Wednesday, August 22, 2007

சரத் பொன்சேகாவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட யாழ். எறிகணைத் தாக்குதல்: படைத்தரப்பு

சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பென்சேகாவின் உலங்குவானூர்தி பலாலியில் தரையிறங்கும் நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதல் நடைபெற்றதாகவும், எனினும் சீரற்ற காலநிலை காரணமாக சரத் பொன்சேகாவின் பயணம் தாமதமாகியதுடன் தாக்குதலின் பின்னர் அவர் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கான தனது பயணத்தை கைவிட்டுள்ளதாகவும் படைத் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் சிறிலங்கா படைத்தரப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். குடாநாட்டிற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதன் பொருட்டு நேற்று காலை கட்டுநாயக்க வான் படைத்தளத்தில் இருந்து பலாலிக்கு புறப்படத் தயாராக இருந்த இராணுவ உலங்குவானூர்தியில் அவர் ஏறிய போதும் சீரற்ற காலநிலை காரணமாக அவரது பயணம் தாமதமாகியது. எனினும் 45 நிமிடங்களுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் ஆட்டிலெறி எறிகணைகள் பலாலி மற்றும் காங்கேசன்துறை தளங்கள் மீது வீழ்ந்து வெடித்துள்ளன. அதாவது குறித்த நேரத்திற்கு உலங்குவானூர்தி புறப்பட்டிருப்பின் எறிகணைகள் வீழ்ந்த சமயம் அது பலாலியில் தரையிறங்கியிருக்கும். எனினும் இந்த தாக்குதல் செய்தியை அறிந்த சரத் பொன்சேகா தனது பயணத்தை கைவிட்டுள்ளார். பின்னர் கொழும்பில் இருந்து பலாலி நோக்கிச் சென்ற பயணிகள் வானூர்திகளும் கொழும்பை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளன. எனவே தாக்குதல் நடைபெற்ற நேரத்தை நோக்கும் போது விடுதலைப் புலிகளின் இந்த தாக்குதல் இராணுவத் தளபதியை குறிவைத்து நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால் இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் "இது படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் வழமையான எறிகணைப் பரிமாற்றம்" என்றார்.
எனினும் "கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் நடைபெற்ற இந்த தாக்குதல் மிகவும் முக்கியமானது" என்று தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத பாதுகாப்புத்துறை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். "பலாலித் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் வான் தாக்குதலை நடத்தியிருந்தனர். ஆனால் எறிகணைத் தாக்குதல்களை நீண்டகாலம் நடத்தவில்லை. எனவே தற்போதைய தாக்குதல் முக்கியமானது அதனை நாம் குறைத்து மதிப்பிட முடியாது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே நேற்று நடைபெற்ற எறிகணைத் தாக்குதல் தரையில் இருந்து நடத்தப்படவில்லை எனவும் அது கடலில் இருந்து நடத்தப்பட்டதாகவும் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கண்காணிப்புக்குழு மேலும் தெரிவித்துள்ளதாவது: பலாலிப் படைத்தளம் மீதான நேற்றைய எறிகணைத் தாக்குதலைத் தொடர்ந்து யாழ். குடாநாட்டில் அதிக பதற்றம் நிலவுகின்றது. அங்கு செல்லிடப்பேசி இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து பூநகரிப் பகுதியை நோக்கி இராணுவம் எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தியதுடன், வான் தாக்குதல்களையும் நடத்தியது என்று கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது
Puthinam