Thursday, December 28, 2006

1.'தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் பற்றிய புரிதல்

டகிழக்கு இணைந்த நிலப்பரப்பு தமிழர் தாயகமாகும். இவ்விணைப்பு பாலசிங்கம்
அவர்களின் பிறப்பிலுமுண்டு. இவர் பிறப்பே தாயகக் கோட்பாட்டைச் சுமந்துள்ளது.
பொதுவாக மக்கள் வயச் சிந்தனையாளர்களே ஊடகப் பணியில் தம்மை இணைப்பார்கள். வளரும்
நிலையில், மக்களை நோக்கிய பார்வையைப் பெறுகிறார்கள்.

வளர்ந்த இடமான கரவெட்டி, இடதுசாரி சிந்தனைகளின் விதைநிலம். சமூக
உட்கொடுமைகளுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த மாக்சிசவாதிகள் நிறைந்த சிவப்பு மண் அது.

கருத்துக்கள் பாலர் மீதும் பரவியதால், மக்கள் நலச் சிந்தனைகள் முன்னுரிமை பெற்றன.



DSCF0234



வேற்றுமொழிச் சிந்தனைகளும், செய்திகளும் இவரால் தமிழாக்கமடைந்து, வீரகேசரி மூலம்
மக்களைச் சென்றடைந்தது. மக்களுடன் நேரடி இணைப்பை உருவாக்கும் ஊடகச் சாதனமே இவரின்
ஆத்மார்த்தத் தெரிவாகவிருந்தது. அவை அளித்த பயிற்சியும், மாக்சிச புரிதலும் ஆளுமை
திறனாக்கத்திற்கு பெரிதும் உதவி இருக்க வேண்டும்.

செயல்முறையில் மாக்சிசத் தத்துவத்தை பிரயோகித்த மேதை லெனினின், தேசிய இனங்கள்
தொடர்பான சுயநிர்ணய உரிமை குறித்து கவனிக்கப்பட வேண்டிய தேவை கருதி, கூடுதல்
அக்கறை கொண்டிருக்க வேண்டும்.

தேசிய இனங்கள் மீதான அரச அடக்குமுறை விரிவடையும் போது முழு இலங்கைப் புரட்சி
பற்றியதான விளக்கங்கள் கனவுலகப் புரட்சிக்கே வழிவகுக்குமென்பதையும் 'பாலர்"
புரிந்துள்ளார்.

யதார்த்தங்களை மறுதலித்து, தத்துவங்களை நியாயப்படுத்த மேற்கொள்ளப்படும்
குருட்டுத்தனமான புரட்சியை இவர் நம்பவில்லை.

இவர் எழுதிய 'சோசலிச தமிழீழத்தை நோக்கி" என்கிற தேசிய விடுதலைப் போராட்டத்தின்
முதன்மையான நூலில், அதற்கான விஞ்ஞானபூர்வ விளக்கத்தை தெளிவாக முன்வைத்துள்ளார்.

இவர் பல தத்துவ, சித்தாந்தங்களை தெளிவுற கற்றுணர்ந்தாலும் அவற்றை பிரபாகரன்
அவர்கள் மீதோ அல்லது அவரின் விடுதலை இயக்கத்தின் மீதோ வலிந்து புகுத்த முயலவில்லை.

தன்னியல்பாக எழுந்த போராட்ட வளர்ச்சிப் போக்கினை அதன் உள்ளார்ந்த குணமாற்றத்தின்
வழியில் நகர விட்டு, மண்ணின் வேரறிந்த அரசியல் தளமொன்றினை உருவாக்கினார்.

சில ஈழ விடுதலை இயக்கங்கள், தம்மை மாக்சிச வழி வந்தவர்களாகப் பிரகடனப்படுத்தியவாறு
அந்தச் சித்தாந்தங்களை வலிந்து திணிப்பதிலேயே (Super
Impose
) முனைப்புக் காட்டின.

இலங்கையின் இடதுசாரிக் கட்சிகள் விட்ட தவறுகளை இவர்களும் செய்தனர். நடைமுறையினூடு,
தத்துவங்களை அதன் வரலாற்று முன்னோக்கிய நகர்வோடு இணைப்பதில் திரு பாலசிங்கம்
அவர்கள் வெற்றி கண்டுள்ளார் என்பதனை சமகால நிகழ்வுகள் சுட்டி நிற்கின்றன.

83 இனப்படுகொலையின் பின், ஊதிப் பெருத்த இயக்கங்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப்
புலிகள், ஈரோஸ் மற்றும் அதிதீவிர இடதுசாரிகளான தமிழீழ தேசிய விடுதலை முன்னணி
போன்றவை உறுப்பினர்கள் சேர்க்கையில் மிகுந்த நிதானத்துடன் செயற்பட்டன.

லண்டனில் உருவான ஈரோஸ் இயக்கத்தினர், மாக்சிச வழிமுறையில் வகுக்கப்பட்ட கொள்கைப்
பிரகடனத்துடன் களமிறங்கி முற்போக்குச் சிந்தனை பெற்ற புத்திஜீவிகளை தம்முடன்
இணைப்பதில் அக்கறை கொண்டார்கள்.

சித்தார்ந்தத் தெளிவு பெற்ற, உறுதியான 50 பேர் கொண்ட புத்திஜீவிகள், போராட்ட
இயக்கத்தினை வழிநடத்தும் மூலக்கருவாக இருப்பார்களென்ற கருத்து ஈரோஸ் ஸ்தாபகரால்
அன்று முன்வைக்கப்பட்டது.

'தனி நபர் நிறுவனத்தினை நிர்மாணிப்பார். நிறுவனமானது தலைமையினை உருவாக்கும்"
என்பதே ஈரோஸ் இயக்க ஸ்தாபகர் திரு. இரத்தினசபாபதி அவர்களின் கூற்று. ஆயினும்
ஈரோஸைப் பொறுத்தவரை, இக்கூற்றானது இறுதிவரை சாத்தியப்படாத தொகுதி விடயமாகி விட்டது.


இதேபோன்று என்.எல்.எவ்.டி (NLFT) இயக்கமானது
திரு.விசுவானந்ததேவன் தலைமையில் மாசேதுங்கின் தத்துவச் சிந்தனையின் அடியொற்றி,
போராட்டம் பற்றிய தமது கருத்தியலை முன்வைத்தது. இவர்கள் தமது தோழர்களை அரசியல்
மயப்படுத்துவதிலேயே அதிக காலத்தைச் செலவிட்டுள்ளனர்.

இடதுசாரிப் பாரம்பரியத்தில் உருவான இவ்வியக்கத் தலைவர், முன்னைய இடதுகளின் அதே
வழிமுறைகளைக் கையாள முற்பட்டார். குமுதினிப் படகு படுகொலையில் அவரும் இறந்து
போனார்.

இவற்றுள் புலிகள் இயக்கமானது, அரச இயந்திர அடிவருடிகளைக் களையெடுப்பதினூடாகத் தமது
ஆரம்ப நகர்வுகளை மேற்கொண்டது.

70 களின் முற்பகுதிகளில் தமிழ் அரச பிரதிநிதிகளும், தமிழ் காவல்துறையினரும்
இணைந்து ஆயுதப் போராட்ட முனைப்பினை முளையிலே கிள்ளி எறியும் நடவடிக்கைகளைத்
தீவிரப்படுத்திய வரலாறு சகலருக்கும் தெரியும்.

79 வரை களையெடுப்புக்களும், பின்தளப் பண்ணைகள் உருவாக்கமும், இயக்கச்
செயற்பாட்டினை நிதியினை அரச இயந்திரங்களிடமிருந்து புரட்சிகர வன்முறை வழிமூலம்
பெறுதலும் இடைவிடாது நிகழ்ந்து கொண்டிருந்தன.

அடுத்த கட்ட வளர்ச்சி நிலையின் திருப்புமுனையில், திரு அன்ரன் பாலசிங்கம்
அவர்களின் வருகை, புலிகளின் வரலாற்றில் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. அரசியல்
பரிமாண மாற்ற நிகழ்வுகள் பாலசிங்கத்தின் இணைவுடன் புதிய அரசியல் கருத்தியல்
தளமொன்றினை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் உருவாக்குவதை அவதானிக்கலாம்.


களை நீக்கத்திலிருந்து தொடங்கி, கெரில்லாப் போராட்ட முறைமைக்கு வளர்ச்சியுற்று,
தற்போது மரபுவழி இராணுவ கட்டமைப்பினைக் கொண்டதொரு தேசிய இராணுவமாக புலிகள்
உருமாற்றமடைந்து விட்டார்கள்.

இப்படி முறை வளர்ச்சியின் இயங்கியல் ஓட்டத்தில் தத்துவாசிரியரின் பங்களிப்பு,
கெரில்லா போராட்ட வளர்ச்சியுடன் ஆரம்பமானதெனக் கொள்ளலாம்.

அவரின் கெரில்லா போராட்டம் குறித்தான சிறு நூலொன்றையும் அவர் சார்ந்த இயக்கம்
வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பின் தளமிட்டிருந்த காலகட்டத்தில் இவர் எழுதிய 'சோசலிசத் தமிழீழத்தை
நோக்கி" என்ற நூல், அங்குள்ள இடதுசாரி கட்சியினரால் பெரிதும் விரும்பப்பட்டு,
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்தான தெளிவான விளக்கப் புரிதலுக்குப்
பொருத்தமான நூலாகக் கணிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதனை நேர்காணலொன்றில் புலிகளின் கல்விக் கழகப் பொறுப்பாளர் இளங்குமரன் பெருமையாகக்
குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் பல விடுதலை இயக்கங்கள் நிலைகொண்டுள்ள காலத்தில், புலிகள் மீதான
இந்திய உளவுத்துறையின் அழுத்தம் பாரியளவில் இருந்தது. தொலைத் தொடர்புச்
சாதனங்களைப் பறிப்பதும், போராளிகளின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்துவதுமான பல
விதமான புலிகள் விரோதப் போக்குகளை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

மறுபுறமாக இந்தியாவைப் பயன்படுத்தப் போவதாகக் கூறிய மாக்சிச இயக்கங்கள்,
இந்தியாவின் பிராந்திய வல்லரசு நலன்களையும் தமது நலனாக இணைத்துக் கொண்டார்கள். அது
சோகமான வரலாறு.

இருப்பினும் தமது இலட்சியத்தில் திடமான பற்றுறுதி கொண்ட புலிகள் இயக்கம் குறித்து
இந்தியா அவதானமாக இருந்தது.

சில மாற்று இயக்கங்களைத் தூண்டி, 'தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் ஒரு சி.ஐ.ஏ.
உளவாளி என்ற போலிப் பரப்புரையை முடுக்கி விட்டனர்.

சமகால அரசியல் கள நிலவரக் காட்சிகளை கோர்வையாக்கினால் தமது மக்களின் விடுதலையை
வென்றெடுக்க எந்த ஏகாதிபத்தியங்களின் அச்சுறுத்தல்களிற்கும் அடிபணிய புலிகள்
தயாரில்லை யென்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இப்போலிப் பரப்புரையின் பிதாமகர்கள், தற்போது ஏகாதிபத்தியங்களுடன் கூட்டுச்
சேர்ந்து, விடுதலைப் போரினை நசுக்க முயல்வதனை புரிந்தால் சி.ஐ.ஏ. ஏஜெண்டுகள்
யாரென்பது தெரியும்.

தனது பிராந்திய நலன்சார் வெளியுறவுக் கொள்கைக்கு கட்டுண்டு போக மறுத்த புலிகளை
அச்சுறுத்த, 'தேசத்தின் குரலை" நாட்டை விட்டகற்றியது இந்தியா. அவரோடு
சந்திரகாசனையும் வெளியேற்றி புலிகளை அமெரிக்க ஆதரவாளர்களாக்க முயற்சித்தார்கள்.
ஆயினும் புலிகள் தடுமாறவில்லை.

சகல சேறுகளும் பூசியாயிற்று. இனி பூச ஏதுமற்ற நிலையில் இந்திய - இலங்கை ஒப்பந்தம்
ஏற்பட்டது.

பெங்களுரில் அரசியல் போராளி பாலசிங்கத்தின் அறிவாயுதம் கொண்டு அதனையும்
எதிர்கொண்டனர் புலிகள்.

யுத்தம் மூண்டது. உதவி செய்வதாக நடித்த தலைவலி தானாக ஒதுங்கிக் கொண்டது.


ABReturn2


ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கெதிராக உள்நாட்டு எதிரியான சியாங்கே சேக்குடன் கூட்டுச்
சேர்ந்த மாவோவின் தந்திரோபாய நகர்வினைப் பிரயோகித்து, பிரேமதாசாவுடன் உடன்படிக்கை
கண்டார் 'தேசத்தின் குரல்".

பிராந்திய வல்லாதிக்க அமைதிப் படையை வெளியேற்றிய பின், தற்காலிக சமரசம் கொண்ட இன
மேலாதிக்க எதிரியுடன் சமர் புரிந்தனர் புலிகள்.

போராட்டச் சக்தியினை பெரிய அழிவொன்றிலிருந்து மீட்டெடுத்த அன்ரன் பாலசிங்கம்
அவர்களின் அறிவாயுதப் பங்கு மிகப் பெரியது.அடுத்ததாக 2001 ஆம் ஆண்டு புலிகளால்
பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு தலைப்பட்ச யுத்த நிறுத்தமானது, போராட்டத்தினை சர்வதேச
மயப்படுத்த வேண்டிய தேவை கருதி உருவாக்கப்பட்டதொரு முன்னகர்வு உத்தியாகும்.

முரண்பாடுகளைச் சரியாகக் கையாண்டு, தேசிய விடுதலைப் போரினை முன்னகர்த்தும்
பிரபாகரன் அவர்களின் முதன்மையான அரசியல் போராட்டத் தளபதியாக 'தேசத்தின் குரல்"
பாலசிங்கம் விளங்கினார்.

மேற்குலகின் காலநீட்சித் தந்திரத்தினை எதிர்கொண்ட புலிகள், திரு. அன்ரன்
பாலசிங்கத்தினூடாக தமிழ் மக்களின் விடுதலை வேட்கையை, தன்னாட்சிப் பிறப்புரிமையை
பேச்சுவார்த்தை மேடைகளில் உலகறியச் செய்தனர்.

பேச்சுவார்த்தைச் சடங்குகள் இனி நடைபெறும் வாய்ப்புக்கள் மிக அரிதாகத்
தென்பட்டாலும் தமிழீழ நாட்டுருவாக்க கால கட்டத்தில் 'பாலரின்" பங்களிப்பு
உணரப்படப் போகிறது.

அவர் இன்று இல்லை. இருப்பினும் அவர் ஆளுமைத் திறனை அவரோடு இருந்து உள்வாங்கிய
தலைமை, அதனையும் எதிர்கொள்ளும்.

-சி.இதயச்சந்திரன்-

நன்றி: வீரகேசரி வார வெளியீடு

No comments: