Thursday, December 28, 2006

3.பாலசிங்கத்தின் மரணத்தையடுத்து புலிகள் வழிகாட்டியில்லாத கபோதியாகிவிட்டதாக நினைக்கிறார்கள் சிங்கள இனவாதிகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நியாயவாதியாகிய கலாநிதி அன்ரன் ஸ்ரனிஸ்லஸ் பாலசிங்கம் சில நாட்களின் முன்னர் லண்டனில் காலமானார். காலமாகும் போது 68 வயதுடையவரான பாலசிங்கம் இறுதியில் புற்றுநோய் வாய்ப்பட்டிருந்தார். இதற்கு முன்னரும் கூட கடந்த சுமார் 35 வருடங்களாக இவர் கடுமையான நீரிழிவு, தொண்டைக்கட்டி, நிரந்தரமான இரத்த அழுத்தம் ஆகிய வியாதிகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கலாநிதி பாலசிங்கம் தனது தாய் நாடாகிய ஈழம் தேசத்தைவிட்டு வெகு தூரத்தில் லண்டனில் நோய்வாய்ப்பட்டு வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும்போது அவருடைய தாய்நாடு ஸ்ரீலங்கா அரச படையினரின் பலத்தால் இரண்டாகிக் கொண்டிருந்தது.

யாழ்ப்பாணம் தீபகற்பத்தைச் சுற்றி முட்கம்பிகள் அடிக்கப்பட்டுள்ளன. இராணுவம் தமிழரின் வீடுவாசல், தோட்டம் துரவு, பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்களைக் கைப்பற்றியுள்ளது. அங்கு நித்தமும் கொலைகள், ஆட்கடத்தல்கள், கைதுகள். கடந்த சில தசாப்தங்களாக அங்கு வாழும் மக்கள் தமது தாய் மண்ணின் சுதந்திரத்தை இழந்து வந்துள்ளனர்.

விவசாய நிலங்கள் பற்றைகளாகி விட்டன. மீனவர்கள் தொழிலிழந்துவிட்டனர். யாழ்ப்பாணத்தை ஏனைய பகுதிகளுடன் தொடர்புபடுத்தும் ஏ-9 பாதை மூடப்பட்டுவிட்டது.

அங்கு உணவு இல்லை; மா இல்லை; மருந்துகள் இல்லை. வயதானவர்கள் நீரிழிவுக்கும், இரத்த அழுத்தத்திற்கும் மருந்துகள் இன்றி மடிந்து வருகின்றனர். பசியால் அலறும் கைக்குழந்தைகளின் பசியை ஆற்றுவதற்கு கொத்தமல்லித் தண்ணீருக்கும் அங்கு வழியில்லை.

கிழக்கு மாகாண மக்கள் மேலிருந்து வந்து கொண்டிருக்கும் குண்டுகளுக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான குடிமக்கள் குழந்தைகளுடனும் முடிச்சுகளுடனும் கந்தளாய் பிரதேசத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள்.

இலட்சக்கணக்கான மக்கள் அபாயங்களுக்கு மத்தியிலும் அகதி முகாம்களில் குவிந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும், இலட்சக்கணக்கானோர் மரண பயத்துடன் படகுகள், கட்டுமரங்களில் ஏறி பாதுகாப்புத் தேடி தென் இந்தியாவுக்கு தப்பியோடிக் கொண்டிருக்கிறார்கள்.

பெரும்பகுதி ஈழம் தேசமும் இனவாத நோய்க்குப் பலியாகியுள்ளது.

ஈழத்தில் வசிக்கும் தமிழர்கள் நரகத்தில் வசித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

மரணப்படுக்கையில் அவலப்பட்டுக் கொண்டிருந்த பாலசிங்கத்தை சந்திக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர் அவர் படும் வேதனையைப் பார்த்து அதிர்ந்து போனார். அப்பொழுது பாலசிங்கம் இப்படிச் சொன்னார்.

"இந்த வியாதி துரதிர்ஷ்டமான எனது தனிப்பட்ட வேதனை. ஆனால், எமது மக்கள் முகம் கொடுத்துவரும் பெரும் சமுத்திரம் போன்ற சமூக அவலத்துடன் ஒப்பிடும்போது, எனது துன்பம் ஒரு துளி மட்டுமே. எனது வியாதிக்காக அன்றி அரை உயிர்களாகிவிட்ட எமது மக்களைத் துன்பங்கள் வேதனைகளிலிருந்து விடுவிப்பதற்கு முடியாத நிலையில் இருப்பதற்காகவே நான் பெரும் துயரம் அடைகிறேன்"

பாலசிங்கத்தின் உள்மனத்தில் அவரது மக்களின் மீது அவர் வைத்திருக்கும் பற்று, கருணை மற்றும் தேசபக்தி என்பவற்றையே அவருடைய கூற்று உணர்த்தியுள்ளது. அது மக்கள் மீதான கருணையிலும் பற்றிலும் ஊறிக்கிடக்கும் உத்தம இதயமாகும்.

பாலசிங்கம் இந்த உதார, உத்தம, பிறருக்காக வாழும் கொள்கைக்காக இறுதிவரை தனது வாழ்வை அர்ப்பணித்துள்ளார் என்றால் அந்த தியாக வாழ்வு பற்றி அறிந்துகொள்வதும் மிகவும் அவசியமாகும்.

பாலசிங்கத்தின் இழப்பிற்காக புலிகள் அமைப்பு மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கவும், வெளிநாட்டுத் தமிழர்கள் மேலும் மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கவும் அறிவித்தல் கொடுத்தது.

கடந்த 20 ஆம் திகதி காலை 8.00 மணியிலிருந்து 3.00 மணிவரையில் லண்டன் அலெக்சான்டிரா மாளிகையில் பொது மக்கள் இறுதி கௌரவம் செலுத்துவதற்காக அவருடைய உடல் வைக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் அன்று மாலை நிகழ்த்தப்பட்டன.

ஸ்ரீலங்காவில் கல்விகற்ற அன்ரன் ஸ்ரனிஸ்லஸ் பாலசிங்கம் லண்டன் பல்கலைக்கழகத்திலும் கலைமாணி ஆ.அ. பரீட்சையில் சித்தியடைந்தார்.

சிறிதுகாலம் பத்திரிகையாளராக சேவை செய்த அவர் பின்னர் கொழும்பு பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் தமிழ் - ஆங்கிலம், ஆங்கிலம் - தமிழ் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார்.

அவர் பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றியபோது காலஞ்சென்ற பிரபல நாடக இலக்கியக் கலைஞராகிய சுகதபால டி சில்வாவும் அங்கு மொழிபெயர்ப்பு சேவையிலிருந்தார்.

பின்னர் பாலசிங்கம் லண்டனுக்கு சென்றார். அங்கு அவருக்கு பிரித்தானியக் குடியுரிமை கிடைத்தது. இது 1970 மத்திய காலப்பகுதியிலாகும்.

பின்பு பாலசிங்கம் ஒரு தடவை இலங்கைக்கு வந்து சிறிதுகாலம் இருந்த பின்னர் இந்தியாவுக்குச் சென்றார். தொடர்ந்து மறுபடியும் இங்கிலாந்து சென்று தனது இறுதிக்காலம் வரை அங்கே லண்டனிலேயே வாழ்ந்தார்.

இங்கிலாந்தில் லண்டன் பல்கலைக்கழகத்தில் மாக்சிசவாத மனோதத்துவத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார்.

எனக்கு பாலசிங்கத்தின் அறிமுகம் 1970 களின் பிற்பகுதியிலேயே ஏற்பட்டது. அப்பொழுது எனக்கு லண்டனில் நண்பர்கள் பலர் இருந்தனர்.

அப்பொழுது, பாலசிங்கம் என்பவர் பட்டதாரிகள் சங்கம் ஒன்றை அமைத்து சஞ்சிகை ஒன்றை வெளியிட்டு வருவதாக அப்போது கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், அந்தச் சங்கத்தின் அல்லது சஞ்சிகையின் பெயர் எனக்கு இப்பொழுது ஞாபகம் இல்லை.

அது ஈழம் விடுதலை குறிக்கோளை முன்வைத்து ஆயுதக் குழுக்கள் உருவாகிக் கொண்டிருந்த காலகட்டமாகும். அவ்வாறான ஐந்து ஆயுதக் குழுக்கள் அப்போது இருந்தன. அவற்றில் தமிழர் விடுதலைப்புலிகள் அமைப்பும் புரட்சிகர ஈழம் மாணவர் அமைப்பும் பிரபலமாக இருந்தன.

இந்தக் காலத்தில் நான் காலஞ்சென்ற கீர்த்தி பாலசூரிய சகோதரர்களின் தலைமைத்துவத்தில் இயங்கிவந்த புரட்சிகர கம்யூனிஸ்ட் அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்தேன்.

இந்த புரட்சிகர கம்யூனிஸ்ட் அமைப்பு தமிழர் விடுதலைக் கொள்கைக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிவந்தது. "அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை, அதாவது தமக்கெனத் தனியான அரசை அமைத்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது" என்ற சர்வதேச இரண்டாவது மண்டல பொதுவுடைமை அமைப்பின் இரண்டாவது சம்மேளனத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே மேற்படி ஆதரவை புரட்சிகர கம்யூனிஸ்ட் அமைப்பு வழங்கியது.

கீர்த்தி பாலசூரிய சகோதரர்கள் இன்று இல்லை. நானும் பொதுவுடைமை சமத்துவக் கட்சி எனப் பிரிந்து இயங்கும் புரட்சிகர கம்யூனிஸ்ட் அமைப்பில் இல்லை. பொதுவுடைமை சமத்துவ கட்சி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சுயநிர்ணய உரிமை என்ற கொள்கையை காலால் உதைத்துவிட்டது.

மீண்டும் பாலசிங்கத்தின் வரலாற்றுக்குத் திரும்புவோம்.

அந்த நாட்களில் பாலசிங்கம் இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றி பல கட்டுரைகளை வெளியிட்டார். அவை எதில் வெளியிடப்பட்டன என்பதும் எனக்கு ஞாபம் இல்லை. கீழ்க்காணும் குழுக்களின் பிரசுரங்களில் வெளியிடப்பட்டதாக பேராசிரியர் சிவத்தம்பி கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா இடதுசாரி அமைப்பு என்பதே இந்தக் கடிதங்களைத் தொகுத்துள்ளது. அவ்வாறான இடதுசாரி அமைப்பு இயங்கியது பற்றியும் ஞாபகம் இல்லை. ஆயினும், அவ்வாறு ஜனநாயகக் கோட்பாட்டுடன் இணைந்து இடதுசாரி அமைப்பு ஒன்று அப்பொழுது இருக்கவில்லை. அந்தக் காலத்தில் தலைவர்கள் இடதுசாரிக் கோட்பாடுகளை முதலாளித்துவத்துக்கு பலிகொடுப்பவர்களாகவே இருந்தனர். இவ்வாறு பலியிடப்பட்ட இடதுசாரி அமைப்புகளோ தமிழர் விரோதமானதும் வர்க்க ரீதியானதுமான கொள்கை முகமூடிகளுடன் முன்னணிக்கு வந்தன.

பாலசிங்கம் தனது கட்டுரைகளில் அடிக்கடி லெனின் கோட்பாடுகளை எடுத்துக் காட்டிவந்தார். இரண்டாவது மண்டல நாடுகளிடையே ஒடுக்கப்பட்ட நாடுகளை வேறுபடுத்திட தனியரசு நிறுவும் சுயநிர்ணய உரிமைக்காக பயமின்றி உறுதியுடன் போராடியவர் விளாடிமிர் இலிச் லெனின் ஆகும். இந்தப் போராட்டத்தில் இதற்கு எதிராகப் பேசிய அனைவரும் லெனின் தரப்பு மார்க்சிசவாதிகள் என்று பெயரிடப்பட்டு பிரிக்கப்பட்டு நிராயுதபாணிகளாக ஆக்கப்பட்டனர்.

நான் இந்த விடயம் சம்பந்தமாக லெனின் கோட்பாட்டை இங்கிருந்தே கடைப்பிடிக்க ஆரம்பித்தேன். இது சம்பந்தமாக லெனின் எழுதிய அனைத்தையும் படித்த நான் அன்றிலிருந்து இன்றுவரை ஒடுக்கப்பட்ட இனத்தின் பிரிந்துசென்று தனியரசு அமைக்கும் ஜனநாயக உரிமைக்காகவே அசையாது நிற்கிறேன்.

டாண்டே கூறியதும் மார்க்ஸ் ஏற்றுக்கொண்டதும், எனக்கு உதாரண பாடமாக அமைந்ததுமான வாசகம் கீழே உள்ளது.

தனது பாதையில் தான் செல்வதே சிறந்தது. வெகுஜன குறைகூறல்களைப் பொருட்படுத்தாது.

லெனின் தனது இறுதிக் காலத்தில் இவ்வாறு கூறியதன் மூலம் வர்க்கவாதி ஓட்சோனிகிட்சே, ஜோசப் ஸ்ராலின் ஆகிய வர்க்கவாதிகளுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்திருந்தார்.

ரஷ்ய புரட்சியில் லெனினுடன் சமமான தலைவராக விளங்கிய லியோன் ரொட்ஸ்கி இவ்வாறு கூறுகிறார்.

"பெண்கள், பிள்ளைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட இனத்தவர் மீது காட்டப்படும் ஒதுக்கலில் இருந்தே மனிதர்களின் கலாசாரம் தோன்றுகிறது".

இதற்கு ஏற்பவே தமிழர் விடுதலைப் புலிகள் அமைப்பும் உருவாகி மக்கள் பலத்தை திரட்டியது.

தமிழர் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் காலஞ்சென்ற பாலசிங்கம் பற்றிய இரங்கல் செய்தியில் இவ்வாறு கூறினார்.

"சில தசாப்தங்கள் வரை தமிழர் தேசியத்தின் அகிம்சைவாதியாக விளங்கியவர். தமிழர் தேசிய பிரச்சினையை சமாதான வழியில் தீர்க்க முடியாத நிலையிலேயே ஆயுதப் போராட்ட கொள்கை எழுந்தது. இந்தக் கொள்கையில் முன்னணியில் இருப்பது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பே ஆகும்.

பாலசிங்கம் இந்த அமைப்பில் இணைந்து நியாயவாதியாக, வழிகாட்டியாக கொள்கை அறிவிப்பாளராக விளங்கினார். இவர் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உயிரோடு உயிராக இணைந்தவராக உருவானார். பிரபாகரனை "தம்பி (சிங்களத்தில் மல்லி, பொடி எக்கா) என்று அழைத்தவர் பாலசிங்கமே. பிரபாகரன் பாலசிங்கத்தை "அண்ணை (சிங்களத்தில் அய்யா, பாலா அய்யா) என்று அழைத்தார்.

அன்றிலிருந்து சர்வதேச மட்டத்தில் மிகச் சிறந்த முறையிலும் பயமின்றியும், ஸ்ரீலங்காவில் ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்தின் உண்மையான அவலங்களை எடுத்துரைத்தவர் பாலசிங்கமே.

அவருடைய ஓசையை அடக்க எந்தவொரு இனத்தவராலும் முடியவில்லை. அதுமட்டுமின்றி, ஸ்ரீலங்காவில் சிங்கள முதலாளித்துவ வர்க்கத்தின் கொடுமைகளை உலகத்துக்கு வெளிப்படுத்தியவரும் பாலசிங்கமே.

பிரபாகரனின் மாவீரர் தின உரையை ஆண்டுதோறும் எழுதி, உருவாக்கி அவை நிகழ்த்தப்பட்ட பின்னர் லண்டனிலிருந்து அதுபற்றி உலகத்துக்கு விவரித்து அறிவித்து வந்தவரும் பாலசிங்கமே என்பதை அறியாதவர்கள் இல்லை.

பாலசிங்கத்தின் முதலாவது தமிழ் மனைவி காலமான பின்னர், அவருடைய 38 வருடகால நீண்ட நோயுற்ற காலத்தில் அவரைப் பிரியாது நிழல்போல் அவருடன் வாழ்ந்தவர் அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த அடேல்.

அவுஸ்திரேலிய நாட்டுப் பெண்மணியாகிய அடேலை, பாலசிங்கம் திருமணம் செய்தது 1978 ஆம் ஆண்டிலாகும்.

புலிகள் இயக்கத்தில் பாலசிங்கம் தலைமைத்துவம் பெற்ற காலகட்டத்தில் வெளிநாட்டு யுத்த விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்த்து வந்த அவுஸ்திரேலிய நாட்டின் சட்டங்களுக்கேற்ப அடேலைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவை வியர்த்தமாகிவிட்டன. இவர் எழுதி வெளியிட்ட, Will to Power அதிகாரத்துக்கான உரிமை என்ற நூலில் தமிழர் விடுதலைக் கோட்பாட்டில் அவருக்கிருந்த அபரிமிதமான நாட்டம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அந்த அமைப்புக்காக அவர் அனுபவித்த பெரும் துயரங்களையும் அர்ப்பணிப்புகளையும் பற்றி அந்த நூலில் கூறப்பட்டுள்ளது.

பாலசிங்கம் அனைத்துப் பேச்சுவார்த்தைகளின் போதும் பெற்ற அனுபவங்களை அடிப்படையாக வைத்து எழுதி வெளியிட்ட War and Peace போரும் சமாதானமும் என்ற நூல் விடுதலை புலிகள் அமைப்புக்கும் தமிழர் விடுதலைக் கோட்பாட்டுக்கும் அவர் செய்த விலைமதிப்பற்ற கொடையாகும்.

ஸ்ரீலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தைகள் என்ற பெயரில் விடுதலைப்புலிகள் அமைப்பை ஏமாற்றச் செய்த அனைத்து வஞ்சகச் செயற்பாடுகளும் எழுத்துமூலமான காட்சிகளுடன் அந்த நூலில் நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்த நூலைப் படிக்கும்போது தமிழினத்தின் விடுதலையை தனியான சுதந்திர ஈழம் அரசு அமைப்பதன் மூலமே அடைய முடியும் என்பதை எவரும் உணர்வர்.

பாலசிங்கம் காலமானதையிட்டு ஸ்ரீலங்கா அரச தரப்பு இனவாதிகள் மகிழ்ச்சியடைந்திருப்பர். அவர்கள் தற்போது புலிகள் அமைப்பு வழிகாட்டியில்லாத கபோதியாகிவிட்டது என்று நினைக்கிறார்கள்.

-தொடரும்-
-பேராசிரியர் சுச்சரித்த கமலத்-

No comments: