இலங்கைப் பிரச்சினையில் `ராஜீவ் படுகொலை' பெரிய தடைக்கல்லாகவே கடந்த பல வருடங்களாக இருந்து வந்தது. தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்துமே அதை எப்படிச் சமாளிப்பது என்பது புரியாமல் திகைத்துக் கொண்டிருந்தன. `ராஜீவ் கொலை' செய்யப்பட்டதால் விடுதலைப் புலிகள் மீது தமிழகம் உட்பட ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏற்பட்ட கோபம்,இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிப் பேசுவதற்கே முட்டுக்கட்டையாக மாறியது.
ஏனென்றால், மற்ற தமிழீழப் போராட்டக் குழுக்கள் எல்லாம் பலம் இழந்துவிட்ட நிலையில், விடுதலைப் புலிகள் மட்டுமே `தனி ஈழம்' போராட்டத்தில் முன்னணியில் இருக்கிறார்கள். குறிப்பாக, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு இது பெரும் தர்மசங்கடமாக மாறியது. விடுதலைப் புலிகளையும் தமிழர் பிரச்சினையையும் இங்குள்ள கட்சிகள் பிரித்துப் பார்க்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தன.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட இலங்கை இராணுவம் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது. அந்த வரிசையில் 64 அப்பாவிக் குழந்தைகள் மீது இலங்கை இராணுவம் நடத்திய தாக்குதல் தமிழகத்தில் கடுமையாக எதிரொலித்தது.
இதுபோன்ற சில சம்பவங்கள், விடுதலைப் புலிகளுக்கு தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் மறுபடியும் மெலிதான ஆதரவைத் தேடித் தந்தது. ஆயினும், கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியுடன் நேரடி வம்பு வந்துவிடப் போகிறது என்பதால் மிகவும் கவனமாகவே காய் நகர்த்தினார் முதல்வர் கருணாநிதி.
சோனியா காந்தியை தமிழர் பிரச்சினையைப் பற்றிப் பேச வைக்கவேண்டும் என்பதே முதல்வருடைய முதல் கணக்கு. இதற்காக ராஜீவ் நினைவிடத்துக்கு சோனியா காந்தியுடன் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பிறகு, சோனியாவை சந்தித்தபோது இலங்கைத்தமிழர்களின் நிலைமையை எடுத்துச் சொன்னார்.
இதைத் தொடர்ந்து, "இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா அக்கறை செலுத்தும் என்றும், `தமிழர்களைக் கொல்ல ஆயுதம் வழங்க மாட்டோம்' என்றும் அறிவித்து கருணாநிதிக்கு கடிதம் எழுதினார் சோனியா. உடனே பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி இலங்கைக்கு இந்திய அரசு ஆயுதம் அனுப்பவில்லை. வெடிபொருட்கள் போனது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார். இப்படியெல்லாம் படிப்படியாக இலங்கைத் தமிழர் பிரச்சினையின் மத்தியிலுள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு ஒருபிடிப்பு ஏற்பட்டது.
இப்படிப் பல முயற்சிகளை தமிழக முதல்வர் செய்தாலும், விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இதற்குப் பெரிய `ரெஸ்பான்ஸ்' இல்லை. இந்தநிலையில்தான் விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் மறைந்தார். அவருக்கு உடனடியாக அனுதாபம் தெரிவித்து முதலில் அறிக்கைவிட்டார் கருணாநிதி.
இதைப் பார்த்தபிறகு விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் தமிழ்ச்செல்வன் கருணாநிதியைப் பாராட்டினார். இதேசமயத்தில், விடுதலைப் புலிகள் ஆதரவு பெற்ற இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் சென்னை வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்தார்கள். அவரும் இவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பதற்கு `அப்பாயின்ட்மென்ட்' வாங்கிக் கொடுத்தார்.
சோனியா இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அக்கறை காட்டுகிறார் என்பது தெரிய வந்தபிறகுதான் மன்மோகன் சிங் இலங்கை எம்.பி.க்களை சந்திக்க நேரம் ஒதுக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறைக்குறைய 20 வருடங்களுக்குப் பிறகு இந்தியப் பிரதமரை விடுதலைப் புலிகள் ஆதரவு பெற்ற இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் சந்தித்தது இதுவே முதல்முறை! இது இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் புதிய பார்வையை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்தது.
பிரதமர் - இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பையும் விடுதலைப் புலிகள் தங்கள் `நெட்டில்' சூப்பராக செய்தியாக்கினார்கள். கூடவே முதல்வர் கருணாநிதியின் தூதுவராக சுப வீரபாண்டியனும் கலந்துகொண்டார் என்றும் விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.
இதேமுயற்சியை முன்பு தமிழ் எம்.பி.க்கள் சொல்லாமலேயே வைகோ கையிலெடுத்தார். `நாளை பிரதமரை தமிழ் எம்.பி.க்கள் குழு சந்திக்கிறது' என்று அறிவித்தார்.
ஆனால், வைகோவின் முயற்சிக்கு பிரதமர் அப்போது ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால், முதல்வர் கருணாநிதி எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. காரணம், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கருணாநிதியின் முயற்சிகளால் சோனியாவுக்கு ஏற்பட்ட மனமாற்றம்!.
தமிழ் எம்.பி.க்கள் வந்து போன பிறகு சென்னையில் இலங்கைத் தமிழருக்காக நடைபெற்ற மனித சங்கிலிப் போராட்டத்தில் தி.மு.க. கலந்து கொண்டுள்ளது. ஆனால், அமைச்சர்களை அனுப்பாமல் தனது கட்சியின் அமைப்புச் செயலாளராக இருக்கும் டி.கே.எஸ். இளங்கோவனை போராட்டத்தில் கலந்துகொள்ள வைத்தார் கருணாநிதி.
இதற்கிடையில், அகதிகளாக வந்த இலங்கை தமிழ் மாணவர்கள் `ஓ லெவல்' பரீட்சை எழுதுவதற்கும் தமிழக அரசு ஏற்பாடு செய்தது. அந்தத் தேர்வு முடிந்து வந்த மாணவர்கள் மத்தியில் பேசிய முதல்வர் கருணாநிதி, `உங்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி நீங்கள் இங்கே வந்து என்னைப் பார்ப்பதைப் போல் நான் அங்கே வந்து உங்களையெல்லாம் பார்க்கின்ற' காலம் வரவேண்டுமே என்ற கவலை எனக்கு மிகவும் உண்டு என்று உணர்ச்சி வசப்பட்டார்.
அவர் மேலும் பேசும்போது, `சில நேரங்களில் அங்கே ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக நான் வருவது நல்லதல்ல என்று அங்கிருந்த அரசும் எனக்குச் செய்தி அனுப்பியது. இங்குள்ள அரசும் என்னைத் தடுத்து நிறுத்தியது. நான் ஒருமுறை இந்தியப் பிரதமர் திருமதி இந்திராகாந்தியிடமே இதைச் சொன்னபோது நான் ஏற்பாடு செய்யட்டுமா? நீங்கள் போய் வருகிறீர்களா? என்றுகூடக் கேட்டார்கள். அப்போது இலங்கையிலே இதைவிட அதிகமாகக் கொந்தளிப்பான சூழ்நிலை. எனவே, அந்தப் பயணமும் தடைப்பட்டது' என்று கூறியுள்ளார்.
இதில் அவர் அறுதியிட்டுச் சொல்ல விரும்புவது `இலங்கை செல்லத் தயாராக இருக்கிறேன்' என்பதுதான்! ஆனால் எப்படி? நிச்சயமாக விடுதலைப் புலிகளின் சார்பில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போகமாட்டார். அதை அவர் விரும்பவும் மாட்டார். ராஜீவ் கொலைக்குப் பிறகு விடுதலைப் புலிகளிடமிருந்து ரொம்பவுமே ஒதுங்கிச் சென்றுவிட்ட கருணாநிதி, அமைதி முயற்சியின் அங்கத்தினராக அங்கே செல்வதை விரும்பவில்லை என்றே தெரிகிறது.
ஆனால், இலங்கைத் தமிழர்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் ஒரு `சமாதான விரும்பியாக' கொழும்புக்குப் போக கருணாநிதி விரும்பலாம்.
இலங்கை அதிபர் ராஜபக்ஷவைப் பொறுத்தமட்டில், கருணாநிதி முதல்வரானவுடனேயே ஆறுமுகன் தொண்டமானை இங்கு அனுப்பிப் பேச வைத்தார். மலையகத் தமிழர்களின் தலைவரான ஆறுமுகம் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் தற்போது ராஜபக்ஷவின் அமைச்சரவையில் மந்திரியாக இருக்கிறார். சென்ற மே மாதத்தில் தமிழக முதல்வரை சந்தித்த அவர், இலங்கைக்கு ஒருமுறை வாருங்கள்' என்று அழைப்புவிட்டதாக டெல்லி வட்டாரத்தில் தகவல் உண்டு.
ஆறுமுகம் தொண்டமானின் அழைப்பைத் தொடர்ந்து சென்னையிலுள்ள ஷ்ரீலங்கா பிரதி உயர்ஸ்தானிகர் கருணாநிதியைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டதாகவும், அது நிலுவையில் இருப்பதாகவும் தலைமைச் செயலக வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர். எல்லாம்கூடி இந்திய அரசும் இலங்கை அரசும் முன்வந்தால் முதல்வர் கருணாநிதி இலங்கைக்குப் போகும் சாத்தியக் கூறுகள் அமையலாம். `சமாதான விரும்பியாக அவர் இலங்கை சென்றால் தமிழர் பிரச்சினை தீர்வுக்கு நல்லதொரு வழி கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
அதிகாரப் பகிர்வு குறித்து பரிந்துரை செய்ய இலங்கை அரசு நியமித்த கமிட்டி தமிழர்களுக்கு துணை ஜனாதிபதி பதவியும், இந்தியாவில் உள்ள மாநிலங்கள் போல் அதிகாரம் உள்ள மாநிலத்தையும் வழங்கத் திட்டம் தீட்டியுள்ளது.
`இலங்கையில் சமஷ்டி அரசு அமைய சந்திரஹாசனின் தந்தை செல்வா எப்படியெல்லாம் பாடுபட்டார்' என்று இதுபோன்ற நேரத்தில் கூறியுள்ள கருணாநிதி, கடந்த காலங்களில் இலங்கை செல்ல விரும்பினேன் என்பதையும் கூறுகின்றார் என்பது இங்கே கவனிக்கத்தக்க அம்சம்.
-தமிழன் எக்ஸ்பிரஸ்-
Friday, December 29, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment