடவடிக்கைகளும் ஆரம்பமாகியுள்ளன.
கிழக்கில் தரைப் படையினர் ஆளணிப் பற்றாக்குறையை எதிர்நோக்குகையில் அவர்களால் அங்கு மேலும் பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இதேநேரம், அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு காட்டுப் பகுதியில் புலிகள் வசமிருந்த பகுதிகளை ஆக்கிரமித்த விஷேட அதிரடிப் படையினர், அங்கு புலிகளின் ஊடுருவல் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பக்கிமிட்டிய மற்றும் தங்க வேலாயுதபுரம் பகுதிகளில் புலிகள் நடத்திய ஊடுருவல் தாக்குதல்களில் 25 க்கும் மேற்பட்ட அதிரடிப் படையினர் கொல்லப்பட்டதுடன் 30 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். எனினும் இது தொடர்பான தகவல்களை படைத் தரப்பினர் மூடி மறைக்க முயன்றுள்ளனர்.
புலிகளுக்கெதிராக முழு அளவிலான யுத்தத்தை கிழக்கில் நடத்தி வரும் அரசு வடக்கிலும், தெற்கிலும் பாரிய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது.
கிழக்கில் அகலக் கால் வைத்துள்ள படையினருக்கு வடக்கு என்றுமே மிகவும் நெருக்கடிக் குரியதாகவேயுள்ளது. கிழக்கில் கடற்புலிகளை முற்றாக இல்லாது செய்து விட்டதாக கருதும் படைத் தரப்புக்கு வடக்கே கடற்புலிகளின் பலம் சிம்ம சொப்பனமாயுள்ளது.
அதேநேரம் அண்மைக் காலங்களில் கடற்புலிகளின் தாக்குதல்கள் கடற்படையினரின் பாதுகாப்பை விட இலங்கைத் துறைமுகங்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகளை எழுப்புகிறது. இதற்கேற்ப அண்மைக் காலங்களில் இடம்பெற்ற கடல் நடவடிக்கைகளும் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.
இலங்கையைப் பொறுத்தவரை அதன் துறைமுகங்களின் பாதுகாப்பு இன்று உறுதிப்படுத்தப்பட்டதாயில்லை. வடக்கு- கிழக்கில் காங்கேசன்துறை, பருத்தித்துறை ( இறங்குதுறை) திருகோணமலை துறைமுகங்களுள்ளன. இதற்கு வெளியே கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களுள்ளன.
இவற்றில் எந்த துறைமுகத்தையும் தாக்கக் கூடிய ஆற்றல் கடற்புலிகளுக்கு இருப்பதாகவே அரசும் படைத் தரப்பும் கருதுகின்றன. கடந்த மாதம் 27 ஆம் திகதி கொழும்புத் துறைமுகம் மீதுபுலிகள் நடத்த விருந்த தாக்குதலைத் தாங்கள் முறியடித்து விட்டதாக கடற்படையினர் கூறுகின்றனர்.
இதன் போது கடற்புலிகளின் மூன்று படகுகள் அழிக்கப்பட்டதாகவும் அவை தற்கொலைத் தாக்குதலை நடத்தும் கரும் புலிப் படகுகளாயிருக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டது. இந்தப் படகுகள் கொழும்புத் துறைமுகத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நுழைய முற்பட்ட போதே அதனைத் தடுத்து நிறுத்திய கடற்படையினர் ஒன்றன் பின் ஒன்றாக ஆறு கடல் மைல் தூரத்திலும் 11 கடல் மைல் தூரத்திலும் 14 கடல் மைல் தூரத்திலும் அந்தப் படகுகளை அழித்ததாகத் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதல்களானது அதிகாலை 5.30 மணிக்குப் பின்பே நடைபெற்றுள்ளதாகவும் கடற்படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்தத் தாக்குதல்களில் கடற்படையினருக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லையென்பதுடன் கடற்புலிகளின் இந்தத் தாக்குதலை முறியடித்ததன் மூலம் கொழும்புத் துறைமுகம் மிகவும் பாதுகாப்பானதொரு துறைமுகமென்பதை கடற்படையினர் நிரூபித்துள்ளதாகவும் துறைமுக அமைச்சர் மங்கள சமரவீர கொழும்புத் துறைமுகத்திலிருந்து அறிவித்தார்.
இதேநேரம், இந்தத் தாக்குதலை நடத்த வந்த புலிகளில் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் தீவிர விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் கடற்படையினர் தெரிவித்த போதும் அவர்கள் யாரென்ற விபரங்களை இதுவரை வெளியிடவில்லை.
எனினும், இந்தத் தாக்குதல், கடற்படையினர் கூறுவது போல் கொழும்புத் துறைமுகத்திற்கு வெளியே நடைபெறவில்லையென்றும் துறைமுகத்தை தாக்க எவரும் வரவில்லையென்றும் அப்பாவி மீனவர்களே கடற்படையினரின் தாக்குதலுக்கிலக்காகினர் என்பதும் பின்னர் சிங்கள கடற்றொழிலார்கள் மூலம் தெரிய வந்தது.
இது குறித்து நீர்கொழும்பு கடற்றொழிலாளர் சங்கம் ஜனாதிபதி முதல் அமைச்சர்கள் வரை அவசர கடிதங்களை அனுப்பியுள்ளதுடன் அன்றைய தினம் தாக்குதலுக்கிலக்கானது அப்பாவி மீனவர்களென்றும் அந்தத் தாக்குதல் கூட கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் இடம்பெறவில்லையென்றும், துறைமுகத்திலிருந்து 20 கடல்மைல் தூரத்தில் ஆழ்கடலில் இடம்பெற்றதாகவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
தாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு திடீரென தாக்குதல் நடத்தியவாறு வந்த கடற்படையினர் தங்களைக் கடலில் குதிக்குமாறு கூறிவிட்டு தாங்கள் கடலில் குதித்தும் படகுகளை தாக்கி அழித்ததாகவும் பின்னர் ஒன்பது பேரைக் கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
படையினரும் ஊடகங்களும், கொழும்புத் துறைமுகத்தை தாக்க வந்த கற்புலிகளின் படகுகள் அழிக்கப்பட்டதாக பொய் கூறுவதாகவும் உண்மையிலேயே தாக்குதலுக்கிலக்கானவை சிங்கள மீனவர்களின் படகுகளே என்றும் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.
உண்மை இதுவாயின் ஏன் இந்தப் புனைகதையை அரசும் படைத் தரப்பும் பரவ விட்டன. காலியில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு நடைபெறும் சமயத்ததில் இவ்வாறானதொரு பொய்ப் பிரசாரத்தின் மூலம் கொழும்புத் துறைமுகத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் காண்பித்து உதவி வழங்கும் நாடுகளிடமிருந்து உதவிகளைப் பெற்றுவிடலாமெனக் கருதினார்களா?
எனினும், தென்பகுதியில் உண்மை நிலையை அரசும் படைத் தரப்பும் ஊடகங்களும் மூடி மறைத்துவிட்டன. அதேநேரம், கடற்புலிகளின் தாக்குதலிலிருந்து கடற்படையினர் மிகத் திறமையாக துறைமுகத்தை பாதுகாத்து விட்டனரெனவும் படைத்தரப்புக்கு பெரும் புகழாரம் சூட்டப்பட்டது.
கொழும்புத் துறைமுகத்தை கடற்புலிகள் தாக்க வந்ததாக அரசும் படைத் தரப்பும் கூறியதன் மூலம், இலங்கையில் இன்று எந்தத் துறைமுகமும் கடற்படைத் தளமும் எவ்வேளையிலும் புலிகளின் தாக்குதலுக்கிலக்காகும் நிலைமை ஏற்பட்டுள்ளதை அரசும் படைத் தரப்பும் மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளன.
புலிகளின் தரைப் படையை விட இன்று கடற்புலிகள் குறித்தே படைத் தரப்பு அச்சமடைந்துள்ளது. இலங்கையில் ஒவ்வொரு துறைமுகமும் ஒவ்வொரு கடற்படைத்தளமும் தாக்குதலுக்கிலக்காகும் போது, கடற்புலிகள் எங்கிருந்து, எப்படி வந்தார்கள் என்ற கேள்வியை தென்பகுதி மக்கள் எழுப்புகின்றனர்.
காலியில் கடற்படைத்தளம் மீதான தாக்குதல் தென்பகுதி மக்கள் மத்தியில் கடற்புலிகள் குறித்து பெரும் அச்சத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கொழும்புத் துறைமுகமும் அதனோடிணைந்த இராணுவ முகாமுமே இலங்கைக்குள் வரும் போர்த்தளபாடங்களைப் பெற்று ஏனைய பகுதிகளுக்கு விநியோகிக்கும் மையங்களாகும். இதனால் ஏனைய துறைமுகங்கள், கடற்படைத் தளங்களை விட கொழும்புத் துறைமுகத்தின் முக்கியத்துவம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.
இதைவிட கொழும்புத் துறைமுகமே இன்று இலங்கையின் மிகப்பெரும் பொருளாதார மையமுமாகும். இலங்கையின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மிகப் பெரும்பாலும் கடல் வழியூடாகவே நடைபெறுவதால் கொழும்புத் துறைமுகமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாயுள்ளது.
இந்தத் துறைமுகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியானால் இலங்கையின் பாதுகாப்பே கேள்விக்குறியாகும். 2000 ஆம் ஆண்டில் கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மற்றும் சர்வதேச விமான நிலையம் தாக்குதலுக்கிலக்கான போது நாட்டின் பொருளாதார நிலைமை எப்படிக் கேள்விக்குறியானதோ அவ்வாறே கொழும்புத் துறைமுகத்தின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகுமானால் நாட்டின் பொருளாதார நிலைமையும் கேள்விக்குறியாகும்.
இன்று முல்லைத்தீவுக்கு அப்பால் வட பகுதி கடற்பரப்பின் முழுமையான ஆதிக்கம் புலிகள் வசமேயுள்ளது. அண்மைக்கால மோதல்களில் கடற்படையினர் அங்கு சந்தித்து வரும் பேரிழப்புகளானது இதனை நன்கு நிரூபிக்கிறது.
கடந்த வருட நடுப்பகுதியில் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் 800 இற்கும் மேற்பட்ட படையினருடன் காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த `ஜெற் லைனர்' கப்பலை கடற்புலிகள் சுற்றிவளைத்த போது அந்தக் கப்பல் சர்வதேசக் கடற்பரப்பைத் தாண்டி இந்தியக் கடற்பரப்பினுள் நுழைந்ததுடன் பின்னர் அந்தக் கப்பலை இந்தியக் கடற்படையே காலி துறைமுகத்துக்கு கொண்டு வந்து விட்டதும் தெரிந்ததே.
இதேபோன்றே கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி திருமலைத் துறைமுகம் மீது புலிகள், சம்பூரிலிருந்து ஆட்லறி ஷெல் தாக்குதலை நடத்திய போது 800 படையினருடன் திருமலை கடற்படைத்தளம் நோக்கி வந்த `ஜெற்லைனர்' பின்னர் அங்கிருந்து தப்பி சர்வதேசக் கடற்பரப்பையும் தாண்டி இந்திய கடல் எல்லைக்குள் சென்று பின்னர் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.
திருமலைத் துறைமுகத்துக்கு புலிகளின் ஆட்லறிகளால் அச்சுறுத்தலாயிருந்த சம்பூரை படையினர் கைப்பற்றியபோது, யாழ். குடா நாட்டுக்கான கடல்வழிப் பயணத்துக்கான அச்சுறுத்தல் நீக்கப்பட்டதாக அரசு கருதிய போதும், வட பகுதி கடற்பரப்பு தொடர்ந்தும் புலிகளின் ஆளுகைக்குள்ளிருப்பதால் இன்று வான் வழியூடான அவசர விநியோகத்தையே படைத்தரப்பு நம்ப வேண்டியுள்ளது.
கடற்புலிகளைப் பொறுத்தவரை வடக்கே காங்கேசன்துறை மற்றும் காரைநகர் கடற்படைத் தளங்களையோ அல்லது காங்கேசன்துறை, பருத்தித்துறை துறைமுகங்களையோ தாக்குவதும் திருமலை கடற்படைத்தளத்தை அல்லது துறைமுகத்தை தாக்குவதும் கடினமான விடயமல்ல. ஆனால், புலிகள் தெற்கே காலி கடற்படைத்தளத்தையும் மேற்கே கொழும்புத் துறைமுகத்தையும் தாக்குகிறார்களென்றால், அது புலிகளின் பலத்தை விட கடற்படையினரின் பலவீனத்தையே காட்டுகிறது.
காலித் துறைமுகத்துக்கு கடற்புலிகள் எப்படிச் சென்றார்கள், கொழும்பு துறைமுகத்துக்கு அவர்கள் எப்படி வந்தார்களென்பதை ஆராயும் அதேநேரம், தாக்குதல்களின் பின்னர் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டார்களென்பது தெற்கில் மிகப்பெரும் அதிர்ச்சியான செய்திகளாகும்.
தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள நிலப்பரப்புடன் கூடிய கடற்பரப்புக்கும் அப்பால் மிக நீண்ட தூரம் (நூற்றுக்கும் மேற்பட்ட கிலோ மீற்றர்) சென்று கடற்புலிகள் தாக்குதல்களை நடத்துவது, அரசுக்கும் படைத்தரப்புக்கும் பேரிடியான செய்திகளாகும்.
இவ்வாறான அதிரடித் தாக்குதல்களின் போது கடற்படையினர் நிலைகுலைந்து விடுகின்றனர். அதேநேரம், தரைச் சமர்களில் இராணுவத்தினருக்கு பக்கபலமாகச் செயற்படும் விமானப் படையினரால் கடற்சமர்களின் போது, அதுவும் பகல்பொழுதுகளில் நடைபெறும் சமர்களில் கடற்படையினருக்கு உதவ முடியாது போவது விமானப் படையினரின் பலவீனத்தையே காட்டுகிறது. இலங்கையை பொறுத்தவரை அதன் நிலப் பரப்பை விட கடற்பரப்பு அதிகமானது. அதன் நாற்புறமும் கடலால் சூழப்பட்ட நிலையிலும் நாட்டில் உள்நாட்டுப் போரொன்று நடைபெற்றுவரும் நிலையிலும் தரைப்படைக்குச் சமமாக அதன் கடற்படையுமிருக்க வேண்டும். ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை அதன் கடற்படையின் பலம் மிகவும் வலுவிழந்துள்ளது.
இந்த உள்நாட்டுப் போரில் விமானப் படையின் பங்களிப்பு கணிசமாயுள்ள போதும் தற்போது புலிகளின் வான்படையினது அல்லது விமான எதிர்ப்பு படையணியின் பலவீனம் இலங்கை விமானப் படையினருக்கு அண்மைக் காலமாக சாதகமாகவேயுள்ளது.
கிழக்கில் அண்மைக் காலங்களில் இடம்பெற்ற பாரிய படை நகர்வுகள் மூலம் கடற்புலிகளுக்கு சில பின்னடைவுகள் ஏற்படுத்தப்பட்டதுடன் கிழக்கில் கடற்படைத் தளங்களுக்கும் துறைமுகங்களுக்குமான உடனடி அச்சுறுத்தல்களும் தவிர்க்கப்பட்டுள்ள.
சம்பூரில் கடற்புலிகளின் வலுவான தளமிருந்த போது கிழக்கில் கடற்புலிகளின் ஆதிக்கம் குறிப்பிடத்தக்களவிற்கிருந்தது. அத்துடன், சம்பூரில் நிலை கொண்டிருந்த புலிகள், திருமலைத் துறைமுகத்தையும் கடற்படைத் தளத்தையும் தங்களது ஆட்லறிகளின் தாக்குதல்கள் மூலம் பூரண கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
எனினும், சம்பூர் உட்பட மூதூர் கிழக்கை இராணுவத்தினர் கைப்பற்றிய போது, திருமலைத் துறைமுகம் மற்றும் கடற்படைத் தளத்திற்கான புலிகளின் ஆட்லறி அச்சுறுத்தல் இல்லாது போனதுடன் சம்பூரிலிருந்த கடற்புலிகளின் தளமும் வாகரைக்கு மாற்றப்பட வேண்டியிருந்தது.
இது, கிழக்கில் புலிகளின் கடலாதிக்கத்தை குறைத்து விடுமெனக் கருதிய படைத்தரப்பு, வாகரையையும் பின்னர் கைப்பற்றியதன் மூலம் கிழக்கில் கடற்புலிகளின் கடலாதிக்கத்தை முற்றாகவே இல்லாது செய்து விட்டதாகக் கருதுகிறது.
எனினும், கிழக்கு கடற்பரப்பு ஈழ விடுதலைப் போராட்டத்தில் மிகப்பெரும் சமர்க்களமாயிருந்ததில்லை. கிழக்கில் படை முகாம்களுக்கான தரைவழித் தொடர்புகள் பெருமளவில் இருப்பதால் கடல் வழியூடான நடவடிக்கைகளுக்கு அங்கு எதுவித தேவையுமிருக்கவில்லை.
ஆனால், வடக்கில் நிலைமை அவ்வாறில்லை. யாழ். குடாநாட்டில் பெரும்பாலான பகுதிகள் படையினர் வசமேயுள்ள அதேநேரம், குடாநாட்டுக்கு தரைவழித் தொடர்பில்லாததாலும் விமானப் படையின் வான் வழி விநியோகம் குடாநாட்டிலுள்ள படையினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யமாட்டாதென்பதாலும் அங்கு கடல் வழி விநியோகத்தை படையினர் முழுமையாக நம்பியுள்ளனர்.
இந்த நிலையில் கிழக்கை விட வடக்கிலேயே கடற்புலிகளின் செயற்பாடுகள் முழுமையாகவுள்ளது. இதனால் வடக்கில் கடற்படையினரின் நடவடிக்கைகள் பெருமளவில் முடக்கப்பட்டுள்ளன.
தற்போதைய சமரில் அரச படைகளைப் பொறுத்தவரை அவர்களது எண்ணிக்கையும் அவர்கள் வசமுள்ள போர்த்தளபாடங்களும் அவர்களை வலுவுள்ளவர்களாகக் காண்பிக்கிறது. அதேநேரம், கடற்புலிகளின் கரும்புலிப் படகுகள் அவர்களை வலுவள்ளவர்களாக்கியுள்ளது. தரைப்படையினருக்கு உதவுமளவிற்கு, விமானப் படையினரால் கடற்படையினருக்கு உதவ முடிவதில்லை.
இவ்வாறான நிலைமைகளில் கிழக்கில் தற்போது அரசும் படைத்தரப்பும் தங்கள் முழுக்கவனத்தையும் திருப்பியிருக்கையில் புலிகள் தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருகின்றனர். எனினும், இது அவர்களது பின்னடைவல்ல. தருணம் பார்த்து அவர்கள் மிகப்பெரும் பாய்ச்சலுக்கு தயாராகிறார்களென்பதே உண்மை.
-விதுரன்-
தினக்குரல்
Sunday, January 21, 2007
15.இரும்புப் பிடிக்குள் யாழ்ப்பாணம்
அரசியல், இராணுவ, பொருளாதார நலன்களுக்காக யாழ்ப்பாண மக்கள் திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
உணவு , உடை , உறையுள், மருத்துவம் , விவசாயம் , மீன்பிடி, கல்வி , பாதுகாப்பு, சமய வழிபாடு , போக்குவரத்து உட்பட சாதாரண ஒரு மனிதனுக்கு கிடைக்கவேண்டிய அடிப்படைச் சுதந்திரங்கள் அனைத்து யாழ். மக்களுக்கு அறவே மறுக்கப்பட்டுள்ளன. கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதோடு, அச்சு ஊடகங்களும் முழுமையாக செயலிழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
அனைத்துக்குமே பிறரிடம் கையேந்தும் அடிமைத்தனம் ,அவல வாழ்வு, வெளிப்படையாக எதையும் பேச முடியாத நிலை, இன்னும் சொல்லப்போனால் ஒரு வேளை உணவுக்கு கூட கையேந்த வேண்டிய பிச்சைக்கார வாழ்வு என இன்றைய குடாநாட்டு மக்களின் வாழ்வு ஏதோ நகருகின்றது.
குடாநாட்டு மக்கள் ஒவ்வொரு துறையிலும் அனுபவித்து வரும் துன்பங்கள் தான் என்ன?
உயிர் வாழும் உரிமை
யாழ். மக்கள் உட்பட வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் உயிர்வாழும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்டு காணாமல் போதல் , படுகொலை என்பன தொடர்கின்றன. அச்சம் சூழ்ந்த அவல நிலையே எங்கும் வியாபித்துள்ளது. குடாநாட்டை விட வட, கிழக்கின் ஏனைய பகுதிகளில் விமானத்தாக்குதல்கள், எறிகணைத்தாக்குதல்களால் சதா மக்கள் கொல்லப்படுகின்றார்கள்.
உணவு போதியளவு அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பெறமுடியாத சூழ்நிலையில் நாட்கணக்கில் ,மணிக்கணக்கில் வீதிகளில் உணவுக்காக காத்திருக்க வேண்டிய அவலநிலை. 2006 ஆகஸ்ட் 11 இன் பின்னர் எந்தவொரு பொருட்களையுமே போதியளவு பெறமுடியாதுள்ளது. அரிசி, பருப்பு , சீனி முதல் சவர்க்காரம், சம்போ வரை தேடி அலைய வேண்டிய நிலை.
இருப்பிடம் வலிகாமம் , தென்மராட்சி பகுதிகளிலிருந்து ஏற்கனவே இலட்சக் கணக்கானோர் துரத்தியடிக்கப்பட்ட நிலையில் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் ஆகஸ்டின் பின்னர் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். உயர் பாதுகாப்பு வலயம் மேலும் விஸ்தரிக்கப்பட்டுவருகின்றது.
நடமாடும் சுதந்திரம்
ஆகஸ்டில் ஆரம்பமான மோதலைத்தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 4 மாதங்கள் கடந்த நிலையிலும் தொடர்கின்றது. நடமாடும் சுதந்திரம் மறுக்கப்பட்டு வருகிறது.
ஊடக சுதந்திரம்
குடாநாட்டு பத்திரிகைகளுக்கான அச்சிடும் தாள்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் எடுத்து வரமுடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் இன்றுவரை இப்பொருட்களை எடுத்துவர அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அனைத்துப் பத்திரிகைகளும் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இவற்றை விட...
இராணுவ முகாம்களின் முன்பாகவும் மக்களை திரளச் செய்து அடிமை உணர்வை வளர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. பசிக் கொடுமையால் பல்லாயிரம் மக்கள் இங்கெல்லாம் நாளாந்தம் கையேந்தி நிற்கின்றனர்.
* எரிபொருள் தட்டுப்பாட்டால் நம்பிக்கையோடு பயிர்ச்செய்கையை ஆரம்பித்த விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். பயிர்கள் வாடிவதங்குகின்றன. மண்ணெண்ணெய் விலை 160 ரூபா, உரம் 6 ஆயிரம் ரூபா என விலை உயர்ந்துள்ளன.
* சுமார் 10 வீத மீன்பிடிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அதற்கும் திடீர் திடீரென வேட்டுவைக்கப்படுகிறது. மீனவக் குடும்பங்கள் யாவும் அக்கினிப் பெருமூச்சு விடுகின்றனர்.
* கைத்தொழில்கள் பலவற்றுக்கு வேண்டிய மூலப்பொருட்கள் தென்னிலங்கையிலிருந்து வர வேண்டும். அனைத்தும் தடைப்பட்டுள்ளதால் அத் தொழிலகங்கள் பல மூடப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
* வணிக நிலையங்களில் விற்பனைப்பண்டங்கள் இல்லாமையால் ஊழியர் குறைப்பு மிகுந்து வருகின்றது.
* சீமெந்து மருந்து போல் கிடைக்கிறது. ரூபா 1500-2000 வரை விற்பனையாகிறது. இதனால் கட்டுமான வேலைகள் அனைத்தும் ஸ்தம்பித்து விட்டன. இதனால் பல்லாயிரக்கணக்கான கட்டிடத் தொழிலாளிகள் வேலையிழந்துள்ளனர்.
* கட்டுமான வேலைகள் நின்றதால் தச்சுத் தொழில் ,கல்லுடைக்கும் தொழில் போன்றனவும் ஸ்தம்பித்துவிட்டன.
* பாடப்புத்தகங்கள் , கற்றல் உபகரணங்கள் இன்மையால் பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் படுகுழியில் தள்ளப்படுகின்றன.
மாணவர்கள் குளிக்கவோ, சீருடைகளைத் துவைக்கவோ, சவர்க்காரம் இன்மையால் மன விரக்தி கொண்டுள்ளனர்.சில அதிபர்கள் வர்ண உடைகளை அணிய அனுமதி வழங்க முற்பட்டுள்ளனர்.
* பல்கலைக்கழகம் திறக்கப்படாமையால் உயர்கல்வி பிரச்சினைக்குள்ளாகியுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களும் பல்கலைக்கழகம் புக இருக்கும் மாணவர்களும் மனம் வெறுத்தும் பிந்திய நிலையில் அங்கலாய்க்கின்றனர்.
* சமய வழிபாடுகளுக்குச் சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய்,கற்பூரம் முதலான பூசைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு. அன்னதானத்துக்கான பொருள்கள் இன்மையால் பிள்ளையார் கதை, திருவெம்பாவையை ஒட்டி நடக்கும் உபயங்கள் மிகப் பெரும்பான்மையான கோயில்களில் நடைபெறுவதில்லை.
* மக்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்படும் முக்கிய இடங்களாக மருத்துவ மனைகள் அமைந்துள்ளன. சுமார் 75 ஆயிரம் மக்கள் வரை சிக்குன் குனியாவால் பீடிக்கப்பட்டுள்ளனர். இதனால் சத்துணவு இல்லாத நிலையிலுள்ளோர் மரணிக்கின்றனர்.
* அரச மருந்தகங்களில் போதிய மருந்து வழங்கப்படுவதில்லை. வெளிக்கடைகளில் தட்டுப்பாடு. ஆதலால் உச்சவிலை. பனடோல் ஒன்று ரூபா 5 முதல் 8 வரை செல்கிறது.
-யாழின்மைந்தன்-
நன்றி: தினக்குரல்
Saturday, January 20, 2007
14.புராதன இலங்கையின் படங்கள்
இத் தளத்தில் பல புராதன இலங்கையின் படங்களைப் பெற முடிகின்றது. கொழும்பின் பலவீதிகளின் தோற்றத்தைப் பார்க்கும்போது வித்தியாசமாக இருக்கின்றது. பார்த்து சேமித்து மகிழுங்கள். ஒன்றைப் பார்த்தீர்கள் என்றால் சரியான தகவலோ, அல்லது பிழையானதோ எதை என்றாலும் சிங்களவர்கள் அன்றிலிருந்து தங்களை ஆதாரப்படுத்தும் போது நாம் எவ்வித உணர்ச்சியும் இன்றி இருப்பது வேதனை!
அதில் இருந்த தமிழர்கள் குறித்த படங்கள் சில ...
தமிழ் ஆண்
தமிழ் பெண்
மிகவும் அற்புதமான புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு
தூயா
Friday, January 19, 2007
13.உண்மையை ஏற்போம்!!

அவர் ஒரு தொழிலதிபர். மாலை நேரமானால் தவறாமல் ஆன்மீக லெக்ஷர்களுக்குச் செல்வார். தொழிலில் இலாபம் குவிந்தால், சந்தோஷத்தில் எகிறிக் குதிக்கமாட்டார். அதேபோல், நஷ்டம் வரும்போது தலையில் துண்டுபோட்டு மூலையில் முடங்கி விடவும் மாட்டார். மொத்தத்தில் எந்த நேரத்திலும் எவ்விதச் சூழ்நிலையிலும் நிதானம் தவறாதவர். விருப்பு- வெறுப்பற்ற வேதாந்தி என்றே கூறலாம்.
ஒரு கப்பலின் வருகைகாகக் காத்திருந்தார். அந்தத் தொழிலதிபர். கப்பலில் அவருடைய மனைவியும் குழந்தையும் வருகிறார்கள். நிறையச் சொத்துகளும் வருகின்றன.
ஒருநாள் அவர் வீட்டில் கோலிங்பெல் ஒலிக்கிறது. கதவைத் திறந்தார் தொழிலதிபர். வெளியே மூச்சிரைக்க ஒரு ஆள். அவருடைய உதவியாளர்.
"சார், உங்களுடைய கப்பல் மூழ்கிவிட்டது.." என்கிறன் அவன்.
`வாட்...?" தொழிலதிபரின் குரலில் பதற்றம் கலந்த அதிர்ச்சி.
"உங்களுடைய கப்பல் மூழ்கிவிட்டது சார்."
"ஸோ வாட்?" இப்போது அவர் குரலில் பதற்றமும் அதிர்ச்சியும் குறைந்து, நிதானமும் அமைதியும் தலை தூக்குகிறது.
"சார், உங்க சொத்துகளையெல்லாம் இழந்துட்டீங்க..." என்கிறார் உதவியாளர் தொடர்ந்து.
"வாட்...?" தொழிலதிபரிடம் மறுபடியும் லேசான பதற்றம்.
"இப்ப நீங்க ஓட்டாண்டியா ஆயிட்டீங்க.."
"ஸோ வாட்...?" - நிதானம்.
"சார்... உங்க மனைவி, குழந்தைகளையும் கூட இழந்துட்டீங்க..."
"வாட்...?"
"நீங்க அநாதை ஆயீட்டீங்கன்னு சொல்றேன்..."
"ஸோ வாட்"
தொழிலதிபர் ஒவ்வொரு முறையும் முதலில் "என்ன...?" என்று கேட்பதும், உடனே `அதனால் என்ன..?' என்று சொல்வதும் ஒன்றுக்கொன்று முரண்படுவதாகத் தோன்றும்.
சொல்லப்பட்ட தகவல் சரியாக காதில் விழாத காரணத்தால்தான் தொழிலதிபர் முதலில் `என்ன...?' என்று கேட்பதாக நினைக்க வேண்டாம் கப்பல் மூழ்கிவிட்டது என்பதில் ஆரம்பித்து, உதவியாளர் கூறியது ஒவ்வொன்றும் அவருக்குத் தெளிவாகவே புரிந்து விடுகிறது. இருப்பினும், அவர் `என்ன...?' என்று பதற்றத்துடன் கேட்க என்ன காரணம்...?
உண்மை நிலையை ஏற்றுக்கொள்ளாத உடனடி ரெஸ்பான்ஸ் இது!
எந்த ஒரு சாதாரண நபரும் இப்படி ஒரு சூழ்நிலையில் இடிந்துபோய் உட்கார்ந்து விடுவார். எல்லாவற்றையும் இழந்துவிட்ட சோகம், அவருடைய முகத்தை அப்பிக் கொள்ளும். மனைவி, குழந்தைகளைப் பறிகொடுத்து விட்ட தவிப்பும் சொத்துகளை இழந்துவிட்ட துயரமும் அவரை வாட்டி எடுக்கும். எல்லாவற்றுக்கும் காரணம் கப்பல் மூழ்கிவிட்டது என்கிற உண்மையை மனம் ஏற்க மறுப்பதுதான்.
தொழிலதிபர் என்றால் பணம் பண்ணுவதில் மட்டுமே குறியாக இருக்க வேண்டும் என்று அவசியமல்ல.... யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளும் மனப்பக்குவம் அவருக்கு இருந்துவிட்டால்... வாழ்க்கையில் `ஸோ வாட்' அணுகுமுறை அவருக்கு எளிதாகிவிடுகிறது.
உண்மையை ஒப்புக்கொள்ளாமல் இருப்பதாலோ அல்லது பிடிவாதமாக ஒப்புக்கொள்ள மறுப்பதாலோ எந்தப் பயனும் கிடையாது. சோகமும் விரக்தியும் ஏமாற்றமும்தான் உங்களைச் சுற்றி வளைக்கும். நம்பிக்கையின்மை உங்களை ஆக்கிரமிப்புச் செய்யும். ஒட்டுமொத்த சமூகமும் உங்களைத் தேடி வந்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பீகள். வருடங்கள் உருண்டோடிக் கொண்டிருக்கும். மீண்டு வர முடியாமல் மூலையில் முடங்கிக் கிடப்பீர்கள்.
சூழ்நிலையை எதிர்கொள்ளும் விதத்தில் `என்ன...?', `அதனால் என்ன...?' என்ற இரண்டு வகைக்கும் இடையே நீண்ட இடைவெளி உண்டு. இந்த இடைவெளியை ஒவ்வொருவரும் குறைக்க வேண்டும். இது சிலருக்கு நூறு வருடங்கள் ஆகலாம். வேறு சிலருக்கு இருபது வருடங்கள். பலருக்கு, இந்தப் பிறவியே கூடப் போதாது. ஆனால், நம்முடைய தொழிலதிபர் கம் வேதாந்தி சில விநாடிகளுக்குள் அந்த இடைவெளியைக் காணாமல் போக்கிவிட்டார்.
உங்கள் முயற்சியாலும் மேற்கொள்ளும் நடவடிக்கையாலும் ஒரு சம்பவத்தைத் தடுத்து நிறுத்தவோ, மாற்றியமைக்கவோ முடியுமானால் கவலையில்லை. ஆனால், ஒரு கப்பல் மூழ்கிவிடுவதை உங்களால் தடுக்க முடியுமா? புயல், வெள்ளம் ஏற்படுத்தும் சேதாரத்தை உங்களால் தவிர்க்கத்தான் இயலுமா? ஆகவே, உண்மையை ஏற்பதுதான் ஒரே வழி.
இப்படிச் சீர்ப்படுத்த முடியாத சம்பவங்களைப் பற்றி பகவத்கீதையில் கிருஷ்ண பகவான் குறிப்பிடும்போது `அர்ஜுனா.. உன்னால் மாற்ற முடியாததைப் பற்றி நீ வருந்துவது சரியல்ல' என்கிறார்.
நம்மால் மாற்ற முடியாத எதையும் தாங்கிக்கொள்ளும் சக்தி ஒருவருக்கு இருக்க வேண்டியது அவசியம். அதற்கு எந்தவிதச் சூழ்நிலையிலும் உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு மனம் பக்குவப்பட்டிருக்க வேண்டும்.
வாழ்க்கையில் புரிந்து கொள்வதற்காக மட்டுமே சில விடயங்கள் உள்ளன. புரிந்துகொண்ட பிறகு, அதற்கேற்ப செயல்பட வேண்டிய விடயங்களும் உண்டு.
உதாரணத்துக்கு பகவத்கீதையில் யுத்த களத்தில், அர்ஜுனன் பல விடயங்களைக் கேட்டுத் தெரிந்து, மனம் பக்குவப்பட்டு உறுதியுடன் செயலிலும் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லி முடித்துவிட்டு, "இனி உன் இஷ்டப்படி செய்.." என்று முடிவை அர்ஜுனனிடமே விட்டு விடுகிறார் கிருஷ்ணபகவான். காரணம், அர்ஜுனன் தவறாக எதையும் செய்துவிட மாட்டான் என்கிற நம்பிக்கை! குழப்பத்தினால் உருக்குலைந்துவிடும் அபாயம் நீங்கி விட்டதை அவனுடைய பார்வையே உணர்த்திவிடுகிறது.
"போர்க்களத்தில் எதிர்த்தரப்பில் நின்று கொண்டிருப்பவர்கள் அத்தனை பேரும் என்னைச் சார்ந்தவர்கள். அவர்களுடன் நான் எப்படிப் போரிடுவது...? தர்மத்தைக் காக்க வேண்டும் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால், என் சொந்தபந்தங்களே அதர்மத்துக்குத் துணை நிற்கும்போது நான் அவர்களுடன் எப்படிச் சண்டையிட முடியும்?" என்று ஆரம்பத்தில் கேட்டவன்தான் அர்ஜுனன். கிருஷ்ணர் அவனுக்குப் பாடம் புகட்டியதன் விளைவு அவன் எல்லா உண்மைகளையும் புரிந்து கொண்டான். காண்டீபத்தைக் கையிலெடுத்தான். போரிடத் தொடங்கினான்.
Tuesday, January 16, 2007
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 12.குடாநாட்டில் தயாராகியுள்ள 'நுளம்புத்திரி'
மூவரின் முயற்சியால் உருவாகியுள்ள இந்த உள்ளூர் நுளம்புத்திரி சாம்பிராணி வாசத்துடன் நின்று எரிவதாகவும் சிறந்த பலனைத் தருவதாகவும் யாழ்நகரில் வசிக்குமொரு பாவனையாளர் கூறினார்.
கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள யாழ்ப்பாண மக்கள் நுளம்புத் தொல்லையாலும் அல்லல்பட்டு வருகின்றனர். சிக்குன் குனியாஇ டெங்கு போன்ற நுளம்பால் பரவும் நோய்கள் உயிர் குடித்து வருகின்றபோதும் குடாநாட்டில் நுளம்புத்திரிகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. ஒரு பெட்டி நுளம்புத்திரியின் விலை சுமார் 100 ரூபா வரையில் விற்கப்படுகின்றது.
நுளம்பு பெருமளவில் படையெடுத்துள்ள குடாநாட்டில் அவற்றை விரட்டியடிக்கக் கூடிய நுளம்புத்திரி இல்லாத சூழ்நிலையிலேயே இந்த ஹஉள்ளூர் நுளம்புத்திரி' (யாழ்ப்பாண நுளம்புத்திரி) தயாரிக்கப்பட்டு புழக்கத்துக்கு வந்துள்ளது.
மெழுகுதிரி வடிவில் அமைந்துள்ள இந்த நுளம்புத்திரி பல மணித்தியாலங்கள் (கிட்டத்தட்ட 5 மணித்தியாலங்கள்) நின்று எரிவதாகவும் சாம்பிராணி+ வேப்பமிலை போன்றவற்றின் வாசனை எழுவதாகவும் நுளம்புகளை விரட்டியடிப்பதாகவும் தெரிவித்த பாவனையாளரொருவர் புகைதான் சற்று அதிகளவில் வருவதாகவும் தெரிவித்தார்.
ஒன்று 5 ரூபா என்ற அடிப்படையில் விற்பனையாகும் இந்த ஹயாழ்ப்பாண நுளம்புத்திரி'யை யாழ்ப்பாணம்- சிவலிங்கப் புளியடியைச் சேர்ந்த தவமணி தவராசாஇ அவரது சகோதரி டயானா மற்றும் அருமைத்திருநாயகம் தேவகி ஆகிய மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த முயற்சியில் முன்னணியில் நின்று செயற்பட்டுவரும் தவராசாவை தொடர்பு கொண்டு கேட்டபோதுஇ தாம் ஏற்கனவே 2002 ஆம் ஆண்டில் இதேபோன்ற முயற்சியை மேற்கொண்டிருந்ததாகவும் ஆனால் நுளம்புத்திரிகள் வெளியிடங்களிலிருந்து கொண்டு வரப்பட்டு குடாநாட்டில் விற்பனை செய்யப்பட்டதால் அவற்றுடன் போட்டிபோட முடியாத நிலையில் அந்த முயற்சி கைவிடப்பட்டதாகத் தெரிவித்த தவராசாஇ தற்பொழுது யாழ்ப்பாணத்தில் நுளம்புத்திரிகளுக்கு பெரும் கிராக்கியுள்ளதால் தாம் மீண்டும் இம்முயற்சியை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
வேப்பம் இலைஇ வேப்பம் பட்டைஇ வேப்பம் வித்துஇ துளசிஇ இலுப்பம் விதைஇ சாம்பல்இ ஓமம்இ சாம்பிராணி மற்றும் சிறிதளவு இரசாயன பொருட்கள் போன்றவற்றை மூலப்பொருட்களாகக் கொண்டு தயாரிக்கப்படும் இந் நுளம்புத்திரி தற்பொழுது குடாநாட்டில் மெதுமெதுவாக பிரபல்யமடைந்து வருகின்றது. நகரப் பகுதியில் விற்பனையாகி வருகின்ற இந் நுளம்புத்திரி பெட்டிக் கடைகளுக்கும் செல்லத் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உள்ளூர் உற்பத்தியை யாழ்ப்பாண லயன்ஸ் கழகம் தமது பராமரிப்பின் கீழுள்ள இடம்பெயர்ந்தோர் வதிவிடங்களில் உபயோகித்து வருவதாகக் கூறப்படுகின்றது. சிறு கைத்தொழிலாக நடைபெற்று வரும் உங்களது முயற்சி எந்தளவுக்கு பயனைத் தந்துள்ளதென அந்த உள்ளூர் உற்பத்தியாளர் தவராசாவை கேட்டபோது;
"இதுவரையில் 2 ஆயிரம் 3 ஆயிரம் ஹநுளம்புத்திரி' களை உற்பத்தி செய்துள்ளோம். அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. கடந்த டிசம்பரில் தான் இந்த முயற்சியை மீண்டும் ஆரம்பித்தோம். எமக்கும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இட வசதியில்லை. ஆட்களுக்கு பற்றாக்குறையுள்ளது. பணப் பிரச்சினையுள்ளது. எம்மால் மாத்திரம் இதைத் தொடர்ந்து பெரியளவில் செய்ய முடியுமென நான் கருதவில்லை. தனியொருவராக இல்லாமல் ஒரு கூட்டு முயற்சியாக மேற்கொண்டால் பாரியளவில் பலனை பெற முடியும். எமது பணம் வெளியே செல்லாமல் தடுக்க முடியும்" என்றார்.
ஏற்கனவே பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி ஒட்டு வேலைகளைச் செய்தல்இ நெருப்புக் குச்சிகளைத் தயாரித்தல் போன்ற உள்ளூர் உற்பத்தி முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவித்த தவராசாஇ தற்பொழுது குடாநாட்டில் நெருப்பெட்டி விற்கும் விலைக்கு அதை உற்பத்தி செய்யும் முயற்சியில் ஈடுபடலாமெனவும் அதற்குரிய தரப்பினரிடமிருந்து அனுமதி தேவை எனவும் தெரிவித்தார்.
பக்க விளைவுகள் குறித்த சோதனைகள் நடைபெற்றனவா?
நீங்கள் தயாரித்து வரும் நுளம்புத்திரியை பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படுமாவென்பதை அறிவதற்காக உரிய சோதனைகளை மேற்கொண்டீர்களா எனக் கேட்டதற்குஇ
"அவ்வாறு பிரத்தியேகமாக எந்தச் சோதனைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால்இ லயன்ஸ் கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போன்ற பலரும் இதை பயன்படுத்துகின்றனர். நாம் பயன்படுத்தும் மூலப்பொருட்களால் எவ்வித விளைவுகளும் வரமாட்டாதென அவர்கள் கூறுகின்றனர்" என்றார் தவராசா.
எதிர்காலத்தில் என்ன செய்வதாக உத்தேசம் என தவராசாவிடம் கேட்டபோது;
"அது குடாநாட்டு மக்களின் கைகளில் தான் தங்கியுள்ளது. உள்ளூர்ப் பொருட்களை வாங்குவதை மக்கள் கௌரவக் குறைவாக கருதுவதை இங்கு காண முடிகின்றது. உதாரணத்துக்குச் சொன்னால்இ யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட ஹமில்க்வைற்' சவர்க்காரம் குடாநாட்டு மக்களால் பெருமளவு நுகரப்படவில்லை. ஆனால்இ அநுராதபுரம்இ புத்தளம் போன்ற பகுதிகளில் ஹமில்க்வைற்' உற்பத்திகளுக்கு கிராக்கியிருந்தது. அதாவது என்ன விடயமென்றால் தமது ஊரிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களை நுகருவதற்கு மக்கள் முதலில் தயாராக வேண்டும். அந்த நிலை ஏற்பட்டாலேயே எந்தவொரு உள்ளூர் உற்பத்தியும் வெற்றியளிக்கும்.
தற்பொழுது கொழும்பிலிருந்து நுளம்புத்திரி வருவதில்லையென்பதால் எமது தயாரிப்பை வாங்குகின்றார்கள். மீண்டும் கொழும்பிலிருந்து நுளம்புத்திரி வருமானால் இதை திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். எனவேஇ எதிர்காலத்தில் எதைச் செய்வதானாலும் முதலில் மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் எமது சுய பொருளாதாரத்தையும் கட்டி யெழுப்பமுடியும்இ எவரிடமும் கையேந்த வேண்டி வராது.
தற்பொழுது மெழுகுதிரி வடிவிலேயே நாம் நுளம்புத்திரியை தயாரிக்கின்றோம்இ உடையாமலிருக்க வேண்டும் என்பதற்காக சற்று பருமன்மிக்கதாகவே தயாரிக்கின்றோம். சுருள் வடிவில் தயாரிப்பதாயின் அதற்கான ஹமில்லிங் இயந்திரம்' தேவை. அது யாழ்ப்பாணத்தில் இல்லைஇ இதை விட பொதி செய்வதிலும் பல சிக்கல்கள் உள்ளன.
எனவேஇ பல தடைகளையும் தாண்டி எமது தயாரிப்பை முன்னேற்ற வேண்டுமாயின் எமக்கு உதவிகள் கிடைத்தாக வேண்டும். அது சிந்தனை ரீதியாக கூட இருக்கலாம். மக்களின் ஆதரவே மிக முக்கியமானது என கூறிமுடித்தார் அவர்.
யாழ்ப்பாண மக்களை கையேந்தும் நிலைக்கு ஆட்சியாளர்கள் தள்ளிவிட்டுள்ள போதிலும் "எம்மால் முடியும்" என்பதை பறைசாற்றும் விதத்திலேயே இந்த நுளம்புத்திரி உற்பத்தி பார்க்கப்படுவதாக அவதானிகள் கூறுகின்றனர்.
முன்னர் சவர்காரத்தை ஆட்சியாளர்கள் தடைசெய்தபோது யாழ்ப்பாணம் பனம்பழத்தில் உடுப்புத் தோய்த்ததுஇ
மின்சாரம் மண்ணெண்ணையை தடை செய்த பொழுது யாழ்ப்பாணம் ஈருருளிகளைச் சுற்றி படம் பார்த்தது. தேங்காய் எண்ணெய் குப்பிவிளக்கை வடிவமைத்து படித்ததுஇ பெற்றோலை தடை செய்த பொழுது யாழ்ப்பாணம் மண்ணெண்ணெயில் பெற்றோலை குழாய் வழியே துளித்துளியாக ஊற்றி அதை ஊதி ஊதி உந்துருளியை ஓட்டியது. இவ்வாறு தொடரும் சாதனைப் பட்டியலில் இன்றைய நுளம்புத்திரியும் இணைந்துள்ளது எனலாம்.(இந்திய அமைதிப்படை வந்த காலத்தில் கூட நுளம்புத்திரி உற்பத்தி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது).
எது எவ்வாறிருந்தாலும் கொழும்பில் தொங்கி வாழ்வதால் ஏற்படக்கூடிய விளைவுகளை இன்று நாம் கண்முன்னே காண்கின்றோம். இந்த நிலையை நிரந்தரமாக நீக்க வேண்டுமானால் தவராசாவின் ஆதங்கமான உள்ளூர் உற்பத்திகளை மக்கள் நாட வேண்டியதே ஒரே வழி.
இந்த உள்ளூர் உற்பத்தி முயற்சிக்கு உதவ விரும்புவோர் தவராசாவின் 077- 9061568 என்ற கையடக்க தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளலாம்.
முகவரி: இல: 6, கனகசபை வீதி, சிவலிங்கப் புளியடி, வண்ணார் பண்ணை, யாழ்ப்பாணம்.
Sunday, January 14, 2007
11.அன்று கண்ட பொங்கல் என்று வரும்
வீடுகள் எங்கும் எழுகிறதே... புதியவரும், மூதாட்டியும், இளைஞரும், இள நங்கையரும், சிறுமியரும் கலந்து எழுப்பும் பொங்கலோ பொங்லென்ற இசை எங்கும் இல்லை. இருந்திடத்தக்க விதமான சமூக அமைப்பே இல்லை. இதனால் தான் தமிழர் திருநாள் என்றனர்.
தை முதல் திருவள்ளுவர் ஆண்டு பிறக்கிறது. பொங்கல் என்பதும் தமிழர்களின் புத்தாண்டாகவும் மலர்கின்றது. தமிழர் வாழ்வில் வரும் வீரத்திருநாளாகவும் மிளிர்கின்றது. சிந்திய பனியும், உழவரைத் தீண்டிய குளிரும், உழைப்பின் உறுதியும், களைப்பின் வெகுமதியும், எண்ணிய ஏற்றமும், திண்ணிய நெஞ்சமும், விளைவின் வளமும், தாங்கிய நிலையில் வரும் நீல வானம் தமிழர்களை ஒன்று சேர்க்க வரும் திங்களாகத் திகழும். எழுத்தும் பேச்சும் வீரத்திருநாளில் தமிழே எனும் மூச்சாக பொங்கல் பொங்கும். உழைப்பில் தோன்றும் மகிழ்வில் மங்களம் சேர்க்கும். எங்கோ ஏகி விலகி நிற்கும் செங்கதிரோன் எண்கணிப்பில் விஞ்ஞானம் தன்னிலும் ஞானவியல் படைத்த பங்கு வென்றிடும்.
ஆடி முதல் தை வரைக்கும் அயாரது வயல் வெளியில் ஓடி உழைத்த மக்கள் ஓய்வு பெறும் முதல்நாள் கணிப்பும், உழவுக்கு துணை போன அனைத்துக்கும் நன்றி செலுத்தும் பண்பாடும் உண்டு. இங்குதான் பொங்கல் விழா தொடர்பான அர்த்தங்கள் அல்லது தத்துவங்கள் கணிசமான முக்கியத்துவம் பெறக் காண்கிறோம். பொங்கல் விழாவை நாட்டின் காலநிலையோடு தொடர்புபடுத்திய முக்கியத்துவம் கொடுக்கும் தன்மை தமிழனின் மேன்மை நிலையை காட்டுவதாயும் அவதானிக்கலாம். ஆடி, ஆவணி, புரட்டாதி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களை உள்ளடக்கிய ஆறு மாதங்களிலும் தெற்கு நோக்கி இருந்த சூரியன் தை மாதம் முதலாம் திகதியிலேயே வடக்கு நோக்கித் திரும்பும்.
தை மாதத்திற்கு முற்பட்ட ஆறு மாத காலத்தையும் தட்சிணாயனம் என்பார்கள். அதாவது சூரியன் தெற்கு நோக்கிச் செல்வதால் இந்தக் காலப்பகுதியில் பல இயற்கைச் சீரழிவுகள் ஏற்படும். கடைசி மாதமான மார்கழி மாதத்தைப் பீடை பிடித்த காலமாகவே நம்மவர் கருதுவர். மார்கழி மாதத்து கடல்கோள் அனர்த்த அதிர்ச்சி என்று மறையும்?
மார்கழி மாதத்தைச் சூன்ய மாதம் என்றும் சொல்வார்கள். இதனால் இந்த மாதத்தில் விசேட கருமங்களை செய்வதை நம் முன்னோர் நிறுத்தினர். தை முதற் திகதியிலேயே சூரியன் தெற்கே இருந்து வடக்கு நோக்கித் திரும்பும். இக்காலத்தை உத்தராயண காலம் எனக் கணித்தனர். பீடைகள் நிறைந்த மார்கழி நீங்கி உத்தராயணம் தோன்றுவதை எண்ணிய தமிழர் இக்காலநிலை அமைப்புக்கு உட்பட்டதால் பொங்கிப்படைத்து கொண்டாடினர். சூரியன் வடக்கு நோக்கித் திரும்பும் முதல் நாளிலேயே தம்மை பிடித்திருந்த பீடைகள் நீங்கும் என்று தமிழர் பூரணமாக நம்பிக்கை வைத்துள்ளனர்.
சூரியனின் வடக்கு நோக்கிய பார்வையும் இந்த நம்பிக்கைக்கு ஒரு காரணமாய் அமைகின்றது. இத்தகைய நாளை திருநாளாகப் பெருநாளாக உண்மைப் பொங்கல் விழாவாக எடுத்தனர். தை மாதம் முதல்நாளை புண்ணிய காலமாக கருதியதோடு நில்லாது அதற்கு மேலாக சூரியனைக் குறித்து வழிபடும் சிறப்பு நாளாகவும் கொண்டுள்ளனர். தை முதல் நாள் தமிழர்களாகிய எல்லோருக்கும் விசேடமான நாள் என்பதால் இந்தப் பொன்நாள் தமிழர் திருநாள் என்றானது. உத்தராயண காலத்தோடு தொடர்பான இந்தப் பொங்கல் விழா இந்தியாவில் நான்கு நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுவதாக உள்ளது. முதல் நாள் போகிப்பண்டிகை, இரண்டாம் நாள் பொங்கல் திருவிழா, மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல், நான்காம் நாள் காணும் பொங்கல். இந்த நான்கு நாட்களும் இந்தியாவில் சிறப்புப்பெறும் நாளாகத் திகழ்கின்றது. தமிழீழத்தில் இந்த நான்கு நாள் சிறப்பு இடம்பெறுவதில்லை.
ஈழத்தில் முக்கியமாக தை முதல் திகதியின் பொங்கலே விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. தை மாத முதல்நாள் பொங்கலுக்கான ஆயத்தங்கள் சிறப்பாக இடம்பெறும். இத்திருநாள் சூரியனுடன் தொடர்புபடுத்தப்பட்டிருந்தது. பயிர் பச்சைகள் செழிக்க சூரிய சக்தி இன்றி அமையாதது. சூரியனால் அதிக பயனைப் பெற்ற உழவர்கள் தாம் பாடுபட்டு விளைவித்த அத்தனை பொருட்களையும் பொங்கிப்படைத்து வழிபடுவார்கள். சூரியனால் மழை பெய்கின்றது, பூமி விளைகின்றது. மழை மூலமே நாடு, நகர் செழிப்படைந்து மக்கள் இன்பபோகங்களை நுகர்ந்து வாழக் காரணமாகியது. இந்தப் பொங்கல் சிறப்பின் மகிமைதனை முற்றத்துப் பொங்கலில் நாம் காண்போம்.
காலை உதயத்தைத் தரிசிக்க மக்கள் வண்டுகளாய் கூடுவர். புத்தடுப்பு வைக்கப்படும். முற்றம் கோலமிடப்பட்டு காலமிடும் செழிப்பாய் காணப்படும். பொங்கல்காரர் வருவார், மகிழ்ச்சிக்களிப்பில் ஆடுவார். குடும்பம் புத்தாடை கட்டி அழகு காட்ட, முதல் நாள் ஆச்சி களிமண்ணில் பிடித்த புது அடுப்பு, முனை உடையாத செங்கல், கழுவிக்கோலம்போட்டு பொங்கல்காரர் செங்கதிரோன் எழும் திசை காண வைப்பர். புதுப்பானை, மஞ்சள், இஞ்சி, மாவிலை கட்டி கோலமிடப்பட்டிருக்கும் புது அடுப்பில் புது நெருப்பு மூட்டியதும் புதிய பானை கொஞ்சம் சரிந்திருக்க வைப்பார். அப்போதுதான் கிழக்கு முகமாக பொங்கல் பொங்கும். பொங்கல்காரர் புத்தரிசி கொள்ள அறுகம் புல்லும் போடுவார். அங்கால கரும்பு சுவைக்க நாவுறும் பொங்கல் பொங்கப்படும்.
முற்றத்தின் வாசம் தமிழ் மணமாய் எழும். உற்றதுணை சுற்றமோடு இசை முழங்கும் பொங்கலோ பொங்கல். எங்கள் வாழ்வின் திங்களே, பொங்கலோ பொங்கல். சீனவெடி, ஈக்கில் வானம், மூலை வெடி, கடலைப்பட்டாசு என முழங்கும். காளை மாட்டுப்பந்தயங்கள், சேவல் சண்டைகள் ஆங்காங்கு போட்டி ஆட்டமாய் நடக்கும். முற்றவெளியெங்கும் கலை நிகழ்வுகள் களைகட்டும். அன்று புன்னகைக்குப் பொட்டுவைத்து இன்பமுற்ற தமிழ்த்திருநாள். சாதி மதமற்ற சந்தோஷத்திருநாள். கத்தோலிக்க ஆலய முற்றத்திலும் ஆராதனை வழிபாட்டிலும் அகமகிழ்ந்து வணங்கிய புண்ணிய நாள். பிரசங்கத்தில் மதம் வேறாகலாம். ஆனால், சாதி ஒன்றுதான். மதம் என்பது மதி. அதாவது நமது புத்திக்கேற்ற கொள்கையைச் சேர்ந்தது சாதி. நாமெல்லோரும் தமிழ்ச்சாதி.
"நமது பக்திக்கேற்றதும், பண்பாட்டிற்குரியதும், ஒற்றுமையின் வலியதுமான தமிழர் திருநாள்". இப்படியாக பாதிரியார் யாழ்ப்பாணத்துக் கோயிலில் பிரசங்கம் பொழிந்ததைக் கேட்ட நாங்கள் எங்கள் கவலைகள், துன்பங்கள், பசி பட்டினி அறியாத மதச்சார்பற்ற அற்புதமான திருநாள். எப்படி கூடிக்குலாவி மகிழ்ந்துண்டு வாழ்ந்தனர். எல்லோரும் தத்தமது இயல்புக்கு ஏற்றத்தைப்பிறருக்கு வழக்கி மனித நேயம் காத்தனர் இன்பப் பொங்கல் பொதுவெனும் பூங்காவில் பூத்த மலரென மணந்து மணம் வீசினர். சமத்துவ சகோதரத்துவ சங்கமப்பண்பாட்டின் சிறப்பின் உச்சமே பொங்கல் என விளங்கும். உலகிலோர் விழாக்களில் உயர்வானதாகத்துலங்கும் தமிழர் பொங்கல்.
அன்று எருதுகள், பசுக்கள் பிரதானமாக ஏன் தெய்வமாகக் கூடக் கருதும் வழக்கத்திற்கு முக்கியத்துவம் உண்டு. பசுக்களை செல்வமாகக் கருதிய பண்டைய வரலாறுகள் தெளிவுபடுத்துகின்றன. ஒருவன் வைத்திருக்கும் பசு நிரைகளைக் கொண்டு அவனின் பொருளாதார நிலை கணிக்கப்பட்டதுண்டு. எருதுகள், பசுக்கள் உழவுத் தொழிலுக்கு இன்றியமையாதவை. இவற்றை பூசிக்கும் நாளாக மாட்டுப் பொங்கல் நாள் அமைகின்றது. இப்பொங்கலையும் தமிழன் இவற்றுக்கு ஆற்றும் நன்றிக்கடன் எனக்கொண்டு தன் செய்நன்றி மரபை மேன்மைப்படுத்துகிறான்.
இந்த நாட்களில் பசுக்கள், காளை மாடுகள் தூய்மைப்படுத்தப்பட்டு அலங்கரித்து அவற்றுக்கும் பொங்கல் பொங்கி வழிபடுவர். இப்பொங்லை பட்டிப் பொங்கல், ஆய்வுடையார் பொங்கல் என்றும் கூறுவதுண்டு. காணும் பொங்கல் எனும் நான்காவது விழா இந்தியாவில் சிறப்புப் பெற்றது. இலங்கையில் நடப்பதாக அறிதல் அரிது. வயலிலும் தோட்டங்களிலும் நல்ல விளைச்சல் இருப்பதை வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகளுக்குக் காட்டும் திரு நாளாக இதனைக் குறிப்பிடுவர். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் என்றும் பூப்பொங்கல் என்றும் அழைப்பதுண்டு. இந்தப் பொங்கல் விழாவானது உழவருக்கே உரியது என்ற நிலையைக் கடந்து சிறப்பாக அனைத்து தமிழ் மக்களுக்கும் நம்பிக்கையையும், ஈடுபாட்டையும் தனியே உழவுக்கு துணைபோனவற்றுக்கும், சூரியனுக்கும் நன்றி செலுத்தும் அர்த்தத்தைக் கடந்து ஒற்றுமை, சகோதரத்துவம், பல்லுயிரோம்பல் போன்ற மனிதயம் சார்ந்த தன்மைகளையும் உள்ளடக்கிய பொங்கல், உலகிடை புதிய அர்த்தங்கள் பலவற்றையும் கொடுக்கும் விழா.
இந்தப் பெருவிழாக்கொண்டாட்டத்தின் பரிமாணத்தை அன்று நாம் கண்டது போல் இன்று நாம் காண முடிகிறதா? இந்த மெய்யன் பின் தமிழர் திருநாளை, விருந்தோம்பலில் சிறந்த தமிழன் பொன்னாளை இக் கவிதையில் எப்படி என்று காண்பீர்?
நாங்காய்! விழாவா? நமக்கா? ஏதுக்கடி?
அங்கே பார்! தாய் மண் அழிதல் பார்!
இங்கு வா!
தங்கச்சிலையே ! அடுப்பைத் தகர்த்தெறி!
பொங்கல் விழா வேண்டாம்! போ!
துணி இழந்தாள் ஈழத்தமிழிச்சி ! காமப்
பிணியுடையார் கைப்பட்டுப் பிய்ந்தாள் மணிச்சிட்டே!
இத்தனை கண்டும் விழாவா? நெருப்பினுள்
புத்தாடையைத் தூக்கிப் போடு!
இப்படிப் பாடுகின்றார் உணர்ச்சிக்கவிஞர் காசியானந்தன். எப்படி நாம் பொங்கலை இன்று காண்போம்? உழுதுண்டு வாழும் வயல்வெளியெங்கும் போர்க் காலமாக நிற்கும் காலம். மக்களெல்லாம் பசி பட்டினிச் சாவில் துன்பப்படும் வேளையில் இன்று எப்படி அன்றைய பொங்கல் பொங்கும்? இதைத் தான் நானும் இன்று பாடினேன்.
தேன் வாழ்வைத் தருமின்பத் திங்கள்
செங்கரும்பு தித்திக்கும் பொன் நாள்
செங்கதிரோன் ஒளியின் முற்றத்தில்
எங்கள் குலம் தமிழ் பொங்க வேண்டும்
வீரியமாய் எழுகின்ற புதிய தேசத்தில்
போரில்லாப் பொன்னுலக பூவசந்தம்
யாரெதிர்த்த போதும் பூக்க வேண்டும்
முற்றத்துப் பொங்கல் சிரிக்க வேண்டும்
இனிய தமிழ் நெஞ்சங்கள் சுற்றம் சூழ
தெருவாசல் எங்கும் காதலிசைபாடி
மரகதமயில் ஆடிக்களிக்கும் மகிழ்வில்
ஊடியாடிப் பொங்கல் பொங்க வேண்டும்
தமிழனாக நடமாடும் தேனாட்டினில்
தங்கி நிற்கும் பகையழிந்து தமிழ்வீரன்
தட்டியெழுப்பும் களநாடு சுதந்திரமாய்
தமிழர் திருநாள் தென்றல் தழுவ வேண்டும்
இப்படியாக கவிதைகள் ஆயிரம் இன்று அன்று கண்ட பொங்கல் என்று வரும்?
-மா.கி.கிறிஸ்ரியன்(பிரான்ஸ்)
www.thinakkural.com
10.போக்கிரி , ஆழ்வார் நேற்று ரிலீசானது!!!!
படம் பார்த்த நண்பர்கள் போக்கிரி சூப்பர் என்றும் ஆழ்வார் பக்திப் படம் போல அவதாரப் படம் என்றும் சொன்னார்கள்.
ஆனால் நான் இன்னும் பார்க்கவில்லை.
படங்களுக்கான சில முன்னோட்டங்கள்
போக்கிரி:
திரை ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள படங்கள் போக்கிரியும், ஆழ்வாரும்தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தலயும், இளைய தளபதியும் நேருக்கு நேர் மோதும் படம் என்பதாலும், ஆதி படம் விஜய்யை வாரி விட்டது, வரலாறு மூலம் அஜீத் மீண்டும் வீறு கொண்டு எழுந்திருப்பதும் இந்த எதிர்பார்ப்புக்கு முக்கியக் காரணம்.
போக்கிரி படத்தை இயக்கியிருப்பவர் பிரபு தேவா. விஜய்யுடன் அதகளம் பண்ணியிருப்பவர் ஆசின். படம் முழுக்க இளமைத் துள்ளளும், அதிரடி ஆக்ஷனும், மின்னல் ஆட்டமும் நிறைந்து விஜய் ரசிகர்களுக்கு மாபெரும் விருந்து படைக்க காத்திருக்கின்றன.
ஏற்கனவே பாடல்கள் முழுவதும் ஹிட் ஆகி ரசிகர்களை சூடேற்றி சுதியேற்றி வைத்துள்ளன. படத்தைப் பார்க்க விஜய் ரசிகர்கள் படு வேகமாக காத்திருக்கிறார்கள்.
இப்படத்தில் ஒரு பாதியில் ரவுடியாக வருகிறார் விஜய், இன்னொரு பாதியில் போலீஸ் அதிகாரியாக அவதாரம் பூணுகிறார். போலீஸ் அதிகாரி வேடத்தில் விஜய் நடித்துள்ள முதல் படம் இதுதான். படத்துக்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
தெலுங்கில் இதே பெயரில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற படம்தான் போக்கிரி. தமிழிலும் கலக்குமா என்பது ரசிகர்கள் கையில் உள்ளது.
ஆழ்வார்:
வரலாறு மூலம் அத்தனை பேருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்த தல அஜீத், ஆழ்வார் மூலம் தனது எழுச்சியை கன்பார்ம் பண்ண வருகிறார். இதில் அவருக்கு ஜோடி ஆசின்.
தொடர்ந்து தோல்விகளையத் தந்து வந்த நிலையில் வரலாறு, அஜீத்துக்கு பெரும் பிரேக் கொடுத்தது. அந்த சூட்டோடு, ஆழ்வார் படமும் வெளியாவதால் தல ரசிகர்கள் தலை கால் புரியாத சந்தோஷத்தில் உள்ளனர்
படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். விநியோகஸ்தர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பாம். அத்தனை ஏரியாக்களிலும் சூப்பர் ரேட்டுக்கு படம் விற்றுள்ளதாம். 200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் தமிழகத்தைக் கலக்கப் போகிறார் ஆழ்வார்.
தாமிரபரணி:
தொடர்ந்து வெற்றிப் படங்களையே கொடுத்து வரும் அல்லது வெற்றி பெறும் படங்களில் இடம் பெற்று வரும் விஷால் நடித்து வெளியாகவுள்ள அதிரடி ஆக்ஷன் படம் தாமிரபரணி.
ஹரி இயக்கியுள்ளார். விஷாலுக்கு ஜோடி புதுமுகம் பானு. படம் வெளியாவதற்கு முன்பு பானு பாப்புலராகி விட்டார். பிரபு, நதியா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. விஷால் இந்தப் படத்திலும் முத்திரை பதிப்பாரா என்பது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
பருத்தி வீரன்:
அதிகம் எதிர்பார்க்கப்படும் இன்னொரு படம் பருத்தி வீரன். சூர்யாவின் தம்பி கார்த்திதான் இதில் ஹீரோ. அமெரிக்கா வரை போய்ப் படித்து வந்தவரை அசல் பட்டிக்காட்டானாக மாற்றி, படம் முழுக்க வேட்டி, சட்டையில் அலைய விட்டிருக்கிறார் அமீர்.
முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் கார்த்தியும் ரணகளமாக நடித்திருக்கிறாராம். அவருக்கு ஜோடி பிரியா மணி. இந்தப் படத்தை அவர்தான் ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். படம் முழுக்க அவருக்கு பாவாடை, தாவணிதானாம்.
இதுவரை காதுகளை மட்டுமே கிறுகிறுக்க வைத்த யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக மனதை கரைய வைக்கும் கிராமத்து இசையை இப்படத்தில் தவழ விட்டுள்ளார்.
இந்தப் படத்தின் வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்று என்று படு தெம்பாக உள்ளது பருத்தி வீரன் டீம்.
குரு:
இப்படம் பொங்கலுக்கு முன்பே வந்து விட்டது. இந்தியில் மணிரத்தினம் எடுத்து குரு தமிழிலும் அதே பெயரில் வெளியாகியுள்ளது.
அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மாதவன், மிதுன் சக்கரவர்த்தி என பெரும் பெரும் தலைகள் எல்லாம் படத்தில் உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. அம்பானியின் கதை என ஏற்கனவே பரபரப்பாகி விட்ட இப்படம் இந்தி பெல்ட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்.
மணிரத்தினத்தின் தமிழ்ப் படம் வந்து ரொம்ப நாளாகி விட்டதால் குருவை அவரது ரசிகர்கள் ரசிக்க ஆரம்பித்துள்ளனர்.
பச்சைக்கிளி முத்துச்சரம்:
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இன்னொரு முக்கியப் படம் பச்சைக்கிளி முத்துச்சரம். வெற்றி இயக்குநர் கௌதமின் இயக்கத்தில், சரத்குமார், ஜோதிகா நடிப்பில் கோர்க்கப்பட்டுள்ளது இந்த முத்துச்சரம்.
அசத்தல் அழகி ஆண்ட்ரியாவும் படத்தில் இருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜின் எலக்ட்ரிக் இசையில் படத்தின் கதை பெரும் எதிர்பார்ப்புக்குரியதாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு படு வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளாராம் சரத்.
சபரி:
சஃபாரி, சூட், கோட்டுடன் விஜயகாந்த் நடித்துள்ள மற்றும் ஒரு 'விஜயகாந்த் டைப்' படம்.
ஆனால் இப்படத்தில் விஜயகாந்த் படு வித்தியாசமாக நடித்துள்ளார் என்று பரவலாக பேச்சு கிளம்பியுள்ளது. விஜகாந்த்துக்கு ஜோடியாக நடித்திருப்பவர் ஜோதிர்மயி, மாளவிகாவும் படத்தில் இருக்கிறார். மாளவிகாவுக்கு கிளாமர் பார்ட்டை பக்காவாக கொடுத்துள்ளனராம்.
மெகா பட்ஜெட்டில் சேலம் சந்திரசேகரன் தயாரித்துள்ள இப்படத்தில் விஜயகாந்த் டாக்டராக நடிக்கிறாராம். டாக்டராக இருந்து கொண்டு அக்கிரமக்காரர்களை தோலுரித்து, துவையல் போடும் வேலையாம் அவருக்கு.
ரமணாவைப் போல இந்தப் படமும் பேசப்படும் என்று நம்பிக்கையுடன் உள்ளது சபரி வட்டாரம்.
வீராசாமி:
ஏ டண்டணக்கா, ஏ டணக்குணக்கா என்று ரொம்ப நாளைக்குப் பிறகு ஆடிப் பாடி அமர்க்களம் செய்ய வருகிறார் வீராசாமி. விஜய டி.ராஜேந்தர் முற்றிலும் அட்டகாசமான வேடத்தில் நடித்துள்ள படம் வீராசாமி.
ஹீரோ என்ற பெயரில் ஒரு சின்னப் பையனை ராஜேந்தர் அறிமுகம் செய்தாலும், ராஜேந்தர்தான் படம் முழுக்க கபடி ஆடியிருக்கிறாம். மும்தாஜுக்கு இதில் அழுத்தமான வேடமாம்.
ராஜேந்தரும், மும்தாஜும் சேர்ந்து ஆடிப் பாடியிருக்கும் டூயட் பாட்டு ஏற்கனவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ராஜேந்தர் அரசியல்வாதியாக வருகிறார். அவரைக் காதலிக்கிறார் மும்தாஜ். ஆனால் அது கை கூடாமல் இன்னொரு அரசியல்வாதியின் மனைவியாகி விடுகிறார்.
போன இடத்தில் புருஷன் போட்டு தாக்க அடி உதை பட்டு இன்னல்படுகிறார் மும்தாஜ். முன்னாள் காதலியின் நிலையை எண்ணி ரத்தக் கண்ணீர் பிளஸ் உப்புக் கண்ணீர் வடிக்கிறார் ராஜேந்தர். காதலின் வலியை தத்ரூபமாக சொல்லியிருக்கிறாராம் ராஜேந்தர்.
படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ஓரளவுக்கு ஹிட் ஆகி விட்டன. படமும் ஹிட் ஆகும் என்று டேபிளில் தட்டி தெம்பாக சொல்கிறார் ராஜேந்தர். மேக்னா நாயுடுவும் படத்தில் இருக்கிறார். ஸோ, டபுள் தெம்பாக அவர் இருக்கலாம்.
இந்தப் படங்கள் தவிர மேலும் சில படங்கள் திரைக்கு வருமா, வராதா என்ற குழப்பத்தில் உள்ளன.
Saturday, January 13, 2007
9.இராசதந்திர களத்தின் தளபதி பாலா! - பழ. நெடுமாறன்
தமிழீழத்
தேசியத் தலைவர் பிரபாகரன் முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த அனைத்துத்
தம்பிகளாலும் பாலா அண்ணை என அன்போடு அழைக்கப்பட்டு நேசிக்கப்பட்டவர்தான் மறைந்த
பேராசிரியர் அன்றன் பாலசிங்கம் அவர்கள்.
1980களின் தொடக்கத்தில் அவரும் நானும்
அறிமுகமான நிகழ்ச்சி வேடிக்கையானதாகும். தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கியத்
தலைவர் ஒருவருடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது "பிரபாகரனுக்கு தவறான ஆலோசனை தந்து
அவரைக் கெடுப்பவர் பாலசிங்கம்' என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. எனக்கு அப்போது
அவரைப்பற்றி எதுவும் தெரியாது. எனவே நான் சென்னையிலிருந்த பிரபாகரனைச்
சந்திக்கும்பொழுது பாலசிங்கம் குறித்து என்னிடம் கூறப்பட்ட குற்றச்சாட்டை
எடுத்துக்கூறினேன். இதைக்கேட்டப் பிரபாகரன் புன்னகை செய்தார். அந்தப் புன்னகையின்
பொருள் எனக்கு அப்போது விளங்கவில்லை. அவர் பேச்சை மாற்றி வேறு விசயங்கள்
குறித்துப் பேசினார். பிறகு நான் விடைபெற்றுக் கொண்டு வந்துவிட்டேன்.
மறுநாள்
காலையில் எனது இல்லத்திற்கு விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் பேபி
சுப்பிரமணியம் (தற்போது இளங்குமரன்) புதியவர் ஒருவரை அழைத்துக்கொண்டு என்னைச்
சந்திக்க வந்தார். "இவர்தான் பாலசிங்கம்" என அறிமுகப்படுத்தி வைத்தார். பிறகு
அவருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். மார்க்சிய சிந்தனையாளரான அவர் தமிழீழ
விடுதலைக்குத் தன்னை எந்த அளவுக்கு அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறார் என்பது அவரது
பேச்சின் மூலம் எனக்கு புலனாயிற்று. அவரது பேச்சில் வெளிப்பட்ட கண்ணியம், ஆழமான
கருத்தோட்டம் ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தன.இவரைப்பற்றியா இப்படியொரு
குற்றச்சாட்டு எழுந்துள்ளது என என் மனதிற்குள் நான் வியந்தேன். இந்த முதல்
சந்திப்பிற்குப் பிறகு எத்தனையோ முறை நாங்கள் அடிக்கடி சந்தித்து அளவளாவி
இருக்கிறோம்.
border=1>
தமிழ்நாட்டில் பாலா தங்கியிருந்த
காலத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் காவல்துறை அதிகாரிகள், மத்திய உளவுத்துறை
அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் போன்ற பல்வேறு தரப்பினரிடமும் அவர் நல்லுறவைக்
கொண்டிருந்தார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டுவதில் அந்த
நல்லுறவை முழுமையாகப் பயன்படுத்தினார். அவர் ஒருபோதும் தன்னை
முன்னிலைப்படுத்திக்கொண்டது கிடையாது. தான் தலைவராக ஏற்றுக்கொண்ட பிரபாகரன்
தன்னைவிட வயதில் இளையவராக இருந்தும் அவரையே முன்னிலைப்படுத்தினார். அவர் மூலமே
தங்களின் தாயகம் விடுதலைபெற முடியும் என உறுதியாக நம்பினார்.
சிறந்த
சிந்தனையாளராக, சிறந்த இராசதந்திரியாக, மென்மையும் உறுதியும் நிறைந்தவராக அவர்
திகழ்ந்தார். விடுதலைப் புலிகளின் இயக்கத்திற்குத் தத்துவ ஆசிரியராக திகழ்ந்தார்.
பிரபாகரனின் எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்தார். ஆயுதம் தாங்கிப் போராடும்
போராளிகளின் அரசியல் அறிவும் கூர்மைப்படுத்தப்படவேண்டும் என நினைத்தார். அதற்காக
அவர்களுக்கு அரசியல் வகுப்புகளை நடத்தினார். உலகப் போராட்ட இயக்கங்களின் வரலாறுகளை
அவர்களுக்குப் படம் பிடித்துக் காட்டினார். இப்படி எல்லா வகையிலும் விடுதலைப்
புலிகள் இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்து வந்தார்.
அவர் படித்த படிப்புக்கு
எங்கேயேனும் பேராசிரியர் பதவியையோ தூதரக உயரதிகாரி பதவியையோ எளிதில் பெற்று
சுகமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கக்கூடும். ஆனால் பிரபாரகன் அவர்களின் அழைப்பை ஏற்ற
கணமுதல் தன்னை முழுமையாக தமிழீழ விடுதலைக்காக அர்ப்பணித்துக்கொண்ட உண்மையான
ஈகியாகத் திகழ்ந்தார்.
பிரபாகரன் அவர்களுக்கும் பாலா அவர்களுக்கும் இடையே நிலவிய
நட்பு ஆழமானது. இதயப்பூர்வமானது. பிரபாகரன் அவர்கள் அவரைப்பற்றிக்
குறிப்பிடும்போது, பாலா அண்ணை என மதிப்புடன்தான் குறிப்பிடுவார். பாலா அவர்களும்
தலைவர்க்குரிய எல்லா மரியாதையையும் பிரபாகரனுக்கு அளித்துப் பழகினார்.
விடுதலைப்
புலிகள் இயக்கத்திற்கு சர்வதேச அளவில் அறிமுகமும் அங்கீகாரமும் கிடைக்க பாலா
பெரிதும் காரணமாக இருந்தார். இதன் காரணமாகவே அவர்மீது பிற இயக்கங்கள் பொறாமையும்
கோபமும் கொண்டிருந்தன. 1985ஆம் ஆண்டு சென்னையில் அவரைப் படுகொலை செய்யவும்
பலமுறை முயன்றனர்.
பாலாவின் சாதனைகளில் குறிப்பிடத்தக்கது திம்பு
பேச்சுவார்த்தையில் அவரது பங்களிப்பாகும். பிற போராளி இயக்கங்களையும் தமிழர்
விடுதலைக் கூட்டணியையும் ஒன்றுபடுத்தி ஈழத்தமிழர்களின் பிரச்சினை தீர நான்கு
அடிப்படைக் கோட்பாடுகளை வலியுறுத்தும் தீர்மானத்தை அம்மாநாட்டில் அவர்
முன்மொழிந்தார். அதை மற்றப் போராளி இயக்கங்களும் வழிமொழிந்தன. சிங்கள அரசு
இத்தீர்மானத்தை ஏற்க மறுத்தது இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி
இத்தீர்மானம் கண்டு ஆத்திரமடைந்தார். ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளை மிரட்டினார்.
அவருக்குச் சரியான பதிலடியை அம்மாநாட்டில் பாலா கொடுத்தார். இதைக்கண்டு
ஆத்திரமடைந்த இந்திய அரசு அவரை இந்தியாவிலிருந்து வெளியேறும்படி
உத்திரவிட்டது.
சத்தியேந்திரா, சந்திரகாசன் ஆகியோரையும் வெளியேறும்படி
ஆணையிடப்பட்டது. இதை எதிர்த்து டெசோ அமைப்பின் சார்பில் போராட்டம் நடத்தி
பல்லாயிரக்கணக்கானவர்கள் சிறை சென்றோம். அதற்குப் பின்னரே அரசு பணிந்தது. அரசு
பணிந்து வெளியேற்ற உத்திரவை ரத்து செய்தது. 1986ம் ஆண்டில் மே மாதம் மதுரையில்
மிகப்பெரிய டெசோ மாநாட்டினை நடத்தினோம். அதன் வரவேற்புக்குழுத் தலைவராக நானும்
மாநாட்டுத் தலைவராக கலைஞர் கருணாநிதியும் இருந்தோம். அந்த மாநாட்டுக்கு முதல் நாள்
நடைபெற்ற அனைத்துப் போராளி இயக்கங்கள், தமிழர் விடுதலைக் கூட்டணிப் பிரதிநிதிகள்
கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் சார்பில் பாலா கலந்துகொண்டார். மாநாட்டில்
அனைத்திந்தியத் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். அந்த மாநாட்டுத் தீர்மானத்தை
வடிவமைப்பதிலும் பாலா முன் நின்றார்.
இந்திய அமைதிப்படை இலங்கை சென்று தமிழீழ
விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க முயற்சிசெய்தபோது, இந்தியப் பிரதமர், தமிழக அரசியல்
தலைவர்கள் பத்திரிகைகள் ஆகியவற்றிற்கு அவர் அவ்வப்போது எழுதிய கடிதங்கள்
புகழ்பெற்றவையாகும். இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்கள் குறித்து அவர் எழுதிய
பிரசுரங்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் பெரும் கிளர்ச்சியைத் தோற்றுவித்தன.
களத்திலே பிரபாகரன் தலைமையிலே விடுதலைப் புலிகள் போராடிக்கொண்டிருந்தபோது.
இராசதந்திர களத்தில் அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் அரும்பணியை பாலா
மேற்கொண்டிருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் அவர் காட்டிய விவேகமும்
உறுதிப்பாடும். வியக்கத்தக்கவையாகும்.
பின்னர் இலங்கையில் பிரேமதாசா பதவிக்கு
வந்தபிறகு அவருடன் புலிகளின் சார்பில் பாலா, யோகி ஆகியோர் பேச்சுவார்த்தை
நடத்தினர். அந்தச் சமயத்தில் பிரபாகரன் அவர்களின் அழைப்பை ஏற்று நான் தமிழீழம்
சென்றேன். அப்போது கொழும்பில் பாலா அவர்களைச் சந்தித்து நீண்ட நேரம் பேசக்கூடிய
வாய்ப்பு கிடைத்தது. பேச்சுவார்த்தை நிலவரங்கள் குறித்து அவரும் இந்தியத் தமிழக
அரசியல் நிலவரங்கள் குறித்து நானும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டாம்.
மட்டக்களப்பில் நடைபெற்ற மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் அவரும் நானும் கவிஞர்
காசிஆனந்தன் அவர்களும் பேசினோம்.
சர்க்கரை நோயின் காரணமாக பாலா அவர்கள்
உடல்நலம் குன்றியிருந்த செய்தியறிந்து மிக வருந்தினேன். இலங்கையில் இருந்து
இந்தியாவுக்கு அவரைச் சிகிச்சைக்காக அழைத்து வரலாம் என்று நினைத்து அதற்கான
முயற்சிகளில் ஈடுபட்டேன். ஆனாலும் இந்தியத் தமிழக அரசுகள் இந்தியாவுக்குள் நுழைய
அவரை அனுமதிக்க மறுத்துவிட்டன. ஒருவேளை அவர் இந்தியாவில் வந்து சிகிச்சை
பெற்றிருந்தால் இன்னும் சில ஆண்டுகள் அவர் நம்முடன் வாழ்ந்திருப்பார் என்பதில்
ஐயமில்லை. ஆனாலும் பாலா அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி மருத்துவ சிகிச்சை அளிக்க
பிரபாகரன் திட்டமிட்டார். ஆனால் அதற்கு உதவ இலங்கை அரசும் மறுத்துவிட்டது. இந்தச்
சூழ்நிலையில் பாலா அவர்களை அதிவிரைவுப் படகுகள் மூலம் சர்வதேச கடற்பகுதிக்கும்
அங்கிருந்து கப்பல் மூலம் வெளிநாடும் அனுப்ப பிரபாகரன் திட்டமிட்டுச் செயல்பட்டார்.
அந்தப் பொறுப்பினை கடற்புலிகளின் தளபதி சூசையிடம் ஒப்படைத்தார். பாலாவை படகில்
ஏற்றி அனுப்புவதற்கு பிரபாகரனே நேரடியாகக் கடற்கரைக்கு வந்தார். பாலாவுக்கு பிரியாத
விடை கொடுத்தார். அவர் பத்திரமாகப் போய்ச்சேரும் வரை அந்தக் கடற்கரையிலேயே
பிரபாகரன் அவர்கள் காத்திருந்த செய்தி அனைவரையும் நெகிழ்வித்தது.
பிறகு நார்வே
நாடு அவரை அழைத்துச் சென்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து அவர் உயிரைக்
காப்பாற்றியது. கொஞ்சம் கொஞ்சமாக பாலா உடல்நலம் பெற்றுத் தேறிய செய்தியறிந்து
மகிழ்ந்தேன்.
17-06-2000 அன்று கனடாவில் டொரன்டோ நகரில் புலிகள் இயக்கத்தின்
வெள்ளிவிழாக் கொண்டாட்டம் நடைபெறவிருப்பதாகவும் அதில் நான் அவசியம்
கலந்துகொள்ளவேண்டும் என்றும் என்னை அழைத்தார்கள். அலுவல் மிகுதியின் காரணமாக
என்னால் வரஇயலாத நிலையைத் தெரிவித்தேன். ஆனாலும் பிரபாகரன் அவர்களிடமிருந்து எனக்கு
வந்த செய்தியை மறுக்கமுடியாமல் கனடா சென்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு
திரும்புகிற வழியில் ஜூன் 20ஆம் தேதி லண்டனில் இறங்கி பாலா அவர்களைச் சந்தித்தேன்.
ஓரளவுக்கு உடல் நலம் தேறியிருந்த அவரைப் பார்த்தபோது மகிழ்ந்தேன். அன்று முழுவதும்
அவருடன் பேசுவதில் கழித்தேன். அன்றிரவே அவரிடம் விடைபெற்றுக்கொண்டு சென்னைக்குப்
புறப்பட்டேன். ஆனால் அதுதான் நான் அவரைச் சந்திப்பது கடைசிமுறையாக இருக்கும் என்பதை
அறியாமல் போனேன்.
நார்வேயின் முயற்சியில் சமாதானப் பேச்சுவர்த்தைகளின்போது
அப்பேச்சுவார்த்தைகளை இந்தியாவில் நடத்தலாம் என புலிகள் கூறிய யோசனையை இந்தியா
ஏற்க மறுத்துவிட்டது. தாய்லாந்திலும், ஜெனிவாவிலும் பேச்சுவார்த்தைகளை
நடத்தவேண்டியிருந்தது. தொலைதூரப் பயணங்களின் விளைவாகவும் அவரது உடல்நலம்
குன்றியது. அந்தப் பேச்சுவார்த்தைகள் இந்தியாவில் நடைபெற
அனுமதிக்கப்பட்டிருக்குமானால். பாலாவிற்கு இங்கு மருத்துவ உதவியும் அளித்திருக்க
முடியும். ஆனால் பிடிவாதமாக அவரை அனுமதிக்க மறுத்ததின் மூலம் மாறாத பழியை இந்தியா
தேடிக்கொண்டது.
பாலா அவர்கள் காலமான செய்தி கிடைத்தபோது வேதனைத் தீ என்னைச்
சூழ்ந்தது. அவருடைய இறுதிச் சடங்கில் நான் கலந்துகொள்ளவேண்டும் என்று மிகவும்
விரும்பினேன். 25 ஆண்டுகாலத்திற்கு மேலாகப் பழகிய அந்த நண்பருக்கு இறுதி வணக்கத்தை
செலுத்தக்கூட இயலாத நிலையில் நான் இருப்பதை எண்ணிப் பொருமினேன். பொடா வழக்கின்
விளைவாக எனது கடவுச்சீட்டு காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில்
ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதை உடனடியாகப் பெறுவதற்கான வழி எதுவும் இல்லை. பொடா
வழக்கும் திரும்பப் பெறப்படவில்லை. இந்த தடைகளைத் தாண்டி லண்டனுக்குப் பயணம் ஆகும்
நிலையில் நான் இல்லை. காலமெல்லாம் என்னுடைய இந்த இயலாமை என் நெஞ்சை
அழுத்திக்கொண்டே இருக்கும்.
நான் அறிந்தவரையில் உலகத் தமிழர்களில் சிறந்த
இராஜதந்திரியாக பாலா திகழ்ந்தார். அவருக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற
நிலையில் வாழ்ந்தார். தாயக விடுதலைக்காக. தன்னுடைய எழுத் தாற்றலை, பேச்சாற்றலை,
அறிவாற்றலை அனைத்தையுமே அர்ப்பணித்தார். தனது தலைவனால் மிகவும் நேசிக்கப்பட்டார்.
அதனால்தான் அந்தத் தலைவனும் துயரை நெஞ்சில் தேக்கிக்கொண்டு தேசத்தின் குரல்
ஓய்ந்துவிட்டதே என அரற்றினார்.
"தேசத்தின் குரல்' பாலசிங்கம் மறைந்தாலும் அவர்
ஊட்டிய உணர்வு ஒவ்வொருவரின் நெஞ்சத்திலும் ஊடுருவி அக்குரலை ஓங்கி ஒலிக்கும்
என்பதில் ஐயமில்லை.
Monday, January 8, 2007
8.கவிஞர் சு.வில்வரத்தினத்துக்கு விடுதலைப் புலிகள் நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி கெளரவம்

தமிழீழ விடுலைப் போராட்டத்திற்கு பங்களிப்பை செய்த படைப்பாளர், கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்களுக்கு தமிழீழ விடுலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
யாழ். புங்குடுதீவில் பிறந்த இவர் சிறுவயதிலே சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பு நடவடிக்கைகளின் வடுக்களை மனதில் சுமந்து அதனை எதிர்க்கும் மனோபவம் கொண்டவராக கவிதைகளுடாக தன் உள்மனக்கிடக்கைகளை வெளிக்கொண்டு வரத் தொடங்கியவர் சு.வில்வரத்தினம்.
தாயகத்தில் ஏற்பட்ட இடப்பெயர்வுகளால் திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்ட இவர், திருகோணமலையில் இடம்பெற்ற சிங்கள அரசின் அடாவடித்தனங்களிற்கு எதிராக குரல்கொடுத்து முழுமுனைப்புடன் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியவர்.
அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன் சு.வில்வரத்தினம் அவர்களின் தமிழீழத் தேசியப்பற்றை கௌரவிக்கும் முகமாக நாட்டுப்பற்றாளர் கெளரவிப்பை வழங்கியுள்ளோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, January 7, 2007
7.மன்னார் படகுத்துறைத் தாக்குதல் சிங்கள ஊடகங்களின் கண்ணோட்டம்
வடக்கு கிழக்கில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்வதாகக் கூறிக்கொண்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் தினமும் அப்பாவி பொது மக்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது உலகறிந்த உண்மை.
அந்த வகையில் வடக்கு கிழக்கில் இடம்பெற்று வரும் யுத்தத்தினை சிங்கள மக்களுக்கு மாறுபட்ட வகையிலும் பாரபட்சமான முறையிலும் அரசின் செயற்பாடுகளுக்கு ஜால்ரா போடும் வகையிலும் செயற்பட்டு வருகின்றமை இந்த யுத்தத்திற்கு வலுச் சேர்க்கின்றது.
கடந்த பல வருடங்களாக சிங்கள பேரினவாத ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த உளவியல் ரீதியிலான ஊடகப் போர் இன்று அது முழு அளவிலான ஊடகப் போராக உருவெடுத்துள்ளதனை அவ் ஊடகங்களின் செய்தியறிக்கைகளிலிருந்து காணக்கூடியதாயுள்ளது.
இன்று அரசாங்கமும் விடுதலை புலிகள் மீதான போரை முழு அளவில் மேற்கொள்வதற்காக நாட்டின் அனைத்து மக்களுக்கும் அறைகூவல் விடுத்திருக்கின்றதனை அதன் செயற்பாடுகளிலிருந்து காணக்கூடியதாயுள்ளது. போர் என்ற பெயரில் பொது மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றன அரச படைகள்.
2007 ஆம் வருடத்தின் ஆரம்ப வைபவமாக அரச படைகள் மன்னார் படகுத்துறை கிராமத்தில் தமது காட்டுமிராண்டித்தனத்தை அப்பாவி பொது மக்கள் மீது எடுத்தக்காட்டியுள்ளது. அத்துடன், அவர்களுக்கு புலிகள் என்ற முத்திரையையும் குத்தியுள்ளது.
நாட்டின் இனப்பிரச்சினை அன்று இந்தளவு உக்கிரமடைந்தமைக்கு ஆட்சியிலமர்ந்த பேரினவாத அரசாங்கங்கள் மட்டுமன்றி, பேரினவாத ஊடகங்களின் பங்களிப்பும் அமைந்துள்ளது.
அந்த வகையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற வன்முறைகளை பெரும்பான்மை சிங்களவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பேரினவாத ஊடகங்கள் அவ் வன்முறைகளை திரிபுபடுத்தியும் மாறுபட்ட வகையிலும் சிங்கள சமூகத்தினருக்கு எடுத்துரைக்கின்றன. அவ்வாறான ஊடக பிரயோகத்தின் விளைவாக `சிங்களவர்கள் தமிழ் மக்கள் மீது இவ்வாறான வன்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றதா? என்ற வினாவை வியப்புடன் கேட்குமளவிற்கு விசித்திரமாகவுள்ளது.
அந்த வகையில் கடந்த 02 ஆம் திகதி படகுத்துறை கிராமம் மீது இலங்கை விமானப்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் பொதுமக்கள் பலியானமை உலகறிந்த உண்மையாகும். அத்தாக்குதலில் சிறுவர்கள், பொதுமக்கள் உயிரழந்தமைக்கு புகைப்படங்களுடன் சாட்சிகள் உள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபமான விவகாரங்களுக்கான ஒத்துழைப்புப் பிரிவு அலுவலகம் கடந்த 03 ஆம் திகதி விடுத்த அறிக்கையிலும் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் விடுத்த அறிக்கையில் 1995 ஆம் ஆண்டு போரினால் இடம்பெயர்ந்த மிகவும் வறிய மக்களே இத்தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தமது கண்டனத்தையும் கவலையையும் மற்றும் உண்மைச் சம்பவத்தினையும் எடுத்துரைத்துள்ளார்.
இத்தாக்குதல் இடம்பெற்ற
தினத்தன்று மாலை முழு உலகிற்கும் `ராய்ட்டர்' செய்திச் சேவை மற்றும் `பி.பி.ஸி, ஏஎப்பி'ஆகிய செய்தி சேவைகளும் காயமடைந்த உயிரிழந்த சிறுவர்களின் புகைப்படங்களுடன் பிரசுரித்திருந்தன.
சிங்கள பத்திரிகைகளை தவிர , பிரதான தர தமிழ் பத்திரிகைகள் மூன்றும் புகைப்படங்களுடன் பிரதான தலைப்புச் செய்திகளாக பிரசுரித்திருந்தன.
ஆங்கிலப் பத்திரிகைகள் பல்வேறுபட்ட வகையில் செய்திகளை பிரசுரித்திருந்தன. ஆனால் அவை எந்தவகையிலாவது பொது மக்கள் உயிரிழந்துள்ளார்கள் என்பதனை குறிப்பிட்டுள்ளன. `டெய்லி மிரர் 'மற்றும் `மோர்னிங் லீடர் 'ஆகிய பத்திரிகைகள் அனைத்து தரப்பையும் ஆவணப்படுத்தியிருந்தன. ஆனால் காயமடைந்தவர்களின் புகைப்படத்தினை பிரசுரிப்பதற்கு `மோர்னிங் லீடர்' பத்திரிகைக்கு மட்டுமே தைரியம் இருந்துள்ளது.
சிங்கள நாளிதழ்களில் `லக்பிம பத்திரிகை `300 கடற் புலிகள் கூடியிருந்த புலிகளின் முகாம் மீது விமானப்படை தாக்குதல். இத்தாக்குதலில் 30 புலி உறுப்பினர்கள் மரணம்'. என அச் செய்தியில் குறிப்படப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் உயிரிழந்தவர்கள் பற்றி எவ்வித தகவலையும் பிரசுரிக்கவில்லை. அவ்வாறான செய்தியை அரசாங்கம் கூட தெரிவிக்கவில்லை. ஆனால் `லக்பிம' பத்திரிகை மிகப் பாரிய பொய்யை தமது வாசகர்களுக்கு வழங்கியுள்ளது.
வழமைக்கு மாறாக செய்திகளை (வடக்கு கிழக்கு செய்திகளை மட்டும்) பிரசுரிக்கும் `திவயின' பத்திரிகை பெரிதாக அச்சம்பவத்தினை அறிக்கையிடவில்லை. `லங்காதீப' பத்திரிகை அச்சம்பவத்தினை முன்பக்க செய்தியாக பிரசுரித்திருந்தது.
தமிழ் பிரதேசங்களில் தமிழர்கள், சிறுவர்கள் , பெண்கள் கொலை செய்யப்படும் பொழுது சிங்கள நாளிதழ்கள் அவற்றை பிரசுரிப்பதில்லை. இது ஊடக ஒழுக்க நெறிக்கு முற்றிலும் புறம்பானது.
அந்த வகையில் கடந்த வருடம் ஜூன் மாதம் 10 ஆம் திகதி மன்னார் வங்காலை தோமஸ்புரியில் குடும்பமொன்று படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இது வரையில் ஆக்கப்பூர்வமான எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையிலே மற்றுமொறு கோரத்தாண்டவம் இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கும் சொல்வார்களா சாக்கு போக்கு அல்லது குற்றத்தை ஒப்புக்கொள்வார்களா? என்ற கேள்வியை அரசாங்கத்திடமும் சிங்கள ஊடகங்களிடமும் கேட்கின்றோம்.
6.அஜித் சமரநாயக்கவுக்கு யாழில் அஞ்சலி
இவைகளையெல்லாம் மாற்றும் வகையில், சிங்கள மக்கள் புத்தர் பெருமான் இலங்கைக்கு வருகை தந்த நாளாக கடந்த புதன்கிழமை நோன்மதிதினமாக அனுஷ்டிக்கும் நேரத்தில் யாழ்ப்பாண மண்ணில் மானுடம் நேசித்த சிங்கள பத்திரிகையாளர் அஜித் சமரநாயக்கவை நினைவு கூர்ந்து அஞ்சலி நிகழ்வொன்று இடம் பெற்றது. யாழ். மார்க்சீய நண்பர்கள் ஒன்றியம் இவ் நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்தியுள்ளது. இந்நிகழ்வானது யாழ்ப்பாண வரலாற்றில், சிங்கள பத்திரிகையாளர் ஒருவருக்கு நடைபெற்ற முதல் அஞ்சலி நிகழ்வாகும்.
யாழ்ப்பாணத்தில் செயல்பட்டுவரும் ஊடகவியலாளர்கள் சங்கங்கள் எல்லாம், சிங்களப் பத்திரிகையாளர்கள் கொல்லப்படும் போது, தமது கண்டனங்களை வெளியிட்டு தம்மை அடையாளப்படுத்தி விட்டு மௌனித்தவையாகவே இருந்து வருகின்றன. யாழ்ப்பாண ஊடகவியலாளர்களை சிங்கள ஊடகவியலாளர் அமைப்புகள் தென் பகுதிக்கு அழைத்து விருந்தோம்பி அவர்களது கஷ்ட நஷ்டங்களை அறிந்து முடிந்தளவு தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றன. குறிப்பாக இன முரண்பாடு காரணமாக தமிழ் பிரதேசங்களில் போர் நடைபெற்ற காரணத்தைச் சாட்டாக வைத்து யாழ்ப்பாண ஊடகவியலாளர்களுக்கு தகவல் திணைக்களம் அடையாள அட்டைகளை வழங்க மறுத்து வந்த போது, அவர்கள் "பயங்கரவாதிகள்" அல்ல அவர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டுமென வலியுறுத்தி பெற்றுக் கொடுத்தவர்கள் அவர்கள். தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படும் போதும் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்படும் போதும், கைது செய்யப்படும் போது உரத்த குரலில் போராட்டம் நடாத்துபவர்கள் சிங்கள ஊடகவியலாளர்கள் தான் அவர்கள் இன, மத வேறுபாடின்றி சகலரையும் ஊடகவியலாளர் சமூகமாகவே கருதி வருகின்றனர்.
இவற்றுக்கெல்லாம் அஜித் சமரநாயக்க போன்ற மனித நேயமிக்க சிங்கள ஊடகவியலாளர்கள் தான் காரணமாகவிருந்துள்ளனர். அவருடைய கடந்த கால பத்திரிகைத் துறை வாழ்க்கையை ஒப்பு நோக்கும் போது, அவர் உழைக்கும் தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காகவே அவரது சிந்தனை அமைந்திருப்பதைக் காணலாம். அவரது சிந்தனைகள் எல்லாம், மானுடத்தின் கொண்ட பற்றுதலால் ஏற்பட்ட அவரது கனவுகள் எனலாம்,
அவர் ஒருகலைப்பட்டதாரியாக இருந்த போதும், மார்க்சீய சிந்தனைகளால் கவரப்பட்டு அக்கொள்கையில் இருந்து விலகாமல், யாருக்கும் விலை போகாது பிறரால் விமர்சிக்கப்படாமல், மற்றவர்களது மனம் நோகாமல், புதிய புதிய சிந்தனைகள் மூலம் மனித நேயத்தை வலுவூட்டுவதாக அவர் தமது எழுத்தைக் கையாண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
வகுப்புவாதக கருத்துகளுக்கு முதலிடம் கொடுக்கும் சிலோன் ஒப்சேவர் பத்திரிகையில் பணியாற்றிய போதும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இன வாத சிந்தனையைத் தோற்றுவிக்காமல்,ஆழமான கட்டுரைகளை எழுதி வந்தார். ஒரு பத்திரிகையாளனுக்கு சகல துறைகளிலும் பரந்த அறிவு இருக்க வேண்டுமென்பது போல், கலை, கலாசாரம், சமய உணர்வு, நடுநிலையான அரசியல், சினிமா போன்ற எல்லாத்துறைகளிலும் ஆளுமையை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
அவரது சித்தாந்தம், இன, மத, மொழிகளைக் கடந்ததாக இருந்ததால் தமிழ் பெண் ஒருவரை காதலித்து மணந்து கொண்டார். அவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி திடீர் சுகவீனமுற்றிருந்த வேளை, தனது 52 வயதில் காலமானார். அவரது பிரிவுச் செய்தி கேட்டு அவர் நேசித்த மானுடம் கதறி அழுதது. உயர்ந்த பண்பாட்டை வளர்த்துக் கொண்ட மானுடம் தன்னில் ஒருவர் இறந்து போவதை மனப் பூர்வமாக அனுமதிப்பதில்லை. யாழ்ப்பாணத்தில் அவரைத் தெரிந்தவர்கள். அன்பாகப் பழகியவர்கள் அவரது எழுத்தால் கவரப்பட்டவர்கள், உயிருக்குயிரான நண்பர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
அவரை நினைத்து யாழ்ப்பாணத்தில் அஞ்சலிக் கூட்டம் நடாத்தியவர்கள் அவரது பெருமையை, எளிமையான வாழ்க்கை முறைகளை, பண்புகளை எல்லாம் புகழ்ந்து பேசினார்கள். இந் நிகழ்வுக்கு யாழ்ப்பாணக் கல்வி வலய பிரதம உத்தியோகஸ்தர் ஏ.ஜோய்ஜ் தலைமை தாங்கினார். மறைந்த பத்திரிகையாளர் அஜித் சமரநாயக்கவுடன் பழகும் வாய்ப்புக்குறைவாகவே இருந்து வந்துள்ளது. அவரது ஊடகப் பார்வை சிறப்பானது. அவர் வரித்துக் கட்டிக் கொண்ட இடது சாரிக் கொள்கைகளை தனது எழுத்துகளில் ஒரு போதும் சோரம் போக அனுமதிக்கவில்லை.
இனவாத சகதிக்குள் ஒரு போதும் தனது பேனாவைப் பயன்படுத்தாதவர் சுருங்கச் சொன்னால் மானுடம் போற்றும் ஒரு ஊடகவியலாளராகவே இறக்கும் வரை செயல்பட்டு வந்துள்ளார். அவரது எழுத்துகளில் சமதர்ம நோக்கே இருந்துவந்துள்ளது. நான் அவரது எழுத்துகளை நேசிப்பவன். தேடித் தேடி அவரது கட்டுரைகளைப் படிப்பேன். இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் தன்னை அழித்துக் கொண்டு மானுடத்துக்காக சேவையாற்றியுள்ளார். இன்றைக்கு எமது தோழர்கள் எம்மை விட்டுப் பிரிந்தாலும், அழகிய நடையில் மறைந்தோரது மான்புகளை நினைவு கூர்ந்து வந்த செயல் வீரராக இருந்தார். அவரது மறைவு பெரும் வெற்றிடத்தை ஆங்கிலப் பத்திரிகையாளர்களுள் உருவாக்கியுள்ளது. நல்லவர்கள் மறைவதும், அவர்களை நினைவு கூருவதும் கால மாற்றத்தின் கட்டாயம் என்றார்.
"அஜித் சமரநாயக்கவின் மாண்பு" என்ற பொருளில் உரையாற்றிய அவரது பாலிய நண்பனும், இலங்கை வங்கியாளர் சங்க யாழ். மாவட்ட மேலாளர் எஸ்.சிவபாலன் உரையாற்றுகையில், எனது இனிய நண்பனை நான் இழுந்துள்ளேன். அவருடன் பேசிக் கொண்டிருந்தால் அது உரையாடலாக இருக்காது. கற்றவர்களுக்கு உள்ள பெரும் பண்பு போல் தனக்குத் தெரிந்தவற்றை, அறிந்தவற்றை, தனது புலமையை எனக்கு பெற்றதாயைப் போல் ஊட்டிவிடும் பெரும் பண்பாளர், நான் அவரிடம் கற்றது அதிகம், அவரிடம் காணப்பட்ட பண்பு தனது அறிவை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்வதாகும்.
சிறுவயதில் பத்திரிகை உலகில் பிரவேசித்து ஆழ்ந்த புலமையால் அத்துறையில் களம் பல கண்டவர். அவரது எழுத்துகள் எல்லாம், மனித நேயத்துக்கான சுய தணிக்கையாக பெரியோரும் ஏற்றுக் கொள்ளும் நவீன சிந்தனை போக்குடையதாகும், இலங்கையில் சுயமாக மொழித் திட்டம் வலுவடைந்த போதுதான் ஆங்கில மொழியிலே தனது எழுத்துகளுக்கு உரமூட்டி உயர்ந்து நின்றார். பேச்சிலே எப்போதும் நகைச்சுவை கலந்திருக்கும் இது கல் நெஞ்சக்காரரையும் ஒரு கணம் சிந்திக்க வைக்கும். அவரது புலமை பாராளுமன்ற செய்திகளை, கட்டுரைகளை பின் ஊட்டலாக எழுதி வெளிவருகின்றபோது வெளிப்பட்டு நிற்கும். எப்போதும் இனங்களுக்கிடையில் ஒற்றுமை இருக்க வேண்டுமென்று விரும்பினார். அவரது சிந்தனைகள் சமதர்ம சமுதாயத்தை, சுரண்டலற்ற வர்க்கபேதமில்லாத மனித குலத்தைக் காண வேண்டுமென ஓயாது எழுதி வந்தார். அவர் கைபடாத துறை எவையென அடையாளம் காண முடியாது. தேச நலனில் அக்கறை கொண்டு உழைத்த புலமைசார் ஆங்கிலப் பத்திரிகையாளனை இழந்துள்ளோம். என்னை பொறுத்தவரையில் என் ஆத்ம நண்பனை இழந்துள்ளேன். அவரிடம் இருந்து கற்றது அதிகம், அவரிடம்வித்தகச் செருக்கு எப்போதும் இருந்ததில்லை. பிறர் வாழ தன்னை அழித்துக் கொண்டவராக அஜித் சமரநாயக்க இருந்துள்ளதை அவரது வாழ்க்கை தெளிவுபடுத்தும். எம்முடைய மனித நேயமிக்க சிங்கள நண்பனை நாமெல்லாம் இழந்து விட்டோம். அவர் யாழ்ப்பாண மக்களின் அவலங்களுக்காக கவலை கொண்டவராகவே இருந்து வந்தார். அவரது இறுதி நாட்களில் மனதால் கூற முடியாத வேதனையுடன் காணப்பட்டார் என அவரது சகோதரி தெரிவித்து கவலை வெளியிட்டிருந்தார். நல்லவர்களை இறைவன் சோதிப்பது உண்மையானால் அஜித் சமரநாயக்கவின் மரணம் மன வேதனையாகத் தான் இருக்கும். நல்லாத்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதைவிட வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை" என்றார். தினக்குரல் பத்திரிகை சார்பில் உரையாற்றிய ஐயா சச்சிதானந்தம் தமது உரையில் கூறியதாவது; "நான் கொழும்பில் இடம் பெற்ற பத்திரிகையாளர் பயிற்சி நெறியின் போது, அஜித் சமரநாயக்கவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. மற்றவர்களுடன் பழகுவதற்கு இனியவராக தனது அறிவாற்றலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் அவருக்கு இருந்த ஆர்வம் என்னைப் பிரமிக்க வைத்தது. தன்னை ஒரு நண்பனாகவே எனக்கு அடையாளப்படுத்தினார். அவரிடமிருந்து சில நாட்களில் நான் கற்றது அதிகம். அவர் எனக்கு முதலில் கூறியது, "செய்தி என்பது வாசகன் அறிய முடியாத தொகுப்பு" எனலாம் என்றார்.
இவரது எழுத்துகளால் கவரப்பட்ட உபாலி விஜயவர்தனா `ஐலன்ட்' பத்திரிகையில் உயர்ஸ்தானத்தில் சேவையாற்ற அழைக்கப்பட்ட போது , அதனை ஏற்று பத்து ஆண்டுகள் பணியாற்றினார். ஏதோ முரண்பாடு காரணமாக அங்கிருந்து விலகி மீண்டும் ஏரிக்கரை பத்திரிகை நிறுவனத்தின் ஆங்கில வெளியீடுகளுக்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். அவரது பேனா முனைகள் என்றைக்கும் மற்றவர்களை தாக்கும் கருத்துக்கு இடம் கொடாமல் உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்கு அர்ப்பணிப்புடன் எழுதப்பட்டவையாக இருந்தன.
எளிமையாக வாழ்ந்த தன்னடக்கமுள்ள சிறந்த சிந்தனை சிற்பியாகவும் அவரை பெருமைப்படுத்த முடியும். தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படும் போதும், கைது செய்யப்படும் போதும், தாக்கப்படும் போதும் ஒரு போராட்ட வீரனைப் போல எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொள்வார். அஜித் சமரநாயக்கவின் கொள்கை அது.
இன்றைக்கு தமிழ் மண் நிமிர்ந்து நிற்கின்றது. சிங்கள ஊடகவியலாளரின் பண்புகளை, மனித நேயத்தை அவரது ஆளுமையை மனிதகூடலில் பேசுவது ஆரோக்கியமான சூழ்நிலை, எங்கெங்கு மனித நேயம் இருக்கின்றதோ அவரை அஞ்சலிப்பது எமது கடமை. ஒரு சிறந்த பத்திரிகையாளராக ஆங்கிலப் பத்திரிகையாளனை வாழ வேண்டிய வயதில் இழந்துள்ளோம், வெண்தாடியுடன் எம்மோடு உறவாடி மகிழ்ந்த காலம் அஸ்தமித்து விட்டது. அஜித் சமரநாயக்க நினைவு கோரப்படவேண்டிய ஊடக நண்பர். பலருக்கு அவர் தோழர் அஜித், மார்க்சீயத்தில் உறைந்து போனவர்களிடம் மனித நேயத்தைக் காணலாம் என்பதை அஜித் சமரநாயக்க எம்மோடு உறவாடி சொல்லாமலே எம்மைப் பிரிந்து சென்றுள்ளார். அவரது பிரிவு பத்திரிகை உலகில் ஓர் வெற்றிடம்" என்றும் கூறினார்.
Monday, January 1, 2007
5.தமிழீழத்தின் முதலாவது அடையாளப் அட்டையை தேசியத் தலைவர் பெற்றுக்கொண்டார்.

பெற்றுக்கொண்டார்.
வழங்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்
அவர்கள் முதலாவது தமிழீழத் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொண்டார்.

தமிழீழ ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் சி.ஜெயச்சந்திரன் அவர்களால் தமிழீழத்
தேசியத் தலைவருக்கு முதலாவது தேசிய அடையாள அட்டை இன்று
வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழீழ ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர்
ஜெயச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்:
தமிழீழ சிவில் நிர்வாக பிரிவு
வடக்கு கிழக்கில் உள்ள மக்களை தமிழீழ தேசிய பதிவேட்டில் பதியும் நடவடிக்கையை ஜனவரி
முதலாம் திகதி முதல் ஆரம்பித்துள்ளன. இதன் முதலாவது பதிவாக தமிழீழ தேசிய தலைவர்
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளார். ஒவ்வொரு பிரயையின்
பதிவும் கணணிமயப்படுத்தி தமிழீழ நிர்வாக நடவடிக்கை வலிமைப்படுத்தப்படும் என அவர்
மேலும் தெரிவித்துள்ளார்