Friday, December 29, 2006

4.இலங்கைக்கு வருவாரா கருணாநிதி?

இலங்கைப் பிரச்சினையில் `ராஜீவ் படுகொலை' பெரிய தடைக்கல்லாகவே கடந்த பல வருடங்களாக இருந்து வந்தது. தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்துமே அதை எப்படிச் சமாளிப்பது என்பது புரியாமல் திகைத்துக் கொண்டிருந்தன. `ராஜீவ் கொலை' செய்யப்பட்டதால் விடுதலைப் புலிகள் மீது தமிழகம் உட்பட ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏற்பட்ட கோபம்,இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிப் பேசுவதற்கே முட்டுக்கட்டையாக மாறியது.

ஏனென்றால், மற்ற தமிழீழப் போராட்டக் குழுக்கள் எல்லாம் பலம் இழந்துவிட்ட நிலையில், விடுதலைப் புலிகள் மட்டுமே `தனி ஈழம்' போராட்டத்தில் முன்னணியில் இருக்கிறார்கள். குறிப்பாக, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு இது பெரும் தர்மசங்கடமாக மாறியது. விடுதலைப் புலிகளையும் தமிழர் பிரச்சினையையும் இங்குள்ள கட்சிகள் பிரித்துப் பார்க்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தன.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட இலங்கை இராணுவம் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது. அந்த வரிசையில் 64 அப்பாவிக் குழந்தைகள் மீது இலங்கை இராணுவம் நடத்திய தாக்குதல் தமிழகத்தில் கடுமையாக எதிரொலித்தது.

இதுபோன்ற சில சம்பவங்கள், விடுதலைப் புலிகளுக்கு தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் மறுபடியும் மெலிதான ஆதரவைத் தேடித் தந்தது. ஆயினும், கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியுடன் நேரடி வம்பு வந்துவிடப் போகிறது என்பதால் மிகவும் கவனமாகவே காய் நகர்த்தினார் முதல்வர் கருணாநிதி.

சோனியா காந்தியை தமிழர் பிரச்சினையைப் பற்றிப் பேச வைக்கவேண்டும் என்பதே முதல்வருடைய முதல் கணக்கு. இதற்காக ராஜீவ் நினைவிடத்துக்கு சோனியா காந்தியுடன் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பிறகு, சோனியாவை சந்தித்தபோது இலங்கைத்தமிழர்களின் நிலைமையை எடுத்துச் சொன்னார்.

இதைத் தொடர்ந்து, "இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா அக்கறை செலுத்தும் என்றும், `தமிழர்களைக் கொல்ல ஆயுதம் வழங்க மாட்டோம்' என்றும் அறிவித்து கருணாநிதிக்கு கடிதம் எழுதினார் சோனியா. உடனே பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி இலங்கைக்கு இந்திய அரசு ஆயுதம் அனுப்பவில்லை. வெடிபொருட்கள் போனது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார். இப்படியெல்லாம் படிப்படியாக இலங்கைத் தமிழர் பிரச்சினையின் மத்தியிலுள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு ஒருபிடிப்பு ஏற்பட்டது.

இப்படிப் பல முயற்சிகளை தமிழக முதல்வர் செய்தாலும், விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இதற்குப் பெரிய `ரெஸ்பான்ஸ்' இல்லை. இந்தநிலையில்தான் விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் மறைந்தார். அவருக்கு உடனடியாக அனுதாபம் தெரிவித்து முதலில் அறிக்கைவிட்டார் கருணாநிதி.

இதைப் பார்த்தபிறகு விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் தமிழ்ச்செல்வன் கருணாநிதியைப் பாராட்டினார். இதேசமயத்தில், விடுதலைப் புலிகள் ஆதரவு பெற்ற இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் சென்னை வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்தார்கள். அவரும் இவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பதற்கு `அப்பாயின்ட்மென்ட்' வாங்கிக் கொடுத்தார்.

சோனியா இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அக்கறை காட்டுகிறார் என்பது தெரிய வந்தபிறகுதான் மன்மோகன் சிங் இலங்கை எம்.பி.க்களை சந்திக்க நேரம் ஒதுக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறைக்குறைய 20 வருடங்களுக்குப் பிறகு இந்தியப் பிரதமரை விடுதலைப் புலிகள் ஆதரவு பெற்ற இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் சந்தித்தது இதுவே முதல்முறை! இது இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் புதிய பார்வையை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்தது.

பிரதமர் - இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பையும் விடுதலைப் புலிகள் தங்கள் `நெட்டில்' சூப்பராக செய்தியாக்கினார்கள். கூடவே முதல்வர் கருணாநிதியின் தூதுவராக சுப வீரபாண்டியனும் கலந்துகொண்டார் என்றும் விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

இதேமுயற்சியை முன்பு தமிழ் எம்.பி.க்கள் சொல்லாமலேயே வைகோ கையிலெடுத்தார். `நாளை பிரதமரை தமிழ் எம்.பி.க்கள் குழு சந்திக்கிறது' என்று அறிவித்தார்.

ஆனால், வைகோவின் முயற்சிக்கு பிரதமர் அப்போது ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால், முதல்வர் கருணாநிதி எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. காரணம், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கருணாநிதியின் முயற்சிகளால் சோனியாவுக்கு ஏற்பட்ட மனமாற்றம்!.

தமிழ் எம்.பி.க்கள் வந்து போன பிறகு சென்னையில் இலங்கைத் தமிழருக்காக நடைபெற்ற மனித சங்கிலிப் போராட்டத்தில் தி.மு.க. கலந்து கொண்டுள்ளது. ஆனால், அமைச்சர்களை அனுப்பாமல் தனது கட்சியின் அமைப்புச் செயலாளராக இருக்கும் டி.கே.எஸ். இளங்கோவனை போராட்டத்தில் கலந்துகொள்ள வைத்தார் கருணாநிதி.

இதற்கிடையில், அகதிகளாக வந்த இலங்கை தமிழ் மாணவர்கள் `ஓ லெவல்' பரீட்சை எழுதுவதற்கும் தமிழக அரசு ஏற்பாடு செய்தது. அந்தத் தேர்வு முடிந்து வந்த மாணவர்கள் மத்தியில் பேசிய முதல்வர் கருணாநிதி, `உங்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி நீங்கள் இங்கே வந்து என்னைப் பார்ப்பதைப் போல் நான் அங்கே வந்து உங்களையெல்லாம் பார்க்கின்ற' காலம் வரவேண்டுமே என்ற கவலை எனக்கு மிகவும் உண்டு என்று உணர்ச்சி வசப்பட்டார்.

அவர் மேலும் பேசும்போது, `சில நேரங்களில் அங்கே ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக நான் வருவது நல்லதல்ல என்று அங்கிருந்த அரசும் எனக்குச் செய்தி அனுப்பியது. இங்குள்ள அரசும் என்னைத் தடுத்து நிறுத்தியது. நான் ஒருமுறை இந்தியப் பிரதமர் திருமதி இந்திராகாந்தியிடமே இதைச் சொன்னபோது நான் ஏற்பாடு செய்யட்டுமா? நீங்கள் போய் வருகிறீர்களா? என்றுகூடக் கேட்டார்கள். அப்போது இலங்கையிலே இதைவிட அதிகமாகக் கொந்தளிப்பான சூழ்நிலை. எனவே, அந்தப் பயணமும் தடைப்பட்டது' என்று கூறியுள்ளார்.

இதில் அவர் அறுதியிட்டுச் சொல்ல விரும்புவது `இலங்கை செல்லத் தயாராக இருக்கிறேன்' என்பதுதான்! ஆனால் எப்படி? நிச்சயமாக விடுதலைப் புலிகளின் சார்பில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போகமாட்டார். அதை அவர் விரும்பவும் மாட்டார். ராஜீவ் கொலைக்குப் பிறகு விடுதலைப் புலிகளிடமிருந்து ரொம்பவுமே ஒதுங்கிச் சென்றுவிட்ட கருணாநிதி, அமைதி முயற்சியின் அங்கத்தினராக அங்கே செல்வதை விரும்பவில்லை என்றே தெரிகிறது.

ஆனால், இலங்கைத் தமிழர்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் ஒரு `சமாதான விரும்பியாக' கொழும்புக்குப் போக கருணாநிதி விரும்பலாம்.

இலங்கை அதிபர் ராஜபக்ஷவைப் பொறுத்தமட்டில், கருணாநிதி முதல்வரானவுடனேயே ஆறுமுகன் தொண்டமானை இங்கு அனுப்பிப் பேச வைத்தார். மலையகத் தமிழர்களின் தலைவரான ஆறுமுகம் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் தற்போது ராஜபக்ஷவின் அமைச்சரவையில் மந்திரியாக இருக்கிறார். சென்ற மே மாதத்தில் தமிழக முதல்வரை சந்தித்த அவர், இலங்கைக்கு ஒருமுறை வாருங்கள்' என்று அழைப்புவிட்டதாக டெல்லி வட்டாரத்தில் தகவல் உண்டு.

ஆறுமுகம் தொண்டமானின் அழைப்பைத் தொடர்ந்து சென்னையிலுள்ள ஷ்ரீலங்கா பிரதி உயர்ஸ்தானிகர் கருணாநிதியைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டதாகவும், அது நிலுவையில் இருப்பதாகவும் தலைமைச் செயலக வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர். எல்லாம்கூடி இந்திய அரசும் இலங்கை அரசும் முன்வந்தால் முதல்வர் கருணாநிதி இலங்கைக்குப் போகும் சாத்தியக் கூறுகள் அமையலாம். `சமாதான விரும்பியாக அவர் இலங்கை சென்றால் தமிழர் பிரச்சினை தீர்வுக்கு நல்லதொரு வழி கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

அதிகாரப் பகிர்வு குறித்து பரிந்துரை செய்ய இலங்கை அரசு நியமித்த கமிட்டி தமிழர்களுக்கு துணை ஜனாதிபதி பதவியும், இந்தியாவில் உள்ள மாநிலங்கள் போல் அதிகாரம் உள்ள மாநிலத்தையும் வழங்கத் திட்டம் தீட்டியுள்ளது.

`இலங்கையில் சமஷ்டி அரசு அமைய சந்திரஹாசனின் தந்தை செல்வா எப்படியெல்லாம் பாடுபட்டார்' என்று இதுபோன்ற நேரத்தில் கூறியுள்ள கருணாநிதி, கடந்த காலங்களில் இலங்கை செல்ல விரும்பினேன் என்பதையும் கூறுகின்றார் என்பது இங்கே கவனிக்கத்தக்க அம்சம்.

-தமிழன் எக்ஸ்பிரஸ்-

Thursday, December 28, 2006

3.பாலசிங்கத்தின் மரணத்தையடுத்து புலிகள் வழிகாட்டியில்லாத கபோதியாகிவிட்டதாக நினைக்கிறார்கள் சிங்கள இனவாதிகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நியாயவாதியாகிய கலாநிதி அன்ரன் ஸ்ரனிஸ்லஸ் பாலசிங்கம் சில நாட்களின் முன்னர் லண்டனில் காலமானார். காலமாகும் போது 68 வயதுடையவரான பாலசிங்கம் இறுதியில் புற்றுநோய் வாய்ப்பட்டிருந்தார். இதற்கு முன்னரும் கூட கடந்த சுமார் 35 வருடங்களாக இவர் கடுமையான நீரிழிவு, தொண்டைக்கட்டி, நிரந்தரமான இரத்த அழுத்தம் ஆகிய வியாதிகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கலாநிதி பாலசிங்கம் தனது தாய் நாடாகிய ஈழம் தேசத்தைவிட்டு வெகு தூரத்தில் லண்டனில் நோய்வாய்ப்பட்டு வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும்போது அவருடைய தாய்நாடு ஸ்ரீலங்கா அரச படையினரின் பலத்தால் இரண்டாகிக் கொண்டிருந்தது.

யாழ்ப்பாணம் தீபகற்பத்தைச் சுற்றி முட்கம்பிகள் அடிக்கப்பட்டுள்ளன. இராணுவம் தமிழரின் வீடுவாசல், தோட்டம் துரவு, பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்களைக் கைப்பற்றியுள்ளது. அங்கு நித்தமும் கொலைகள், ஆட்கடத்தல்கள், கைதுகள். கடந்த சில தசாப்தங்களாக அங்கு வாழும் மக்கள் தமது தாய் மண்ணின் சுதந்திரத்தை இழந்து வந்துள்ளனர்.

விவசாய நிலங்கள் பற்றைகளாகி விட்டன. மீனவர்கள் தொழிலிழந்துவிட்டனர். யாழ்ப்பாணத்தை ஏனைய பகுதிகளுடன் தொடர்புபடுத்தும் ஏ-9 பாதை மூடப்பட்டுவிட்டது.

அங்கு உணவு இல்லை; மா இல்லை; மருந்துகள் இல்லை. வயதானவர்கள் நீரிழிவுக்கும், இரத்த அழுத்தத்திற்கும் மருந்துகள் இன்றி மடிந்து வருகின்றனர். பசியால் அலறும் கைக்குழந்தைகளின் பசியை ஆற்றுவதற்கு கொத்தமல்லித் தண்ணீருக்கும் அங்கு வழியில்லை.

கிழக்கு மாகாண மக்கள் மேலிருந்து வந்து கொண்டிருக்கும் குண்டுகளுக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான குடிமக்கள் குழந்தைகளுடனும் முடிச்சுகளுடனும் கந்தளாய் பிரதேசத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள்.

இலட்சக்கணக்கான மக்கள் அபாயங்களுக்கு மத்தியிலும் அகதி முகாம்களில் குவிந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும், இலட்சக்கணக்கானோர் மரண பயத்துடன் படகுகள், கட்டுமரங்களில் ஏறி பாதுகாப்புத் தேடி தென் இந்தியாவுக்கு தப்பியோடிக் கொண்டிருக்கிறார்கள்.

பெரும்பகுதி ஈழம் தேசமும் இனவாத நோய்க்குப் பலியாகியுள்ளது.

ஈழத்தில் வசிக்கும் தமிழர்கள் நரகத்தில் வசித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

மரணப்படுக்கையில் அவலப்பட்டுக் கொண்டிருந்த பாலசிங்கத்தை சந்திக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர் அவர் படும் வேதனையைப் பார்த்து அதிர்ந்து போனார். அப்பொழுது பாலசிங்கம் இப்படிச் சொன்னார்.

"இந்த வியாதி துரதிர்ஷ்டமான எனது தனிப்பட்ட வேதனை. ஆனால், எமது மக்கள் முகம் கொடுத்துவரும் பெரும் சமுத்திரம் போன்ற சமூக அவலத்துடன் ஒப்பிடும்போது, எனது துன்பம் ஒரு துளி மட்டுமே. எனது வியாதிக்காக அன்றி அரை உயிர்களாகிவிட்ட எமது மக்களைத் துன்பங்கள் வேதனைகளிலிருந்து விடுவிப்பதற்கு முடியாத நிலையில் இருப்பதற்காகவே நான் பெரும் துயரம் அடைகிறேன்"

பாலசிங்கத்தின் உள்மனத்தில் அவரது மக்களின் மீது அவர் வைத்திருக்கும் பற்று, கருணை மற்றும் தேசபக்தி என்பவற்றையே அவருடைய கூற்று உணர்த்தியுள்ளது. அது மக்கள் மீதான கருணையிலும் பற்றிலும் ஊறிக்கிடக்கும் உத்தம இதயமாகும்.

பாலசிங்கம் இந்த உதார, உத்தம, பிறருக்காக வாழும் கொள்கைக்காக இறுதிவரை தனது வாழ்வை அர்ப்பணித்துள்ளார் என்றால் அந்த தியாக வாழ்வு பற்றி அறிந்துகொள்வதும் மிகவும் அவசியமாகும்.

பாலசிங்கத்தின் இழப்பிற்காக புலிகள் அமைப்பு மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கவும், வெளிநாட்டுத் தமிழர்கள் மேலும் மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கவும் அறிவித்தல் கொடுத்தது.

கடந்த 20 ஆம் திகதி காலை 8.00 மணியிலிருந்து 3.00 மணிவரையில் லண்டன் அலெக்சான்டிரா மாளிகையில் பொது மக்கள் இறுதி கௌரவம் செலுத்துவதற்காக அவருடைய உடல் வைக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் அன்று மாலை நிகழ்த்தப்பட்டன.

ஸ்ரீலங்காவில் கல்விகற்ற அன்ரன் ஸ்ரனிஸ்லஸ் பாலசிங்கம் லண்டன் பல்கலைக்கழகத்திலும் கலைமாணி ஆ.அ. பரீட்சையில் சித்தியடைந்தார்.

சிறிதுகாலம் பத்திரிகையாளராக சேவை செய்த அவர் பின்னர் கொழும்பு பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் தமிழ் - ஆங்கிலம், ஆங்கிலம் - தமிழ் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார்.

அவர் பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றியபோது காலஞ்சென்ற பிரபல நாடக இலக்கியக் கலைஞராகிய சுகதபால டி சில்வாவும் அங்கு மொழிபெயர்ப்பு சேவையிலிருந்தார்.

பின்னர் பாலசிங்கம் லண்டனுக்கு சென்றார். அங்கு அவருக்கு பிரித்தானியக் குடியுரிமை கிடைத்தது. இது 1970 மத்திய காலப்பகுதியிலாகும்.

பின்பு பாலசிங்கம் ஒரு தடவை இலங்கைக்கு வந்து சிறிதுகாலம் இருந்த பின்னர் இந்தியாவுக்குச் சென்றார். தொடர்ந்து மறுபடியும் இங்கிலாந்து சென்று தனது இறுதிக்காலம் வரை அங்கே லண்டனிலேயே வாழ்ந்தார்.

இங்கிலாந்தில் லண்டன் பல்கலைக்கழகத்தில் மாக்சிசவாத மனோதத்துவத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார்.

எனக்கு பாலசிங்கத்தின் அறிமுகம் 1970 களின் பிற்பகுதியிலேயே ஏற்பட்டது. அப்பொழுது எனக்கு லண்டனில் நண்பர்கள் பலர் இருந்தனர்.

அப்பொழுது, பாலசிங்கம் என்பவர் பட்டதாரிகள் சங்கம் ஒன்றை அமைத்து சஞ்சிகை ஒன்றை வெளியிட்டு வருவதாக அப்போது கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், அந்தச் சங்கத்தின் அல்லது சஞ்சிகையின் பெயர் எனக்கு இப்பொழுது ஞாபகம் இல்லை.

அது ஈழம் விடுதலை குறிக்கோளை முன்வைத்து ஆயுதக் குழுக்கள் உருவாகிக் கொண்டிருந்த காலகட்டமாகும். அவ்வாறான ஐந்து ஆயுதக் குழுக்கள் அப்போது இருந்தன. அவற்றில் தமிழர் விடுதலைப்புலிகள் அமைப்பும் புரட்சிகர ஈழம் மாணவர் அமைப்பும் பிரபலமாக இருந்தன.

இந்தக் காலத்தில் நான் காலஞ்சென்ற கீர்த்தி பாலசூரிய சகோதரர்களின் தலைமைத்துவத்தில் இயங்கிவந்த புரட்சிகர கம்யூனிஸ்ட் அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்தேன்.

இந்த புரட்சிகர கம்யூனிஸ்ட் அமைப்பு தமிழர் விடுதலைக் கொள்கைக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிவந்தது. "அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை, அதாவது தமக்கெனத் தனியான அரசை அமைத்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது" என்ற சர்வதேச இரண்டாவது மண்டல பொதுவுடைமை அமைப்பின் இரண்டாவது சம்மேளனத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே மேற்படி ஆதரவை புரட்சிகர கம்யூனிஸ்ட் அமைப்பு வழங்கியது.

கீர்த்தி பாலசூரிய சகோதரர்கள் இன்று இல்லை. நானும் பொதுவுடைமை சமத்துவக் கட்சி எனப் பிரிந்து இயங்கும் புரட்சிகர கம்யூனிஸ்ட் அமைப்பில் இல்லை. பொதுவுடைமை சமத்துவ கட்சி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சுயநிர்ணய உரிமை என்ற கொள்கையை காலால் உதைத்துவிட்டது.

மீண்டும் பாலசிங்கத்தின் வரலாற்றுக்குத் திரும்புவோம்.

அந்த நாட்களில் பாலசிங்கம் இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றி பல கட்டுரைகளை வெளியிட்டார். அவை எதில் வெளியிடப்பட்டன என்பதும் எனக்கு ஞாபம் இல்லை. கீழ்க்காணும் குழுக்களின் பிரசுரங்களில் வெளியிடப்பட்டதாக பேராசிரியர் சிவத்தம்பி கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா இடதுசாரி அமைப்பு என்பதே இந்தக் கடிதங்களைத் தொகுத்துள்ளது. அவ்வாறான இடதுசாரி அமைப்பு இயங்கியது பற்றியும் ஞாபகம் இல்லை. ஆயினும், அவ்வாறு ஜனநாயகக் கோட்பாட்டுடன் இணைந்து இடதுசாரி அமைப்பு ஒன்று அப்பொழுது இருக்கவில்லை. அந்தக் காலத்தில் தலைவர்கள் இடதுசாரிக் கோட்பாடுகளை முதலாளித்துவத்துக்கு பலிகொடுப்பவர்களாகவே இருந்தனர். இவ்வாறு பலியிடப்பட்ட இடதுசாரி அமைப்புகளோ தமிழர் விரோதமானதும் வர்க்க ரீதியானதுமான கொள்கை முகமூடிகளுடன் முன்னணிக்கு வந்தன.

பாலசிங்கம் தனது கட்டுரைகளில் அடிக்கடி லெனின் கோட்பாடுகளை எடுத்துக் காட்டிவந்தார். இரண்டாவது மண்டல நாடுகளிடையே ஒடுக்கப்பட்ட நாடுகளை வேறுபடுத்திட தனியரசு நிறுவும் சுயநிர்ணய உரிமைக்காக பயமின்றி உறுதியுடன் போராடியவர் விளாடிமிர் இலிச் லெனின் ஆகும். இந்தப் போராட்டத்தில் இதற்கு எதிராகப் பேசிய அனைவரும் லெனின் தரப்பு மார்க்சிசவாதிகள் என்று பெயரிடப்பட்டு பிரிக்கப்பட்டு நிராயுதபாணிகளாக ஆக்கப்பட்டனர்.

நான் இந்த விடயம் சம்பந்தமாக லெனின் கோட்பாட்டை இங்கிருந்தே கடைப்பிடிக்க ஆரம்பித்தேன். இது சம்பந்தமாக லெனின் எழுதிய அனைத்தையும் படித்த நான் அன்றிலிருந்து இன்றுவரை ஒடுக்கப்பட்ட இனத்தின் பிரிந்துசென்று தனியரசு அமைக்கும் ஜனநாயக உரிமைக்காகவே அசையாது நிற்கிறேன்.

டாண்டே கூறியதும் மார்க்ஸ் ஏற்றுக்கொண்டதும், எனக்கு உதாரண பாடமாக அமைந்ததுமான வாசகம் கீழே உள்ளது.

தனது பாதையில் தான் செல்வதே சிறந்தது. வெகுஜன குறைகூறல்களைப் பொருட்படுத்தாது.

லெனின் தனது இறுதிக் காலத்தில் இவ்வாறு கூறியதன் மூலம் வர்க்கவாதி ஓட்சோனிகிட்சே, ஜோசப் ஸ்ராலின் ஆகிய வர்க்கவாதிகளுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்திருந்தார்.

ரஷ்ய புரட்சியில் லெனினுடன் சமமான தலைவராக விளங்கிய லியோன் ரொட்ஸ்கி இவ்வாறு கூறுகிறார்.

"பெண்கள், பிள்ளைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட இனத்தவர் மீது காட்டப்படும் ஒதுக்கலில் இருந்தே மனிதர்களின் கலாசாரம் தோன்றுகிறது".

இதற்கு ஏற்பவே தமிழர் விடுதலைப் புலிகள் அமைப்பும் உருவாகி மக்கள் பலத்தை திரட்டியது.

தமிழர் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் காலஞ்சென்ற பாலசிங்கம் பற்றிய இரங்கல் செய்தியில் இவ்வாறு கூறினார்.

"சில தசாப்தங்கள் வரை தமிழர் தேசியத்தின் அகிம்சைவாதியாக விளங்கியவர். தமிழர் தேசிய பிரச்சினையை சமாதான வழியில் தீர்க்க முடியாத நிலையிலேயே ஆயுதப் போராட்ட கொள்கை எழுந்தது. இந்தக் கொள்கையில் முன்னணியில் இருப்பது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பே ஆகும்.

பாலசிங்கம் இந்த அமைப்பில் இணைந்து நியாயவாதியாக, வழிகாட்டியாக கொள்கை அறிவிப்பாளராக விளங்கினார். இவர் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உயிரோடு உயிராக இணைந்தவராக உருவானார். பிரபாகரனை "தம்பி (சிங்களத்தில் மல்லி, பொடி எக்கா) என்று அழைத்தவர் பாலசிங்கமே. பிரபாகரன் பாலசிங்கத்தை "அண்ணை (சிங்களத்தில் அய்யா, பாலா அய்யா) என்று அழைத்தார்.

அன்றிலிருந்து சர்வதேச மட்டத்தில் மிகச் சிறந்த முறையிலும் பயமின்றியும், ஸ்ரீலங்காவில் ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்தின் உண்மையான அவலங்களை எடுத்துரைத்தவர் பாலசிங்கமே.

அவருடைய ஓசையை அடக்க எந்தவொரு இனத்தவராலும் முடியவில்லை. அதுமட்டுமின்றி, ஸ்ரீலங்காவில் சிங்கள முதலாளித்துவ வர்க்கத்தின் கொடுமைகளை உலகத்துக்கு வெளிப்படுத்தியவரும் பாலசிங்கமே.

பிரபாகரனின் மாவீரர் தின உரையை ஆண்டுதோறும் எழுதி, உருவாக்கி அவை நிகழ்த்தப்பட்ட பின்னர் லண்டனிலிருந்து அதுபற்றி உலகத்துக்கு விவரித்து அறிவித்து வந்தவரும் பாலசிங்கமே என்பதை அறியாதவர்கள் இல்லை.

பாலசிங்கத்தின் முதலாவது தமிழ் மனைவி காலமான பின்னர், அவருடைய 38 வருடகால நீண்ட நோயுற்ற காலத்தில் அவரைப் பிரியாது நிழல்போல் அவருடன் வாழ்ந்தவர் அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த அடேல்.

அவுஸ்திரேலிய நாட்டுப் பெண்மணியாகிய அடேலை, பாலசிங்கம் திருமணம் செய்தது 1978 ஆம் ஆண்டிலாகும்.

புலிகள் இயக்கத்தில் பாலசிங்கம் தலைமைத்துவம் பெற்ற காலகட்டத்தில் வெளிநாட்டு யுத்த விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்த்து வந்த அவுஸ்திரேலிய நாட்டின் சட்டங்களுக்கேற்ப அடேலைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவை வியர்த்தமாகிவிட்டன. இவர் எழுதி வெளியிட்ட, Will to Power அதிகாரத்துக்கான உரிமை என்ற நூலில் தமிழர் விடுதலைக் கோட்பாட்டில் அவருக்கிருந்த அபரிமிதமான நாட்டம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அந்த அமைப்புக்காக அவர் அனுபவித்த பெரும் துயரங்களையும் அர்ப்பணிப்புகளையும் பற்றி அந்த நூலில் கூறப்பட்டுள்ளது.

பாலசிங்கம் அனைத்துப் பேச்சுவார்த்தைகளின் போதும் பெற்ற அனுபவங்களை அடிப்படையாக வைத்து எழுதி வெளியிட்ட War and Peace போரும் சமாதானமும் என்ற நூல் விடுதலை புலிகள் அமைப்புக்கும் தமிழர் விடுதலைக் கோட்பாட்டுக்கும் அவர் செய்த விலைமதிப்பற்ற கொடையாகும்.

ஸ்ரீலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தைகள் என்ற பெயரில் விடுதலைப்புலிகள் அமைப்பை ஏமாற்றச் செய்த அனைத்து வஞ்சகச் செயற்பாடுகளும் எழுத்துமூலமான காட்சிகளுடன் அந்த நூலில் நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்த நூலைப் படிக்கும்போது தமிழினத்தின் விடுதலையை தனியான சுதந்திர ஈழம் அரசு அமைப்பதன் மூலமே அடைய முடியும் என்பதை எவரும் உணர்வர்.

பாலசிங்கம் காலமானதையிட்டு ஸ்ரீலங்கா அரச தரப்பு இனவாதிகள் மகிழ்ச்சியடைந்திருப்பர். அவர்கள் தற்போது புலிகள் அமைப்பு வழிகாட்டியில்லாத கபோதியாகிவிட்டது என்று நினைக்கிறார்கள்.

-தொடரும்-
-பேராசிரியர் சுச்சரித்த கமலத்-

2.போருக்குப் பின்

குழந்தையாக இருக்கும்பொழுதே தந்தையை இராணுவம் சந்தேகத்தின் பேரில் அழைத்துச்
சென்று தடுப்பு முகாமில் வைக்கிறது. குழந்தை வளர்ந்து சிறுவனாகிறான்.
தடுப்புமுகாமுக்கு கொண்டுசெல்லப்பட்ட கணவனின் நிலை என்ன என்று அறியாத மனைவி.
தந்தை பற்றிக் கேள்வி எழுப்புகிறான் சிறுவன். தந்தையின் அன்புக்காக ஏங்கும்
சிறுவனின் ஏக்கம் வெளிப்படுகிறது. யாழ்பாணத்தின் யுத்தகாலத்துக்கு பின்னர் உள்ள
சூழலில் வாழும் பிஞ்சுக் குழந்தைகளின் வாழ்வியலை ஊடறுத்துச் செல்லும் உண்மைகளை
திரையில் செதுக்கியிருக்கும் அருமையான படைப்புகளில் ஒன்று இந்த அழுத்தும்
குறும்படம். சமாதானச் சுருள் என்கின்ற பெயரில் வெளியான ஏழு குறும்படங்களில்
இதுவும் ஒன்று. நிதர்சனமும் ஸ்கிறிப்ட்நெற்றும்(Scriptnet) இணைந்து வழங்கிய
குறும்படம்.







நன்றி :- யாழ்.com

1.'தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் பற்றிய புரிதல்

டகிழக்கு இணைந்த நிலப்பரப்பு தமிழர் தாயகமாகும். இவ்விணைப்பு பாலசிங்கம்
அவர்களின் பிறப்பிலுமுண்டு. இவர் பிறப்பே தாயகக் கோட்பாட்டைச் சுமந்துள்ளது.
பொதுவாக மக்கள் வயச் சிந்தனையாளர்களே ஊடகப் பணியில் தம்மை இணைப்பார்கள். வளரும்
நிலையில், மக்களை நோக்கிய பார்வையைப் பெறுகிறார்கள்.

வளர்ந்த இடமான கரவெட்டி, இடதுசாரி சிந்தனைகளின் விதைநிலம். சமூக
உட்கொடுமைகளுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த மாக்சிசவாதிகள் நிறைந்த சிவப்பு மண் அது.

கருத்துக்கள் பாலர் மீதும் பரவியதால், மக்கள் நலச் சிந்தனைகள் முன்னுரிமை பெற்றன.



DSCF0234



வேற்றுமொழிச் சிந்தனைகளும், செய்திகளும் இவரால் தமிழாக்கமடைந்து, வீரகேசரி மூலம்
மக்களைச் சென்றடைந்தது. மக்களுடன் நேரடி இணைப்பை உருவாக்கும் ஊடகச் சாதனமே இவரின்
ஆத்மார்த்தத் தெரிவாகவிருந்தது. அவை அளித்த பயிற்சியும், மாக்சிச புரிதலும் ஆளுமை
திறனாக்கத்திற்கு பெரிதும் உதவி இருக்க வேண்டும்.

செயல்முறையில் மாக்சிசத் தத்துவத்தை பிரயோகித்த மேதை லெனினின், தேசிய இனங்கள்
தொடர்பான சுயநிர்ணய உரிமை குறித்து கவனிக்கப்பட வேண்டிய தேவை கருதி, கூடுதல்
அக்கறை கொண்டிருக்க வேண்டும்.

தேசிய இனங்கள் மீதான அரச அடக்குமுறை விரிவடையும் போது முழு இலங்கைப் புரட்சி
பற்றியதான விளக்கங்கள் கனவுலகப் புரட்சிக்கே வழிவகுக்குமென்பதையும் 'பாலர்"
புரிந்துள்ளார்.

யதார்த்தங்களை மறுதலித்து, தத்துவங்களை நியாயப்படுத்த மேற்கொள்ளப்படும்
குருட்டுத்தனமான புரட்சியை இவர் நம்பவில்லை.

இவர் எழுதிய 'சோசலிச தமிழீழத்தை நோக்கி" என்கிற தேசிய விடுதலைப் போராட்டத்தின்
முதன்மையான நூலில், அதற்கான விஞ்ஞானபூர்வ விளக்கத்தை தெளிவாக முன்வைத்துள்ளார்.

இவர் பல தத்துவ, சித்தாந்தங்களை தெளிவுற கற்றுணர்ந்தாலும் அவற்றை பிரபாகரன்
அவர்கள் மீதோ அல்லது அவரின் விடுதலை இயக்கத்தின் மீதோ வலிந்து புகுத்த முயலவில்லை.

தன்னியல்பாக எழுந்த போராட்ட வளர்ச்சிப் போக்கினை அதன் உள்ளார்ந்த குணமாற்றத்தின்
வழியில் நகர விட்டு, மண்ணின் வேரறிந்த அரசியல் தளமொன்றினை உருவாக்கினார்.

சில ஈழ விடுதலை இயக்கங்கள், தம்மை மாக்சிச வழி வந்தவர்களாகப் பிரகடனப்படுத்தியவாறு
அந்தச் சித்தாந்தங்களை வலிந்து திணிப்பதிலேயே (Super
Impose
) முனைப்புக் காட்டின.

இலங்கையின் இடதுசாரிக் கட்சிகள் விட்ட தவறுகளை இவர்களும் செய்தனர். நடைமுறையினூடு,
தத்துவங்களை அதன் வரலாற்று முன்னோக்கிய நகர்வோடு இணைப்பதில் திரு பாலசிங்கம்
அவர்கள் வெற்றி கண்டுள்ளார் என்பதனை சமகால நிகழ்வுகள் சுட்டி நிற்கின்றன.

83 இனப்படுகொலையின் பின், ஊதிப் பெருத்த இயக்கங்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப்
புலிகள், ஈரோஸ் மற்றும் அதிதீவிர இடதுசாரிகளான தமிழீழ தேசிய விடுதலை முன்னணி
போன்றவை உறுப்பினர்கள் சேர்க்கையில் மிகுந்த நிதானத்துடன் செயற்பட்டன.

லண்டனில் உருவான ஈரோஸ் இயக்கத்தினர், மாக்சிச வழிமுறையில் வகுக்கப்பட்ட கொள்கைப்
பிரகடனத்துடன் களமிறங்கி முற்போக்குச் சிந்தனை பெற்ற புத்திஜீவிகளை தம்முடன்
இணைப்பதில் அக்கறை கொண்டார்கள்.

சித்தார்ந்தத் தெளிவு பெற்ற, உறுதியான 50 பேர் கொண்ட புத்திஜீவிகள், போராட்ட
இயக்கத்தினை வழிநடத்தும் மூலக்கருவாக இருப்பார்களென்ற கருத்து ஈரோஸ் ஸ்தாபகரால்
அன்று முன்வைக்கப்பட்டது.

'தனி நபர் நிறுவனத்தினை நிர்மாணிப்பார். நிறுவனமானது தலைமையினை உருவாக்கும்"
என்பதே ஈரோஸ் இயக்க ஸ்தாபகர் திரு. இரத்தினசபாபதி அவர்களின் கூற்று. ஆயினும்
ஈரோஸைப் பொறுத்தவரை, இக்கூற்றானது இறுதிவரை சாத்தியப்படாத தொகுதி விடயமாகி விட்டது.


இதேபோன்று என்.எல்.எவ்.டி (NLFT) இயக்கமானது
திரு.விசுவானந்ததேவன் தலைமையில் மாசேதுங்கின் தத்துவச் சிந்தனையின் அடியொற்றி,
போராட்டம் பற்றிய தமது கருத்தியலை முன்வைத்தது. இவர்கள் தமது தோழர்களை அரசியல்
மயப்படுத்துவதிலேயே அதிக காலத்தைச் செலவிட்டுள்ளனர்.

இடதுசாரிப் பாரம்பரியத்தில் உருவான இவ்வியக்கத் தலைவர், முன்னைய இடதுகளின் அதே
வழிமுறைகளைக் கையாள முற்பட்டார். குமுதினிப் படகு படுகொலையில் அவரும் இறந்து
போனார்.

இவற்றுள் புலிகள் இயக்கமானது, அரச இயந்திர அடிவருடிகளைக் களையெடுப்பதினூடாகத் தமது
ஆரம்ப நகர்வுகளை மேற்கொண்டது.

70 களின் முற்பகுதிகளில் தமிழ் அரச பிரதிநிதிகளும், தமிழ் காவல்துறையினரும்
இணைந்து ஆயுதப் போராட்ட முனைப்பினை முளையிலே கிள்ளி எறியும் நடவடிக்கைகளைத்
தீவிரப்படுத்திய வரலாறு சகலருக்கும் தெரியும்.

79 வரை களையெடுப்புக்களும், பின்தளப் பண்ணைகள் உருவாக்கமும், இயக்கச்
செயற்பாட்டினை நிதியினை அரச இயந்திரங்களிடமிருந்து புரட்சிகர வன்முறை வழிமூலம்
பெறுதலும் இடைவிடாது நிகழ்ந்து கொண்டிருந்தன.

அடுத்த கட்ட வளர்ச்சி நிலையின் திருப்புமுனையில், திரு அன்ரன் பாலசிங்கம்
அவர்களின் வருகை, புலிகளின் வரலாற்றில் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. அரசியல்
பரிமாண மாற்ற நிகழ்வுகள் பாலசிங்கத்தின் இணைவுடன் புதிய அரசியல் கருத்தியல்
தளமொன்றினை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் உருவாக்குவதை அவதானிக்கலாம்.


களை நீக்கத்திலிருந்து தொடங்கி, கெரில்லாப் போராட்ட முறைமைக்கு வளர்ச்சியுற்று,
தற்போது மரபுவழி இராணுவ கட்டமைப்பினைக் கொண்டதொரு தேசிய இராணுவமாக புலிகள்
உருமாற்றமடைந்து விட்டார்கள்.

இப்படி முறை வளர்ச்சியின் இயங்கியல் ஓட்டத்தில் தத்துவாசிரியரின் பங்களிப்பு,
கெரில்லா போராட்ட வளர்ச்சியுடன் ஆரம்பமானதெனக் கொள்ளலாம்.

அவரின் கெரில்லா போராட்டம் குறித்தான சிறு நூலொன்றையும் அவர் சார்ந்த இயக்கம்
வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பின் தளமிட்டிருந்த காலகட்டத்தில் இவர் எழுதிய 'சோசலிசத் தமிழீழத்தை
நோக்கி" என்ற நூல், அங்குள்ள இடதுசாரி கட்சியினரால் பெரிதும் விரும்பப்பட்டு,
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்தான தெளிவான விளக்கப் புரிதலுக்குப்
பொருத்தமான நூலாகக் கணிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதனை நேர்காணலொன்றில் புலிகளின் கல்விக் கழகப் பொறுப்பாளர் இளங்குமரன் பெருமையாகக்
குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் பல விடுதலை இயக்கங்கள் நிலைகொண்டுள்ள காலத்தில், புலிகள் மீதான
இந்திய உளவுத்துறையின் அழுத்தம் பாரியளவில் இருந்தது. தொலைத் தொடர்புச்
சாதனங்களைப் பறிப்பதும், போராளிகளின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்துவதுமான பல
விதமான புலிகள் விரோதப் போக்குகளை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

மறுபுறமாக இந்தியாவைப் பயன்படுத்தப் போவதாகக் கூறிய மாக்சிச இயக்கங்கள்,
இந்தியாவின் பிராந்திய வல்லரசு நலன்களையும் தமது நலனாக இணைத்துக் கொண்டார்கள். அது
சோகமான வரலாறு.

இருப்பினும் தமது இலட்சியத்தில் திடமான பற்றுறுதி கொண்ட புலிகள் இயக்கம் குறித்து
இந்தியா அவதானமாக இருந்தது.

சில மாற்று இயக்கங்களைத் தூண்டி, 'தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் ஒரு சி.ஐ.ஏ.
உளவாளி என்ற போலிப் பரப்புரையை முடுக்கி விட்டனர்.

சமகால அரசியல் கள நிலவரக் காட்சிகளை கோர்வையாக்கினால் தமது மக்களின் விடுதலையை
வென்றெடுக்க எந்த ஏகாதிபத்தியங்களின் அச்சுறுத்தல்களிற்கும் அடிபணிய புலிகள்
தயாரில்லை யென்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இப்போலிப் பரப்புரையின் பிதாமகர்கள், தற்போது ஏகாதிபத்தியங்களுடன் கூட்டுச்
சேர்ந்து, விடுதலைப் போரினை நசுக்க முயல்வதனை புரிந்தால் சி.ஐ.ஏ. ஏஜெண்டுகள்
யாரென்பது தெரியும்.

தனது பிராந்திய நலன்சார் வெளியுறவுக் கொள்கைக்கு கட்டுண்டு போக மறுத்த புலிகளை
அச்சுறுத்த, 'தேசத்தின் குரலை" நாட்டை விட்டகற்றியது இந்தியா. அவரோடு
சந்திரகாசனையும் வெளியேற்றி புலிகளை அமெரிக்க ஆதரவாளர்களாக்க முயற்சித்தார்கள்.
ஆயினும் புலிகள் தடுமாறவில்லை.

சகல சேறுகளும் பூசியாயிற்று. இனி பூச ஏதுமற்ற நிலையில் இந்திய - இலங்கை ஒப்பந்தம்
ஏற்பட்டது.

பெங்களுரில் அரசியல் போராளி பாலசிங்கத்தின் அறிவாயுதம் கொண்டு அதனையும்
எதிர்கொண்டனர் புலிகள்.

யுத்தம் மூண்டது. உதவி செய்வதாக நடித்த தலைவலி தானாக ஒதுங்கிக் கொண்டது.


ABReturn2


ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கெதிராக உள்நாட்டு எதிரியான சியாங்கே சேக்குடன் கூட்டுச்
சேர்ந்த மாவோவின் தந்திரோபாய நகர்வினைப் பிரயோகித்து, பிரேமதாசாவுடன் உடன்படிக்கை
கண்டார் 'தேசத்தின் குரல்".

பிராந்திய வல்லாதிக்க அமைதிப் படையை வெளியேற்றிய பின், தற்காலிக சமரசம் கொண்ட இன
மேலாதிக்க எதிரியுடன் சமர் புரிந்தனர் புலிகள்.

போராட்டச் சக்தியினை பெரிய அழிவொன்றிலிருந்து மீட்டெடுத்த அன்ரன் பாலசிங்கம்
அவர்களின் அறிவாயுதப் பங்கு மிகப் பெரியது.அடுத்ததாக 2001 ஆம் ஆண்டு புலிகளால்
பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு தலைப்பட்ச யுத்த நிறுத்தமானது, போராட்டத்தினை சர்வதேச
மயப்படுத்த வேண்டிய தேவை கருதி உருவாக்கப்பட்டதொரு முன்னகர்வு உத்தியாகும்.

முரண்பாடுகளைச் சரியாகக் கையாண்டு, தேசிய விடுதலைப் போரினை முன்னகர்த்தும்
பிரபாகரன் அவர்களின் முதன்மையான அரசியல் போராட்டத் தளபதியாக 'தேசத்தின் குரல்"
பாலசிங்கம் விளங்கினார்.

மேற்குலகின் காலநீட்சித் தந்திரத்தினை எதிர்கொண்ட புலிகள், திரு. அன்ரன்
பாலசிங்கத்தினூடாக தமிழ் மக்களின் விடுதலை வேட்கையை, தன்னாட்சிப் பிறப்புரிமையை
பேச்சுவார்த்தை மேடைகளில் உலகறியச் செய்தனர்.

பேச்சுவார்த்தைச் சடங்குகள் இனி நடைபெறும் வாய்ப்புக்கள் மிக அரிதாகத்
தென்பட்டாலும் தமிழீழ நாட்டுருவாக்க கால கட்டத்தில் 'பாலரின்" பங்களிப்பு
உணரப்படப் போகிறது.

அவர் இன்று இல்லை. இருப்பினும் அவர் ஆளுமைத் திறனை அவரோடு இருந்து உள்வாங்கிய
தலைமை, அதனையும் எதிர்கொள்ளும்.

-சி.இதயச்சந்திரன்-

நன்றி: வீரகேசரி வார வெளியீடு